கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருப்பதோடு, கத்தி முனையில் மிரட்டி அவர்களின் மீன்கள் மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான உடமைகளை பறித்துச் சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோடியக்கரை கடல் பகுதியில் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் மூன்றாவது முறையாக அரங்கேறியுள்ளது. ஒருபுறம் இலங்கை கடற்படையினர் மற்றொருபுறம் கடற்கொள்ளையர்கள் என இருபுறமும் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்வதை உறுதிப்படுத்துவதோடு, மீனவர்களிடம் இருந்து கொள்ளையடித்துச் சென்ற அவர்களின் உடமைகளையும் மீட்டுத்தருமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திரு. பி.ஆர்.பாண்டியன் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதில் அதிக கவனம் செலுத்தியிருப்பது விவசாயிகள் மீதான அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது. அதிகாரம் மற்றும் அடக்குமுறையின் மூலம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் எண்ணம் எக்காலத்திலும் நிறைவேறாது என எச்சரிப்பதோடு, இனியாவது விவசாயிகள் பக்கம் நின்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தொழில் அமைப்புகள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே, கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பெரும் சரிவை சந்திந்த நிலையில், வணிக நிறுவனங்களுக்கு அண்மையில் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வோடு தற்போது அமலுக்கு வந்துள்ள நிலைக்கட்டண உயர்வும் அவர்களை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதை தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் போராட்டம் மூலமாகவே உணர முடிகிறது. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொழில் நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கபட்டு அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு அதனை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணம், உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக திரும்ப பெறுவதோடு தொழில் நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். அரசு நடத்திய எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் பல ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாத காரணத்தினால் சென்னை கொளத்தூரில் உள்ள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சூழலுக்கு கேங்மேன் பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனம் செய்யப்படுவோம் என திமுக அளித்த வாக்குறுதியை நம்பி காத்திருந்ததோடு, முதலமைச்சரின் அலுவலகம், மின்சார வாரியம் என கேங்மேன் பணிக்கு தொடர்புடைய பல இடங்களில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகவே, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கியிருக்கும் கேங்மேன் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணையை வழங்குமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும் என்று கூறியதோடு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி சாதனை படைத்து நாட்டின் முன்னோடியாக திகழ்ந்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன். அதே நேரத்தில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாக தொடங்குவதோடு, இட ஒதுக்கீடு மசோதாவின் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், நாட்டின் முக்கிய முடிவுகள் மற்றும் அதிகாரங்களில் பெண்களுக்கான பங்களிப்பை அதிகப்படுத்தும் 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு சட்டமசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றுவதோடு, அதனை விரைவில் அமலுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் திரு. விஜயகுமாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. வழக்கமான பணியை முடித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத கும்பலால் திரு. விஜயகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கொலைக்குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, திமுக ஆட்சிக்கு வந்த பின் நாள்தோறும் கொலை, கொள்ளை என தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்துமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சென்னை மடிப்பாக்கத்தில் குறுகிய சாலையில் முந்திச் செல்ல வழிவிடவில்லை எனக்கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு மாவட்டச் செயலாளர் திரு.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வரும் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்த போது திரு.அழகிரி மற்றும் அவரது குடும்பத்திரை வழிமறித்து அடையாளம் தெரியாத சில நபர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய புகார் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடே காரணம் என சொல்லப்படுகிறது. ஆகவே, எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணியாமல் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.

பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2019 ஆம் ஆண்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவின் நம்பிக்கையாக திகழ வாழ்த்துகிறேன். அதே போல யூரோப்பில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ராவிற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்தடுத்து நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.