பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க திட்டமிட்டு அதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ள நிலையில், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஓராண்டுக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை 6 முறை கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், தமிழ்நாடு அரசு தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் நீர்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்ததோடு 138 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகவே, அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெறுவதோடு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரக்கூடாது என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஆளுங்கட்சி தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்கத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி மீண்டும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க முன்வந்திருக்கும் போக்குவரத்துத் துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. சென்னையில் உள்ள 32 பணிமனைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த முறை தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பணிமனைக்குள் மட்டுமே பணி வழங்கப்படும் என கூறிய போக்குவரத்துத்துறை தற்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணையில் பேருந்துகளை இயக்குவதற்கான பணி என குறிப்பிடப்பட்டிருப்பது போக்குவரத்துத்துறையை முற்றிலுமாக தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கை என தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கும் சூழலில், அவர்களின் கனவை சிதைத்துவிட்டு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை அவசரம் அவசரமாக நியமிப்பது ஏன்? திமுக ஆட்சிக்கு வந்த பின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விட்டிருப்பதோடு, தற்போது போக்குவரத்து கழகங்கள் முழுவதையும் தனியாருக்கு தாரைவார்க்க முயற்சிப்பது ஆளும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கையே காட்டுகிறது. எனவே, தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணை திரும்பப் பெறுவதோடு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்காக பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் ட்ராப் பிரிவில் கழக அமைப்புச் செயலாளர் திருமதி.சாருபாலா தொண்டைமான் அவர்களின் மகன் திரு.பிரித்விராஜ் தொண்டைமான் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிய போட்டிகளைப் போலவே அடுத்த ஆண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் திரு.பிரித்விராஜ் தொண்டைமான் அவர்கள் தங்கம் வென்று சாதனை படைக்கவும், தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வரும் மூன்று வகையான ஆசிரியர் அமைப்புகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. திமுக தேர்தல் வாக்குறுதியான 177 -ன்படி மறுநியமனப் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை பணியமர்த்த வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், வாக்குறுதி 181-ன் படி, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்களும், வாக்குறுதி 311ல் கூறியிருப்பது போல சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு இதுவரை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மீண்டும் நடைபெற்று வரும் போராட்டம் மூலமாகவே தெரியவருகிறது. ஆசிரியர்களின் போராட்டம் ஒரு வாரத்தை கடந்திருக்கும் நிலையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொடர்போராட்டத்தில ஈடுபட்டுள்ள ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த எட்டு பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசியில் இருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் தென்காசி திரும்பும் போது குன்னூர் அருகே எதிர்பாராத விபத்தில் பேருந்து சிக்கி 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதோடு, விபத்தில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன், ஸ்குவாஸ் போட்டியின் மகளிர் அணி பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கும் ஜோஷ்னா சின்னப்பா ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய அளவிலான போட்டிகள் மட்டுமல்லாது உலக அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க இவ்விருவருக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.