ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசிக்க உள்ளூர் மக்களுக்கு கட்டணம் விதிப்பதா ? உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிரான செயலை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த தரிசன வழியை மூடிவிட்டு கட்டணம் வசூலிக்கும் வழியில் செல்ல கோயில் நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. காலம் காலமாக பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன பாதையை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதோடு, ரூ.200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என அறிவுறுத்தியிருப்பது உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரான செயலாகும். மேலும், பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே ராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்திருப்பதால் வரும் 17 ஆம் தேதி ஆலயப் பிரவேசம் போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு உள்ளூர் பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, உலகளவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அகற்றி, அவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் சிறப்பு தரிசன பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தைவான் நாட்டில் நடைபெற்றுவரும் தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை செல்வி.வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த வாரம் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் வெண்கலம் வென்ற நிலையில், தற்போது தைவான் தடகளப் போட்டியில் தங்கம் வென்று ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை தேடி தந்திருக்கும் செல்வி.வித்யா ராம்ராஜ் அவர்களின் பதக்க வேட்டை மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் திரு.ரத்தினம்பிள்ளை அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் என அனைவராலும் போற்றப்பட்ட திரு.ரத்தினம்பிள்ளை அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.