சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்பு – தீயணைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவசிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும்.சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து மும்பைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சரக்கு ரயிலில் ஏற்பட்டிருக்கும் தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகை திருவள்ளூர் ரயில் நிலையத்தைச் சுற்றிய 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட ரயில் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதோடு, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், திருவோணம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புதல்வன் திரு.லட்சுமணன் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற தேசிய பாரா கை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கடின பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கும் திரு.லட்சுமணன் அவர்களின் சாதனைப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

அரசுப்பள்ளி மாணவர்களை மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் அமர்ந்து படிக்க வைப்பது தான் திராவிட மாடல் அரசின் பெருமையா? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிக்கும் காணொளி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசுப்பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, வகுப்பறைகள் பற்றாக்குறை போன்ற அடிப்படை வசதியின்மை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் அரசுப்பள்ளிகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதாக புகார் எழுந்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் அமர்ந்து கல்வி பயில்வதை பார்க்கும் போது ஆண்டுதோறும் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி எங்கே செல்கிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது. அடிப்படை வசதிகள் தொடங்கி ஆசிரியர்கள் பற்றாக்குறை வரை அரசுப்பள்ளிகளில் நிலவும் அவல நிலையில் மாணவர்கள் ஒருபுறம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என பள்ளிக்கல்வித்துறை விளம்பரம் செய்து கொண்டிருப்பது வெட்கக்கேடானது. எனவே, இனியாவது விளம்பர மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அரசுப்பள்ளிகளின் உண்மை நிலையை அறிந்து, ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராடிய பகுதிநேர ஆசிரியர் வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் மரணம் – குடும்பத் தலைவரை இழந்து நிர்கதியில் நிற்கும் ஆசிரியரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியது திமுக அரசின் கடமை. பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும் வழியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.பார்த்தசாரதி அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. சாலை விபத்தில் மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர் திரு.பார்த்தசாரதி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ஆசிரியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் போனஸ், ஊக்கத்தொகை, மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட எந்தவித சலுகையுமின்றி பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் அதனை நிறைவேற்ற தொடர்ந்து மறுத்துவருவது கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்கல்வி, தையல், கணினி அறிவியல் என பல்வேறு பாடங்களை கற்பித்து மாணவர்களின் தரத்தை உயர்த்தும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால், தொடர் போராட்டங்களையும், ஆசிரியர் ஒருவரின் உயிரிழப்பையும் தவிர்த்திருக்கலாம் என சக ஆசிரியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், பணி நிரந்தரம் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்க்காத காரணத்தினால், தற்போது உயிரிழந்த ஆசிரியர் திரு பார்த்தசாரதி அவர்களின் மறைவுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணமும், பணப்பலன்களும் இன்றி அவரது குடும்பம் நிர்கதியில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் திரு பார்த்தசாரதி அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சக ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை மனசாட்சியோடு அணுகி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினருக்கு மக்களைப் பற்றிய சிந்தனை வரும் – நான்காண்டு கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்.தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏழை, எளிய, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட நியாயவிலைக்கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கவோ, ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோன்ற திட்டங்களை அறிவிப்பது விளம்பரத்திற்காக உதவுமே தவிர மக்களுக்கு முழுமையான பயனை தராது. திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 236வது வாக்குறுதியான பல துறைகளின் கீழ் உள்ள நியாய விலைக்கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும், 239வது வாக்குறுதியான மானிய விலையில் மூன்று LED பல்புகள் விநியோகம் செய்யப்படும், 240 வது வாக்குறுதியான சர்க்கரையின் அளவு உயர்த்தப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் போன்றவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் தற்போது வீடுவீடாக ரேசன் பொருட்கள் விநியோகம் என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் தலைப்பில் ஊர் ஊராக பெட்டி வைத்து பெறப்பட்ட லட்சக்கணக்கான மனுக்களின் நிலை என்னவென்றே தெரியாத நிலையில், தற்போது அடுத்த தேர்தலை மையமாக வைத்து ”உங்களுடன் ஸ்டாலின்” எனும் பெயரில் பெறப்படும் மனுக்களுக்கு மட்டும் எப்படி தீர்வு கிடைக்கும் ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, இனியும் நாள்தோறும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதையும், அதற்கென பலகோடி ரூபாய் செலவு செய்து மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதையும் நிறுத்திவிட்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – அரசுக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பல்லாயிரக்கணக்கான பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 60 சதவிகிதம் பேராசிரியர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், தற்போது பணியில் இருக்கும் பேராசிரியர்களையும் மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் வகையில் தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை கடும் கண்டனத்திற்குரியது.பாடப்புத்தகங்களை தயாரித்து விநியோகிப்பது, விடைத்தாள் திருத்துவது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுவது என பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பேராசியர்களை இடமாற்றம் செய்வது, அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை பாதிப்பதோடு, வரும் காலங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து பல்கலைக்கழகத்தின் அங்கீகாரமும் ரத்தாக வாய்ப்பிருப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் தொடங்கி பேராசிரியர்கள் வரை நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, காலியாக இருக்கும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் பூரண உடல்நலத்துடன் விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். கேட் கீப்பரின் கவனக்குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்திருக்கும் புகார் மீது கூடுதல் கவனம் செலுத்தி இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறையை வலியுறுத்துகிறேன்.

தலைமைக் கழக செய்தி வெளியீடு : ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மற்றும் சமூக விடுதலைக்காக எவ்வித சமரசமுமின்றி தன் வாழ்நாள் முழுவதும் போராடிய மகத்தான தலைவர் திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

திமுக அரசின் அலட்சியப்போக்கால் நடப்பாண்டில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்திருக்கும் மா விவசாயிகள் – பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை வழங்குவதோடு மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை திமுக அரசு நிர்ணயிக்க வேண்டும்.தமிழகத்தில் மாங்காய் உற்பத்திக்கு நடப்பாண்டில் நியாயமான விலை கிடைக்காததாலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிவடைந்துவிட்டதாக ஒதுங்கிக் கொண்ட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களாலும் நடப்பாண்டில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டை சந்தித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் தமிழகம் திரும்பிய பின்னரும் மா பிரச்னைக்கு தீர்வு காணப்படாதது விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து அம்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகை அறிவித்திருக்கும் நிலையில், திமுக அரசும், அதன் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் மா உற்பத்தியை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆயிரக்கணக்கான மா விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.பருவநிலை மாற்றம், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல், விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நடைபெற்று வரும் மா விவசாயத்தை பாதுகாக்கவோ, உரிய இழப்பீடு வழங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கால் நடப்பாண்டில் மட்டும் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை பின்பற்றி தமிழகத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக அறிவிப்பதோடு, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை போல மாம்பழங்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.