பழனி முருகன் கோயிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு – இந்து சமய அறநிலையத்துறை இயங்குகிறதா ? உறங்குகிறதா ? திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலைத் தொடர்ந்து பழனி முருகன் கோயிலிலும் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் முக்கியமான திருக்கோயில்களில், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைத்திருக்கும் இந்துசமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போதும் அதனை தடுப்பதற்கான வழிகளை ஆராயாமல், தட்டிக் கழிப்பதிலும், புதுப்புது காரணங்களை புனைவதிலுமே முழு கவனம் செலுத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் மெத்தனப்போக்கே இதுவரையிலான மூன்று உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என சக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருக்கோயில்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி, தன்னால் இயன்றதை பிறருக்கு தர்மம் செய்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை பின்பற்றி ஆன்மீக சிந்தனை, தொழுகை, ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நல்ல செயல்களுக்கு வழிவகுக்கும் வகையில் இஸ்லாமியப் பெருமக்களால் கடைபிடிக்கப்படும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாஅவர்களின் வழியில் செயல்படும்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்அவர்கள் தலைமையில் வரும் 26.03.2025, புதன் கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் உள்ள கழக சிறுபான்மையினர் நலப்பிரிவின் நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு/வட்ட, கிளைக் கழகம் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், இஸ்லாமிய சகோதரர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்கு பிறகு பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை வரவேற்று மகிழ்கிறோம். எட்டு நாட்களில் முடிவடைய வேண்டிய விண்வெளிப் பயணம் ஒன்பது மாதங்கள் நீடித்தாலும், புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு அத்தகைய நிலையிலும் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இருவரின் வியக்கத்தக்க பணிகள் பாராட்டுக்குரியது. அதிலும், குறிப்பாக விண்வெளியில் நீண்டகாலம் தங்கிய முதல் பெண் என்ற சாதனையை படைத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் விடா முயற்சியும், மன உறுதியும் விண்வெளி ஆராய்ச்சியில் சாதிக்க நினைக்கும் இளம் விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த பாடமாகவும் உந்து சக்தியாகவும் விளங்கும்.

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் படுகொலை – அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது ? நெல்லையில் அதிகாலை தொழுகை முடித்து விட்டு வீடு திரும்பிய ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் திரு.ஜாஹீர் உசேன் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பின் பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த திரு.ஜாஹீர் உசேன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக நடைபெறும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. குறிப்பாக சமூக நலன் சார்ந்து இயங்கி வருவோர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. சாதாரண பொதுமக்கள் தொடங்கி, அரசு ஊழியர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியிருப்பது மட்டுமே திமுக அரசின் நான்காண்டு கால சாதனை என தமிழக மக்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் திரு.ஜாஹீர் உசேன் படுகொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து தகுந்த தண்டனை பெற்றுத் தருவதோடு, இனியாவது அதளபாதாளத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் மருந்துகள் தட்டுப்பாடு – ஏழை, எளிய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் அறிவித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து அவசரகதியில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளை மலிவான விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை முடக்கிவிட்டு, முதல்வர் மருந்தகங்களை திறந்து அதனையும் பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது திமுக அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது. எனவே, இனியும் அவசரகதியிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் திட்டங்களை தொடங்குவதை நிறுத்திவிட்டு அம்மா மருந்தகங்கள் போன்ற மக்களின் மகத்தான ஆதரவு பெற்ற திட்டங்களை தொடர்ந்து நடத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.