உசிலம்பட்டியில் மதுபானக்கடை அருகே காவலர் கல்லால் அடித்துக் கொலை – தமிழகத்தை கொலைக் களமாக மாற்றிவரும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் மதுபானக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக காவலர் திரு.முத்துக்குமார் அவர்கள் அடையாளம் தெரியாத சில நபர்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக பொதுவெளியில் நடமாட முடியும்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் நாள் தவறாமல் நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு எதாவது ஒரு காரணத்தையும் கட்டுக்கதைகளையும் அடுக்கி அதன் பின்னால் மறைந்து கொள்ளும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த படுகொலைக்கு என்ன கதை சொல்லப் போகிறார்? எனவே, ஒவ்வொரு கொலை, கொள்ளைச் சம்பவத்திற்கும் காரணம் தேடி நேரத்தை வீணடிக்காமல், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கூலி உயர்வு கோரி ஒரு வார காலத்திற்கும் மேலாக நீடிக்கும் விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தம் – தமிழக அரசு தலையிட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கூலி உயர்வு கோரியும், மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து ஒருவார காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் வேலைநிறுத்த போராட்டத்தால் பலநூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் அத்தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக இதுவரை நடைபெற்ற பத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் நிறைவடைந்திருக்கும் நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேறு வழியின்றி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக கூலிக்கு நெசவு தொழில் செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளித்துறையினர் அடங்கிய பேச்சுவார்த்தையை உடனடியாக ஏற்பாடு செய்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்றவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான சகோதரர் திரு.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.கருப்பசாமி பாண்டியன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் நிறுவனர் திரு.ஷிஹான் ஹிசைனி அவர்கள் சிகிச்சைப் பலனின்றி மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தில் வில்வித்தை சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் எண்ணற்ற விளையாட்டு வீரர்களை சாதனையாளர்களாக மாற்றிய திரு.ஷிஹான் ஹுசைனி அவர்களின் உறவினர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சென்னையில் இன்று ஒரே நாளில் ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் செயின்பறிப்பு சம்பவங்கள் – தலைநகர் சென்னையில் திட்டமிட்டு நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கத் தவறிய காவல்துறையும், திமுக அரசும் வெட்கித் தலைகுணிய வேண்டும். சென்னையில் இன்று ஒரே நாளில் வேளச்சேரி, திருவான்மியூர், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் அருகே 8 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற செயின்பறிப்பு சம்பவங்களை காவல்துறை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மீண்டும் அதே செயின்பறிப்பு சம்பங்கள் தொடர்ந்து அரங்கேற முக்கிய காரணமாக அமைந்துள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் நடைபெறும் இதுபோன்ற செயின்பறிப்பு சம்பவங்கள் ஒட்டுமொத்த காவல்துறையின் செயலற்ற நிர்வாகத்திறனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு பெண்கள் வீட்டை விட்டே வெளியே வர முடியாத அளவிற்கு அசாதாரண சூழலையும் உருவாக்கியுள்ளது. எனவே, செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.