அரசுப் பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பயணம் மேற்கொள்வதாக கூறி இழிவு படுத்துவதா? – தாய்மார்களை அவமதிப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் திமுகவுக்கு ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே மலைக்கிராமம் ஒன்றில் சமுதாயக் கூடத்தை திறக்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.மகாராஜன் அவர்கள், அப்பகுதி பெண்கள் அனைவரும் ஓசி பேருந்தில் பயணியுங்கள் என கிண்டலாக பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தாய்மார்களை ஓசி பேருந்தில் பயணிப்பதாக நக்கலடித்து சிரித்த அமைச்சர் ஒருவர் தன் பதவியை இழந்த நிலையிலும், மகளிர் மீதான அக்கட்சியினரின் எண்ணம் துளியளவும் குறையவில்லை என்பதையே ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜன் அவர்களின் இன்றைய பேச்சு வெளிப்படுத்துகிறது. மகளிர் உரிமைத் தொகை எனும் பெயரில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு மறைமுகமாக பல ஆயிரம் ரூபாயை வசூல் செய்வதையும், பேருந்தில் இலவச பயணம் என அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுகவினரின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, நலத்திட்டங்கள் எனும் பெயரில் தமிழகத்தின் தாய்மார்களை இழிவுபடுத்துவதையும், அவர்களை அவமானப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுகவிற்கும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதி படுகொலை – மேற்கு மண்டலத்தை கொலைக்களமாக மாற்றி வரும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளக்கோவில் சேனாதிபாளையம் அருகே ஆடு மேயக்கச் சென்ற வயதான தம்பதி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேற்கு மாவட்டங்களில் தோட்டத்தில் தனியாக வசிக்கும் முதியவர்கள் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதி கல்லால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைக்கவோ, குற்றச்சம்பவங்களை குறைக்கவோ துளியளவும் கவனம் செலுத்தாத திமுக அரசால் தமிழகத்தில் வசிக்கும் முதியவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.எனவே, வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கை விரிவாக விசாரித்து தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதோடு, இனியாவது விளம்பர மோகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சட்டம் ஒழுங்கை சீரமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

நாமக்கல் அருகே தோட்டத்து இல்லத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அடித்துக் கொலை – காவல்துறையை செயலற்ற நிலையில் வைத்திருக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த குளத்துப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து இல்லத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் என மேற்கு மாவட்டங்களில் தோட்டத்து இல்லங்களில் வசிக்கும் வயதான முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவதும், அவரவர் இல்லங்களில் இருக்கும் நகை, பணம் திருட்டு போவதும் தொடர்கதையாகி வருவது காவல்துறையின் செயலற்ற திறனையும், அலட்சியப் போக்கையுமே வெளிப்படுத்துகிறது.திருப்பூர் மற்றும் ஈரோடு கொலை வழக்கில் தொடர்புடையதாக கைதானவர்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற கொலை, கொள்ளைகளை தாங்களே அரங்கேற்றியதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில், ஏற்கனவே குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் யார்?, விசாரணை அதிகாரி திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கே இன்னமும் விடை கிடைக்காத நிலையில், தற்போது மீண்டும் அதே பாணியில் நாமக்கல் அருகே அரங்கேறியிருக்கும் சம்பவம், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் உண்மைக் குற்றவாளிகள் தானா? ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் இச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.எனவே, மூதாட்டி கொலை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு இதுபோன்ற திட்டமிட்ட குற்றச்சம்பவங்கள் நிகழாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை தாம்பரம் அருகே அரசு சேவை இல்லத்தில் தங்கி பயின்ற மாணவிக்கு பாலியல் தொல்லை – பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறதா தமிழகம்? சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தில் தங்கி 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் காவலாளியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக அரசால், அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் மாணவி ஒருவரே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அளவிற்கான அசாதாரண சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது. தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தின் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலாளியே, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பது, அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கான தண்டனையை கடுமையாக்கி சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது திமுக அரசின் மீதும் அதன் காவல்துறை மீதும் குற்றவாளிகளுக்கு சிறிதளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, அரசு சேவை இல்லத்தில் மாணவியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.