மக்கள் விரோத திமுகவை ஆட்சியிலிருந்து அடியோடு அகற்றிடுவோம் ! துரோகக் குணம் கொண்ட சுயநலக் கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்டிடுவோம் ! இதயதெய்வம் அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைக்க நாம் அனைவரும் சபதமேற்றிடுவோம் !! டிசம்பர் 5ஆம் தேதி இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் நாம் அனைவரும் ஒன்று கூடி உறுதியேற்றிடுவோம். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு இரும்புப் பெண்மணியாக செயல்பட்ட நம் இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் நம் கழகத்தின் வெற்றி முத்திரையை பதித்திடுவோம்!

கனமழை காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு குடியிருப்புகளில் விழுந்ததில் சிக்கியிருந்த 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அதே நேரத்தில், இனி வரும் காலங்களில் இது போன்ற இயற்கை பேரிடர் சூழலில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திருச்சியில் பள்ளிகளுக்கு அருகே இயங்கும் மதுபானக்கடைகளை அகற்றக்கோரி நடைபெறும் கழகத்தினரின் போராட்டத்திற்கு அனுமதி – மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் திமுக அரசுக்கு நீதிமன்றம் கொடுத்திருக்கும் சவுக்கடி. திருச்சி மாவட்டம் சீனிவாசா நகர் மற்றும் உறையூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அனுமதியோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில், உறையூர் குறத் தெருவில் மக்கள் ஆதரவோடு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தில் சிறிதளவும் அக்கறையற்ற திமுக அரசுக்கும், மக்கள் நலன் கருதி போராட முயன்ற கழகத்தினருக்கு அனுமதி மறுத்து அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறைக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு அமைந்திருக்கிறது. திருச்சி மாவட்டம் சீனிவாசா நகர் மற்றும் உறையூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திமுக அரசு மூட மறுத்து இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படுமேயானால் திருச்சி மாநகர் முழுவதும் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் சிக்கித் தவிப்பு – மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் மண்சரிவு ஏற்பட்டு மலை உச்சியில் இருந்த பாறைகள் உருண்டு அடிவாரப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் விழுந்ததில் 7 பேர் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மண்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பான முறையில் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். புயல் கரையை கடந்த நிலையிலும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறுகிய கால இடைவெளியில் கொட்டித் தீர்த்த கனமழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முழுமையாக முடங்கியுள்ளது. எனவே, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மண்சரிவில் சிக்கியிருக்கும் 7 பேரையும் பாதுகாப்பாக மீட்பதோடு, கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட ஏதுவாக உரிய நிவாரணத் தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயல் – கனமழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்திருக்கும் நிலையில் அதன் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி மற்றும் வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெய்திருக்கும் மழைப்பொழிவால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள சாலைகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. குடியிருப்புகளை சூழந்திருக்கும் மழைநீரால் உடமைகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கூட மாவட்ட நிர்வாகத்தால் இதுவரை செய்து தரப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. எனவே, புதுச்சேரி மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதோடு அவர்களுக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யுமாறும் தமிழகம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களை வலியுறுத்துகிறேன். அதே நேரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதோடு, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.