May 29, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நியமிக்கும் தனியார் மயமாக்கல் முடிவை எதிர்த்து, மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் திடீர் வேலை நிறுத்தத்தினால் மக்கள் துயருற்றிருப்பது வேதனையளிக்கிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் மூலம், நாளை முதல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக வரும் செய்திகளே, இந்த முன்னறிவிப்பு இல்லாத வேலைநிறுத்தத்திற்கு முக்கியக் காரணம். இந்த அறிவிப்பு எழுந்தவுடனேயே, ஆளும் கட்சியின் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அதனையெல்லாம் கருத்திற்கொள்ளாமல் தனியார் மயமாக்குதலை தீவிரப்படுத்திய அரசின் நடவடிக்கைகளாலேயே மக்கள் இன்று அவதிக்குள்ளாகியுள்ளனர். தனியார் மயமாக்கல் குறித்து பிரச்னை எழும்போதெல்லாம் தொழிற்சங்கங்களுடன் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்று அடிக்கடி சொல்லிவரும் போக்குவரத்துத் துறை அமைச்சர், இன்றுவரை எந்தவொரு தீர்க்கமான முடிவை எடுக்காததன் காரணம் என்ன? மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, உடனே இந்த பிரச்னையில் முதலமைச்சர் தலையிட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேசி இணக்கமான முடிவை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
May 27, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரையில் ரூ.5.25 லட்சம் செலுத்தி வீட்டு மனை பட்டா வாங்கிய 38 பத்திரிகையாளர்களின் பட்டாவை மதுரை முன்னாள் ஆட்சியர் முன்தேதியிட்டு ரத்து செய்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. மதுரையை சேர்ந்த பத்திரிகையாளர்கள் தங்களுக்கு வீட்டு மனை கேட்டு கடந்த 2008ஆம் ஆண்டு தமிழக அரசுக்கு மனு கொடுத்ததில் கடந்த 2019ஆம் ஆண்டு வீட்டு மனை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 86 பத்திரிகையாளர்கள் தலா ரூ.5,25,816 செலுத்தி வீட்டு மனை பட்டா பெற்றனர். அதே நேரத்தில் இலவச வீட்டு மனை திட்டத்துக்கான நிபந்தனையைப் போல வீட்டு மனை பெறுவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் எந்தவித சொத்துகளும், 50 கி.மீ சுற்றளவில் இருக்கக் கூடாது என நிபந்தனையும் கடந்த பழனிசாமி ஆட்சியில் விதிக்கப்பட்டதால் பத்திரிகையாளர்களால் தாங்கள் வாங்கிய மனையில் வீடு கட்ட இயலவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கடந்த 2021ஆம் ஆண்டு முதலமைச்சரை சந்தித்த பத்திரிகையாளர்கள் இந்த நிபந்தனையை ரத்து செய்யும்படி முறையிட்டனர். அதனை பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்த நிலையில் 38 பத்திரிகையாளர்களின் பட்டாக்களை முன்னாள் ஆட்சியர் அனீஷ் சேகர் தனது பணிமாறுதல் ஆணைக்கு முன் தேதியிட்டு ரத்து செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனே தலையிட்டு பத்திரிகையாளர்களுக்கான வீட்டு மனை திட்டத்தில் உள்ள நிபந்தனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், ரத்து செய்யப்பட்ட வீட்டு மனை பட்டாக்களை மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
May 27, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் கனவு கல்லூரியான சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இளநிலை மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்துள்ளதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதனால், சுமார் 500 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் கேள்விக்குறியாகி உள்ளது. பயோ மெட்ரிக் மாணவர் வருகைப்பதிவேடு, சிசிடிவி கேமரா ஆகியவற்றில் உள்ள விதிமீறல்களைச் சுட்டிக்காட்டியதோடு, அதற்கு தமிழ்நாடு மருத்துவ இயக்குநரகம் சார்பில் அளிக்கப்பட்ட பதில் திருப்தி இல்லாததால் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் இக்கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாட்களில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், சிறிய குறைகளைக் கூட சரி செய்ய முடியாத அளவுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை அலட்சியமாக செயல்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இச்சூழலில், மாணவர்களின் நலன் கருதி முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு குறைகளை உடனடியாக சரிசெய்வதுடன் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்திடம் உரிய முறையீடு செய்து, மீண்டும் அங்கீகாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
May 25, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 துருக்கி இஸ்தான்புல் நகரில் நடந்த சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னை தாம்பரம் முடிச்சூரை சேர்ந்த 14 வயது சிறுவன் பரத் விஷ்ணு தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. 42 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் பரத் விஷ்ணு அனைத்து சுற்றுகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பது தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமையாகும். தங்கப்பதக்கம் வென்ற பரத் விஷ்ணு, அவரது பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருக்கு இந்த தருணத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் அவர் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகின்றேன்.
May 24, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கழகத்தின் செயற்குழு கூட்டம்: வருகின்ற ஜூன் 7ஆம் தேதி சென்னை, தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது.
May 24, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
May 24, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 எளிய மக்களுக்கான இதழியல் என்ற கருத்தாக்கத்தில் தமிழர்களுக்காக தினத்தந்தி நாளிதழைத் தொடங்கி அதில் வெற்றிகண்ட மாமனிதர்; தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம் இன்று. புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்து, தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தமிழ் இதழியல் உலகில் நீங்கா இடம் பிடித்து முடிசூடா மன்னராகத் திகழ்ந்த சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்.
May 23, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதய விழா; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
May 23, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று முறை போராட்டம் நடத்தியும் தங்களை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவதாக வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கம்போல அதை மறந்து விட்டு ஆசிரியர் சமுதாயத்தை பல வகைகளில் வஞ்சித்து வருவதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கின்றது. எனவே, பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.
May 23, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிறந்த கல்வியாளரும், ஆன்மீகவாதியும், பாரம்பரியமிக்க மதுரை தியாகராஜர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான திரு.கருமுத்து கண்ணன் மறைந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. மறைந்த மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்களின் அன்பைப் பெற்ற திரு.கருமுத்து கண்ணன் அவர்கள் அறநிலையத்துறை உள்ளிட்ட அரசின் துறைகளில் கவுரவப்பதவிகளை வகித்ததோடு, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவராக திகழ்ந்தார். திரு.கருமுத்து கண்ணன் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.