சமீபத்திய செய்தி

டிடிவி தினகரன்

டிடிவி (திருத்துறைப்பூண்டி திருவேங்கடம் விவேகானந்தம்) தினகரன் தமிழக மக்களின் இதயம் கவர்ந்த தலைவர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பழைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் (தற்போது திருவாரூர் மாவட்டம்) திருத்துறைப்பூண்டியில் 13.12.1963 அன்று பிறந்தவர். அரசு அதிகாரியான திரு.டி.விவேகானந்தம் – திருமதி.வனிதாமணி தம்பதியின் 4 குழந்தைகளில் மூத்த மகன். சிறு வயதில் தமது தாய் வழி தாத்தா வீட்டில் சித்தியோடும், தாய் மாமன்களுடன் சேர்ந்து சில ஆண்டுகள் வளர்ந்தார். தந்தை பணி மாறுதலில் சென்ற ஊர்களில் தொடக்க கல்வியைக் கற்ற தினகரன், மன்னார்குடி ஃபின்லே(FINDLAY) உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்றார். ஒரு மாணவராக வகுப்பின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தாலும் எப்போதும் படிப்பில் முதன்மை பெறுபவராக திகழ்ந்தார். இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்ட தினகரன், ஏராளமான நண்பர்களையும் பெற்றிருந்தவர் என்பது வியப்பானது.
கிரிக்கெட், சதுரங்கம், கேரம் ஆகிய விளையாட்டுகளில் ஆர்வத்தோடு திகழ்ந்த அவர், திரைப்படங்கள், இசை, இலக்கியம், அரசியல் மற்றும் ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். நண்பர் ஒருவர் மூலமாக தினகரனுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட உலகப் புகழ் பெற்ற தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் எழுத்துகள் அவருக்குள் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சின. ‘ஜே.கே’வின் புத்தகங்கள் டிடிவிக்கு வாழ்க்கையை அணுகும் ஞானத்தின் வாசல்களைத் திறந்தன. பள்ளிக்கல்வியை முடித்தவுடன் ஸ்ரீபூண்டி புஷ்பம் கல்லூரியில் விலங்கியல் படிப்பில் சேர்ந்த டிடிவி, அதனைத் தொடராமல், கர்நாடக மாநிலம், சிக்மகளூரில் உள்ள ஆதிசுன்சானகிரி இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜி (ADICHUNCHANAGIRI INSTITUTE OF TECHNOLOGY) கல்லூரியில் கட்டவியல் பொறியியல் (Civil Engineering) பயின்றார்.

அது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், புரட்சித்தலைவி அம்மா அவர்களை அரசியலுக்கு கொண்டுவந்த காலக்கட்டம். கல்லூரி விடுமுறை காலங்களில் சென்னை வந்த டிடிவி, தமது சித்தி திருமதி.வி.கே.சசிகலா மூலம் அம்மா அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். எளிமையானவராகவும், மனதில் சரியென பட்ட கருத்துகளைப் பளிச்சென முன்வைப்பவராகவும் இருந்ததால், குறுகிய காலத்திலேயே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நம்பிக்கைக்குரியவரானார் டிடிவி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1987ல் மறைந்த பிறகு, நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்குப் பக்கபலமாக இருந்த திருமதி.சசிகலா குடும்பத்தவர்களில் தினகரன் முக்கியமானவர். 1989 மீண்டும் ஒருங்கிணைந்த அ.தி.மு.கவை உருவாக்கியதால் இவர்களது பங்களிப்பு முதன்மையானது.

அரசியல் ரீதியான எதிரிகளினால் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த போது, அவரது சுற்றுப்பயணங்களில் நம்பிக்கைக்குரியவர்கள் உடன் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்காக பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டு அம்மா அவர்களுக்கு பாதுகாப்பாக தமிழகம் முழுக்க பயணித்தார் தினகரன். 1991 தேர்தலில் வென்று அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அம்மா அளித்த அரசியல் பணிகளைக் கவனித்தபடியே தனது சொந்த தொழில்களைத் தொடங்கி நடத்தினார்.

