தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகியிருக்கும் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களுக்கும் துணைத் தலைவராகத் தேர்வாகியிருக்கும் திரு.ரவிசங்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் உயரிய இடமான சட்டமன்றத்தின் மரபுகளை முழுமையாகப் பின்பற்றி அதன் பாரம்பரியத்தையும், கண்ணியத்தையும் பாதுகாத்து, அவையை நடுநிலையோடு நடத்திடுவதை உறுதிசெய்ய வேண்டும் என பேரவைத் தலைவர் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களையும், துணைத் தலைவர் திரு. ரவிசங்கர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

சேலம் அருகே மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக் கொலை – கொலைக்கு அடிப்படைக் காரணமான போதைப் பொருட்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியில் இரவுநேரத்தில் மது போதையிலிருந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அடித்துக் கொலை செய்து அதனை வீடியோவாக எடுத்து மகிழ்ந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த ஐந்தாண்டுக் கால திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் 1.0, 2.0 என பெயர் வைத்தார்களே தவிர, அதனைக் கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காததால், தமிழ்நாட்டின் தலைநகரத்தில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை சர்வ சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தாராளமயமாகி, அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும் பன்மடங்கு பெருகின. எனவே, தற்போது தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, இந்த கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கப் பிரத்தியேக தடுப்புப் படையை அமைத்துள்ள நிலையில், காலம் தாழ்த்தாமல் அப்படையின் பணிகளை விரைவுபடுத்தி போதைப்பொருட்களின் நடமாட்டத்தை ஒழித்து மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன் . @CMOTamilnadu@TVKPartyHQ@TVKVijayHQ

தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? – தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது. தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது. எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

சவால்கள் நிறைந்த சூழலில் தனிப்பட்ட வாழ்க்கையை விட, தான் கொண்ட கொள்கைக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்க்கையை முழுவதுமாக அர்பணித்திட்ட ஆருயிர் சகோதரர் செயல்வீரர் மேலூர் திரு ஆர். சாமி அவர்களின் நினைவு தினம் இன்று. சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, மேலூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் மத்தியில் மட்டுமில்லாது, தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் என்னுடன் இணைந்து பணியாற்றி அனைத்து தரப்பு கழகத்தினரின் அளப்பரிய அன்பையும் பெற்று, போர்ப்படைத் தளபதியாக தொண்டர்களின் மத்தியில் நீக்கமற நிலைத்திருக்கும் சகோதரர் மேலூர் ஆர். சாமி அவர்களின் நினைவுநாளில் அவர் கண்ட இலக்குகளை விரைந்து அடைந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்றிடுவோம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.