திருநெல்வேலி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவர் – பள்ளி மாணவர்கள் மத்தியில் வேரூன்றியிருக்கும் வன்முறையை அகற்றி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது திமுக அரசின் கடமை. திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் இயங்கிவரும் பள்ளி ஒன்றின் வகுப்பறைக்குள்ளாக நடைபெற்ற மோதலில் மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் வெட்டியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மோதல் சம்பவத்தை தடுக்க முயன்ற பள்ளி ஆசிரியர் மீதும் நடைபெற்றிக்கும் தாக்குதல் சம்பவத்திற்கான அடிப்படைக் காரணம் இரு மாணவர்களிடையே பென்சில் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு என காவல்துறையினர் கூறியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. நாங்குநேரி அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர் வீடுபுகுந்து சக மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடங்கி அடுத்தடுத்து அரங்கேறும் இதுபோன்ற மோதல் சம்பவங்களும், வன்முறை நிகழ்வுகளும் பள்ளி மாணவர்கள் மத்தியில் வன்முறை எந்தளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதையே வெளிச்சம்போட்டு காட்டுகிறது. எனவே, இச்சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டிய பள்ளிகளில், இத்தகையை சம்பவங்கள் தொடராத வகையில் பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சமுதாயத்தின் அடித்தளத்தில் உதித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமை சிற்பியாக விளங்கியவரும், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவருமான சட்டமேதை டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று. சுதந்திர போராட்ட வீரராக, தலைசிறந்த அரசியல்வாதியாக, சுயமரியாதை சுடரொளியாக, ஆற்றல் மிக்க எழுத்தாளராக, சட்ட மாமேதையாக மக்களுக்காகவே வாழ்ந்த டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றிட அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

புத்தாண்டு திருநாளாம் விஷு திருநாளை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடும் மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விஷு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் தங்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிப் பராமரித்து இறைவனை மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபடும் மலையாள மக்கள் அனைவரின் எண்ணங்களும், விருப்பங்களும் ஈடேறும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும். மலரும் இப்புத்தாண்டு மலையாள மக்கள் அனைவரின் இல்லங்களிலும் இன்பமும், இனிமையும் செழிக்கின்ற ஆண்டாக அமையட்டும் என பிரார்த்தித்து மீண்டும் ஒருமுறை எனது விஷு திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் – பொதுமக்களின் உடல் நலனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி பொது உயிரி மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இந்த மருத்துவக் கழிவுகள் சுத்திகரிக்கும் ஆலை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அத் திட்டத்திற்கான கட்டுமானப் பணியை முழுவீச்சில் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பொது உயிரி மருத்துவக் கழிவுகளை எரிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மைமிக்க வாயு, மானாமதுரை மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொது உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்வதோடு, அங்கு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.