டெல்லியிலும் தமிழக அரசியல் களத்திலும் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், தினகரனை அரசியல் சுழலுக்குள் இழுத்துவிட்டன. அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கும் ஏற்பட்ட அரசியல் மோதலால், மத்திய அரசின் அமலாக்கத்துறையின் மூலம் பழிவாங்கும் படலம் அரங்கேறியது. அம்மாவின் நம்பிக்கைக்குரிய வட்டத்தில் இருந்த டிடிவி தினகரன் குறிவைக்கப்பட்டார். 1995 நவம்பர் மாதம் ஃபெரா(FERA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தினகரன், ஓர் ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டார். அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக அன்று சிறைக்கு அனுப்பட்ட தினகரன், இன்றுவரை அதற்கான சட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறார். இளம் வயதிலேயே அரசியல் சதியால் பாதிக்கப்பட்ட தினகரன் மீது ஏற்பட்ட அன்பினால், அவரை அம்மா அவர்கள் தேர்தல் அரசியலுக்குக் கொண்டு வந்தார்கள். 1999 நாடாளுமன்றத்தேர்தலில் பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எம்.பி.ஆனார் டிடிவி.
இடைவிடாத மக்கள் பணி, எளிமை போன்றவற்றால் மிக விரைவில் மக்களின் மனங்களை வென்று ‘மக்கள் செல்வர்’ என்ற அடையாளத்தோடு அழைக்கப்பட்டார்.மருத்துவமனைகள், சாலைகள், பாலங்கள், விளையாட்டு அரங்கங்கள், சமுதாய நலக்கூடங்கள் என பெரியகுளம் தொகுதியில் தினகரன் மேற்கொண்ட நலத்திட்டங்களை இப்போதும் மக்கள் நன்றியோடு நினைவு கூர்கின்றனர். அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக வீசிய கடுமையான அலையால், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. குறைவான வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார் தினகரன். இருப்பினும் அவர் உடனடியாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக புரட்சித்தலைவி அம்மா அவர்களால் நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு வரை அப்பதவியில் அவர் நீடித்தார்.
தினகரனின் அரசியல் சாதுர்யம், கட்சி கட்டமைப்புத்திறன், களப்பணி, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இயல்பாக பழகுதல் உள்ளிட்டவற்றால் கட்சியில் அடுத்தடுத்த உயர்வுகள் தேடி வந்தன. கட்சியின் பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அம்மா அவர்கள் அவருக்கு வழங்கினார். முன்மாதிரியான பணிகளின் மூலம் தொண்டர்களின் இதயங்களை வென்று கட்சியில் தினகரன் மேலே வந்தாலும் அவரது வட்டத்திற்குள்ளும் வெளியிலும் எதிரிகளை உருவாக்கியது. அவர்கள், தினகரனின் அரசியல் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த நினைத்தனர். அவரைப் பற்றி தவறான புகார்களையும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளையும் மெல்ல பரப்பத் தொடங்கினார்கள்.

தினகரன் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக அம்மாவின் வழக்கறிஞருக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சதித்திட்டத்தின் இறுதிக்கட்டமாக அமைந்துவிட்டது. இதன் விளைவாக, 2007 ஆம் ஆண்டு, தாம் கூறும் வரை அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு அம்மா அவர்களால் அறிவுறுத்தப்பட்டார் தினகரன். இருந்தபோதும் அவரது மனைவி திருமதி.அனுராதா, ஜெயா டி.வியின் ஆலோசகராக 2011 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார்.

விசுவாசமிக்க தளபதியாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி, தமது தொழில்களைக் கவனித்தார் டிடிவி. ஆன்மீகத்திலும் புத்தக வாசிப்பிலும் நேரத்தைச் செலவழித்தார். அவை அவரது ஆளுமையை இன்னும் செறிவாக்கின.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்து வந்த அம்மா அவர்கள் திடீர் மாரடைப்பினால் 5.12.2016 அன்று காலமான நெருக்கடியான நேரத்தில் டிடிவியின் அரசியல் ஓய்வுக்காலம் முடிவுக்கு வந்தது.

தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் தொடர் வேண்டுகோளுக்குப் பிறகு அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராகவும், சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் திருமதி.சசிகலா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தமக்கு உதவுவதற்காக அரசியல் அனுபவம் வாய்ந்த டிடிவி தினகரனை தேர்வு செய்தார்.

பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.சசிகலா முதலமைச்சராவது தடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு திடீரென தூசு தட்டப்பட்டு அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் தண்டனை அளிக்கப்பட்டது.

பெங்களூரு சிறைக்குச் செல்லும் முன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனையும், தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியையும் கொண்டு வந்தார் திருமதி.சசிகலா. அம்மா அவர்களின் மரணத்தை வைத்து கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத சக்திகள் அவதூறுகளை அள்ளிவீசி, பழிசுமத்தும் படலத்தை அரங்கேற்றிய மிக சோதனையான காலக்கட்டத்தில் அவற்றை எதிர்கொள்ளும் பொறுப்பு டிடிவியிடம் வந்தது. கட்சிக்கு பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் அம்மா அவர்கள் எம்.எல்.ஏவாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வடிவில் டிடிவிக்கு முதல் அமிலப்பரிசோதனை காத்திருந்தது. தமக்கு எதிராக மிகப்பெருமளவில் நிகழ்த்தப்பட்ட எதிர்மறை பிரச்சாரங்களை, ஓர் உண்மையான போர்வீரனாக நேரடியாக எதிர்கொள்ள முடிவு செய்த டிடிவி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கினார். அவரது துணிச்சலான முடிவு பலரின் புருவங்களை உயரச் செய்தது.

