கோவையில் இளம்பெண் கடத்தப்படுவது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் – தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.கோவை மாவட்டம் இருகூர் தீபம் நகர்;பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கி வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்வது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஆண்நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியின் அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே மீண்டும் ஒரு இளம்பெண் கடத்தப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் பெண்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. பிரதான சாலையில் நடந்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை அடியோடு கேள்விக்குறியாக்கியிருப்பதோடு, காவல்துறை என்று ஒன்று உள்ளதா ? என்ற கேள்வியைப் பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும் எழுப்பியுள்ளது. எனவே, இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகாரைத் தீவிரமாக விசாரித்து தொடர்புடையவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு,காவல்துறையின் ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

புதுக்கோட்டை அருகே உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு – பொதுமக்களின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் முடிவைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு நச்சு ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிலத்தடி நீர் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமல்லாது பொதுமக்களின் உயிருக்கும், உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலான உயிரி மருத்துவக் கழிவு ஆலையை அமைக்கும் தமிழக அரசின் முடிவு அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்பு, கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எனப் பொதுமக்களின் தொடர் எதிர்ப்பையும் மீறியும் மருத்துவக் கழிவு ஆலையை அமைக்க முயற்சிப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, பிசானத்தூர் பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் தீவிர பற்றாளரும் எனது நீண்டகால நண்பரும் ஒரு மூத்த சகோதரராக பல்வேறு கால சூழல்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஓய்வு பெற்ற அரசு கூடுதல் செயலாளரும் வழக்கறிஞருமான திரு.இசக்கி முத்து அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. திரு.இசக்கி முத்து அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கோவை விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி – கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், அவரது ஆண் நண்பர் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பெரும் அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகளைக் கடுமையாக்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும், இதுபோன்ற கொடூரச் செயல்கள் தொடர்வது, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அடியோடு இழக்கச் செய்திருக்கிறது. எனவே, அடையாளம் தெரியாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி மற்றும் அவரது நண்பருக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.