அடிமை வாழ்க்கையை அறவே வெறுத்து, நாட்டு மக்களின் நலமே தன் நலம் என முழங்கி ஆங்கிலேயப் பெரும்படைகளை பலமுறை புறமுதுகிட்டு ஓடச் செய்த மாமன்னரும், சுதந்திர போராட்ட வீரருமான மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் இன்று. இளம் வயதிலேயே தனது வீரத்தாலும், அசாத்திய திறமையாளும் ஆங்கிலேய ஆதிக்கத்தை அதிரச் செய்ததோடு, தன் இறுதி மூச்சுவரை நாட்டு விடுதலைக்காக போரிட்டு வீரமரணம் அடைந்த தீரன் சின்னமலை அவர்களின் வீரமும், துணிச்சலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தெளிவூட்டும் வரலாறாக என்றென்றும் நிலைத்து நிற்கும்.

திருப்பூர் மாநகராட்சி பள்ளி கழிவறைக்குள் ஒருமாத காலமாக தங்கவைக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள் – வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்தித் தராத திருப்பூர் மாநகராட்சியின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்குள், தனி அறை ஒன்றில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கி அங்கேயே உணவு சமைத்து உட்கொள்வது போன்று வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, தங்குவதற்கான இடத்தைக் கூட ஒதுக்காமல் கடந்த ஒரு மாத காலமாக மாநகராட்சி பள்ளி கழிவறையிலேயே தங்க வைத்திருந்தது முழுக்க முழுக்க மனிதநேயமற்ற செயலாகும். எனவே, பொதுக்கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தருவதோடு, இந்த விசயத்தில் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு : இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத மாவீரராக திகழ்ந்து, ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய மன்னர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் 03.08.2024 (சனிக்கிழமை) அன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலைக்கு அன்று காலை 10:00 மணியளவில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தவிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் தீரன் சின்னமலை அவர்களின் நினைவிடத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு காலை 11:00 மணியளவில் கழக துணைப்பொதுச்செயலாளரும், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளருமான, முன்னாள் அமைச்சர் திரு.C.சண்முகவேலு அவர்களது தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த இரு நிகழ்விற்கும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் வார்டு, வட்டம், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோவை மாநகராட்சி பள்ளி வகுப்பறையில் அமர்ந்து மது அருந்திய மாணவர்கள் – எதிர்கால இளைய சமுதாயம் தடம் மாறி தவறான பாதையில் பயணிப்பதை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. கோவை மாநகராட்சி பள்ளி ஒன்றில் பதினொன்றாம் பயிலும் மூன்று மாணவர்கள் உடற்கல்வி வகுப்பு நேரத்தில், வகுப்பறைக்குள் அமர்ந்து குளிர்பானத்தில் மதுவை கலந்து அருந்தியதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. புத்தகங்களும், பேனாக்களும் இருக்க வேண்டிய கைகளில் அண்மைக் காலமாக மதுபாட்டில்களும், போதைப் பொருட்களும் தாராளமாக புழங்குவதாக வரும் செய்திகளை பார்க்கும் போது இளைய தலைமுறையான பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை கட்டுப்படுத்தவோ, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வோ ஏற்படுத்தாதன் விளைவாக பள்ளி வகுப்பறைக்குள்ளே அமர்ந்து மாணவர்கள் மது அருந்தும் அளவிற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், சமுதாயத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசு நிர்வாகம், அதனை செய்யத் தவறியதால் சிறு வயதிலேயே மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி ஆசிரியர்களை கேலி செய்வதும், தாக்குதல் போன்ற அநாகரீகமான செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகின்றன. எனவே, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்களை, அதிலிருந்து மீட்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் இருக்கிறது என்பதை இனியாவது உணர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே இயங்கி வரும் மதுபானக்கடைகளை உடனடியாக அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மாயமான தமிழக மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு – இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்குவந்த இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் படகு கடலில் மூழ்கி 4 மீனவர்கள் மாயமான நிலையில், அதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்து கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் என இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்துவந்த இலங்கைக் கடற்படையினரின் அராஜகத்தை கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக, தற்போது மீன்பிடி படகுகள் மீது மோதி, தமிழக மீனவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் மாயமான தமிழக மீனவர்களை மீட்கும் பணியை விரைவுபடுத்துவதோடு, இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை களைய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு தனியார் நிறுவனத்தின் கார்பந்தயத்தை நடத்த தீவிர முனைப்பு காட்டுவது ஏன் ? – சென்னையின் மையப்பகுதியில் கார் பந்தயத்தை நடத்தி பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்குவது தான் திமுக அரசின் நோக்கமா ? சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த தனியார் நிறுவனத்தின் பார்முலா – 4 கார் பந்தயம், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் திமுகவினருக்கு தொடர்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, என ஒட்டுமொத்த தமிழக மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் திமுக அரசு, மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி கார்பந்தயம் நடத்த தீவிரம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது. தனியார் நிறுவனம் நடத்தும் கார் பந்தயத்திற்காக கடந்த ஆண்டே தமிழக அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட மக்களின் வரிப்பணமான 40 கோடி ரூபாய்க்கான செலவு விவரங்கள் இதுவரை வெளிவராத நிலையில், தற்போது விளம்பரதாரர்கள் எனும் பெயரில் கட்டாய நிதி வழங்கும் படி தொழிலதிபர்களையும், தொழில் நிறுவனங்களையும் திமுக அரசு கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் ஏற்படும் சிக்கல், பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம் என அடுத்தடுத்து நெருக்கடிகளால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வரும் நிலையில், ஒரு சிலரின் விருப்பத்திற்காகவும், லாபத்திற்காகவும் நடத்தப்படும் கார் இந்த பந்தயத்திற்காக கட்டாய நிதி வழங்குமாறு அழுத்தம் கொடுப்பது தொழில் நிறுவனங்களை முற்றிலுமாக முடக்கும் செயலாகும். கார் பந்தயங்களை நடத்துவதற்கென சென்னை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் பிரத்யேக மைதானம் இருக்கும் நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அண்ணாசாலை, துறைமுகம் என எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் சென்னையின் மத்தியப் பகுதி சாலைகளைச் சுற்றி கார்பந்தயம் நடத்தியே தீருவோம் என விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பிடிவாதம் காட்டுவது ஏன் ? எனவே, தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை சென்னை அல்லாத புறநகர் பகுதியில் மக்களுக்கு எந்தவித பாதிப்பையும், இடையூறுகளையும் ஏற்படுத்தாத வகையில் நடத்துவதோடு, பல கோடி ரூபாய் செலவில் நடைபெறும் இந்த கார் பந்தயத்தினால் தமிழக மக்களுக்கும் அரசுக்கும் கிடைக்கப் போகும் பயன் என்ன ? என்பதை விளக்கிடுமாறு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.