அந்த நேரத்தில் திடீரென ‘இரட்டை இலை’ சின்னத்தை முடக்கிய இந்திய தேர்தல் ஆணையம், டிடிவிக்கு ‘தொப்பி’ சின்னத்தை ஒதுக்கியது. இன்னொரு பக்கம், வருமான வரி சோதனை என்ற பெயரில் மிகப்பெரிய ‘ரெய்டு’கள் நடத்தப்பட்டன. இத்தகை சூழலில் தமது தனித்துவமான பிரச்சார உத்திகளால் தேர்தல் களத்தில் டிடிவி தினகரன் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த நேரத்தில், இடைத்தேர்தலையே ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

இதைத்தொடர்ந்து வெளியில் இருந்து சில சக்திகள் கொடுத்த அழுத்தத்தினால் திருமதி.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு உடனிருந்தோரே துரோகம் இழைத்தனர்.

டெல்லி போலீசார் திடீரென தினகரனை கைது செய்தனர். தேர்தல் ஆணையத்தின் அடையாளம் தெரியாத அதிகாரி ஒருவருக்கு இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நாட்டின் வரலாற்றிலேயே இப்படி ஒரு நூதன வழக்கு போடப்பட்டது அப்போதுதான் என்று சட்ட வல்லுனர்கள் கூறினார்கள். தமிழகம் முழுக்க டிடிவியை விடுதலை செய்யக்கோரி தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்தன.

40 நாட்களுக்குப் பிறகு பிணை வழங்கப்பட்டு, டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியில் வந்த தினகரனுக்கு சென்னை விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். அந்தக் கணத்தில்தான் இயக்கத்தைத் தாண்டியும் இலட்சக்கணக்கானோரின் உள்ளம் கவர் தலைவராக டிடிவி தினகரன் உருவெடுத்தார். டிடிவியை அம்மாவின் இயக்கத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு, திடீரென இரட்டை இலை சின்னத்தை மற்றவர்களிடம் கொடுத்தது தேர்தல் ஆணையம். அடுத்த நாளே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையும் அறிவித்தார்கள். அம்மா அவர்களின் இயக்கத்தைக் காப்பாற்றவும், இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டும் மக்களிடம் செல்ல வேண்டும் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் டிடிவியை வலியுறுத்தினார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் களமிறங்கினார். ஆனால், கடந்த முறை அவருக்கு வழங்கிய தொப்பி சின்னத்தை திரும்பவும் தர மறுத்துவிட்டார்கள். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என ‘பிரஷர் குக்கர்’ சின்னத்துடன் சுயேச்சையாக போட்டியிட்டார். எதிரிகளின் ‘பிளட் பிரஷர்’ எகிறியது.
சக்திமிக்க இரட்டை இலை சின்னம், ஆளுங்கட்சி எந்திரம், வாரியிறைக்கப்பட்ட பணம், இன்னொரு பக்கத்தில் அரசியல் பலமிக்க எதிர்க்கட்சியான தி.மு.க ஆகியவற்றை எல்லாம் எதிர்கொண்டு தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் 2018 ஆம் ஆண்டு புதிய சரித்திரம் படைத்தார் டிடிவி. ஆம்.. தமிழக இடைத்தேர்தல் களத்தில் இரு பெரும் கட்சிகளை வீழ்த்தி முதன்முறை சுயேச்சையாக வென்றவர் டிடிவி மட்டுமே! பதிவானதில் 50.32% வாக்குகளைப் பெற்று 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடி, தி.மு.க உள்ளிட்ட அத்தனை எதிர்க்கட்சிகளையும் டெபாசிட் இழக்கச் செய்தார் தினகரன். டிடிவியின் அமைதியான மற்றும் தன்னம்பிக்கை மிகுந்த செயல்பாடுகள், சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ளும் விதம், புத்திசாலித்தனத்தோடும், நகைச்சுவை உணர்வோடும் அதே நேரத்தில் விரைவாகவும் பதிலளித்து ஊடகங்களைக் கையாளும் அவரது பாணி ஆகியவை எல்லாத் தரப்பு மக்களிடமும், குறிப்பாக இளைஞர்களின் இதயத்தில் குறுகிய காலத்தில் டிடிவிக்கு தனி இடத்தைப் பெற்று தந்தன.
அம்மா அவர்களின் இயக்கத்தை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து, ஜனநாயக ரீதியில் அதனை வென்றெடுக்கும் எண்ணத்தின் வெளிப்பாடே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உதயம்! புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளை இதயத்தில் ஏந்தி நின்ற லட்சோப லட்சம் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன், அம்மா அவர்களின் திருப்பெயரில், அம்மா அவர்களின் திரு உருவத்தைக் கொடியில் தாங்கிய இயக்கத்தை 15.03.2018 அன்று மதுரை, மேலூரில் தொடங்கினார் டிடிவி. ஒரு தலைவர் பிறக்கிறார்; உருவாக்கப்படுவதில்லை என்பார்கள். ஆம்..தமக்குள்ளேயே சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்ட டிடிவி தினகரன், அடுத்த தேர்தலைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல், அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் தலைவராக தமிழ்நாட்டு இளைஞர்களால் பார்க்கப்படுகிறார்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2022 AMMK. All Rights Reserved.