டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவருமான திரு.ரத்தன் டாடா அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தியாவை மையமாக கொண்டு தொடங்கப்பட்ட டாடா நிறுவனத்தை தன் தொலைநோக்கு சிந்தனையால் உலகளாவிய வணிகமாக மாற்றிய திரு.ரத்தன் டாடா அவர்களின் மறைவு இந்திய தொழில்துறைக்கு பேரிழப்பாகும். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நேர்மையை கடைபிடிப்பதில் உறுதியாக இருந்த திரு.ரத்தன் டாடா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பள்ளிகளுக்கு அருகே இயங்கும் மதுபானக்கடையை அகற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கைது – மக்கள் நலனுக்காக ஜனநாயக ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுத்து அடக்குமுறையை கையாண்ட காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. திருச்சி மாவட்டம் சீனிவாசா நகரில் பள்ளிகளுக்கு அருகாமையில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி பொதுமக்களுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.செந்தில்நாதன் அவர்கள் உட்பட 50க்கும் அதிகமானோர் காவல்துறையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே உறையூர் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட தனியார் மனமகிழ் மன்றத்தை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போதும் கைது செய்த காவல்துறை, தற்போது பொதுமக்களின் நலனுக்கான உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி மறுத்து அடக்குமுறையை கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வரும் போதெல்லாம் அடக்குமுறையும், அதிகாரப்போக்கும் அதிகரிக்கும் என்பதற்கு ஏற்ப, அரசின் தவறுகளையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதும், பொதுமக்களின் நலனை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கும் அனுமதி மறுப்பதும் திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் இடத்திற்கு அருகே பள்ளிகள் இருப்பதை காரணமாக கூறி அனுமதி மறுத்திருக்கும் காவல்துறை, அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுபானக்கடையை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தேர்வான தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு உதவித் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது – உரிய நேரத்தில் உதவித் தொகையை வழங்கி விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும். தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் (SGFI) சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை தற்போதுவரை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப் போக்கால் தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க இயலாமல் போன நிலையில், நடப்பாண்டிலும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும், வீரர் வீராங்கனைகளுக்கான உதவித் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், தற்போது வரை ஊக்கத் தொகை வழங்கப்படாத காரணத்தினால், போக்குவரத்து, உணவு என அனைத்துவிதமான செலவுகளுக்கும் மாணவர்களிடமே தொகையை வசூலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தினை நடத்துவதற்கும், விளம்பரத்திற்காக வீண் செலவு செய்வதற்கும் நிதி ஒதுக்கும் திமுக அரசு, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்படும் தொகையை கூட உரிய நேரத்தில் வழங்க மறுப்பது ஏன்? என உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் தேசிய அளவிலான போட்டிகளில் தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்வையிடச் சென்றவர்களில் 5 பேர் உயிரிழப்பு – குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் லட்சக்கணக்கான பொதுமக்களை இன்னல்களுக்குள்ளாக்கிய தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற பார்வையாளர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன. விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் வருவார்கள் என முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளையோ, நிகழ்ச்சி நிறைவடைந்து திரும்பிச் செல்வதற்கான போதிய போக்குவரத்து வசதிகளையோ செய்து தராத தமிழக அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே 5 பேரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்திற்கும் பவளவிழா மாநாட்டை நடத்துவதற்கும் அதீத கவனம் செலுத்தி முன்னேற்பாடுகளை முடுக்கிவிடும் திமுக அரசு, லட்சக்கணக்கானோர் கூடிய மெரினா கடற்கரையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது மக்கள் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது. எனவே, நீர்ச்சத்து குறைபாடு, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்குவதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் உயர்நிலைக்குழு தலைவரும், கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.O.R ராமச்சந்திரன் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.O.R ராமச்சந்திரன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.