தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் – அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு யூரியா உரம் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமான யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா உரம் போதுமான அளவில் இல்லாத நிலையில், பயிரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், வேறுவழியின்றியும் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் விவசாயிகளிடம், யூரியாவுடன் மற்ற உரங்களையும் சேர்த்து வாங்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. காவிரி டெல்டா உட்பட நடப்பாண்டுக்கான தமிழகத்தின் ஒட்டுமொத்த சாகுபடி பரப்பளவைக் கணக்கிட்டு அதற்குத் தேவையான உரங்களை போதுமான அளவிற்கு முன்கூட்டியே இருப்பு வைக்கத் தவறியதே தற்போதைய உரத்தட்டுப்பாட்டிற்கு காரணம் என பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உரம் உடனடியாக விநியோகிக்கப்படுவதையும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் போதுமான அளவு இருப்பு வைக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஸ்வயம் (Swayam) தேர்வை எதிர்கொள்ளும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு – தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களையே ஒதுக்கீடு செய்வதை தேசிய தேர்வு முகமை உறுதி செய்திட வேண்டும். டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பி.எட் மாணவர்களுக்கான ஸ்வயம் (Swayam) தேர்வு நடைபெற உள்ள நிலையில்,அத்தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்த நிலையிலும், கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அம்மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த ஸ்வயம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கான சான்றிதழ்களைப் பல்கலைக்கழகங்களின் மூலம் பெறமுடியும் என்ற சூழலில், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அவர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது உளவியல் ரீதியிலும் மிகுந்த உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை உடனடியாக ஒதுக்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமையையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதலில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு.சக்திவேல் அவர்கள் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தேசப்பாதுகாப்பு பணியின் போது பயங்கரவாதிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு உயிர்நீத்த ராணுவ வீரர் திரு.சக்திவேல் அவர்களுக்கு எனது வீரவணக்கத்தை செலுத்துவதோடு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா ஆகியோரின் அன்பைப் பெற்றவருமான திரு.ஏ.வி.எம் சரவணன் அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திறமைமிக்க கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை தமிழ்சினிமாவுக்கு அடையாளப் படுத்திய திரு.ஏ.வி.எம் சரவணன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.