ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் தொனியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அமைச்சர் திரு.அருண்ராஜ் அவர்கள் பேசியிருப்பது, தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக மருத்துவத்துறையில் உள்ள அவலங்களை சரி செய்து மாற்றத்தைத் தருவோம் என ஆட்சிக்கு வந்த தவெக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்தும் “மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எலித்தொல்லை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள், கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை உள்ளிட்ட அவலங்களை சரி செய்யாமல், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவோ, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை வழங்கவோ எந்தவித ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பையும் எடுக்காமல், தமிழகத் தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் போதும் அவர்கள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருவார்கள் என்ற தொனியில் அத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, “ஆட்சிக்கு வந்துவிட்டோம்; மக்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம், எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்”என்ற அதிகாரத் தொனியை ஓரம்கட்டிவைத்துவிட்டு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கில் கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் – மர்மங்கள் நிறைந்த இவ்வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் . பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் திரு.அன்வர்தீன் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல, இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் திரு.ஜஸ்டின் மணிகண்டன் உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அன்றைய தினமே, கோயிலுக்கு சொந்தமான மற்றொரு நிலம் தனிநபருக்கு பத்திரப்பதிவு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் ஒருவர் கைது என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் சூழலில், பழனி திருக்கோவில் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய நபர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே, தவெக ஆட்சியமைந்த பின் அடுத்தடுத்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கோயில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நபர் சிபிசிஐடி காவல் விசாரணையை முடித்து சிறை திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்திருப்பதன் பின்னணியில், காவல்துறையினர் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது ஏற்கனவே அவருக்கு இருந்த உடல் உபாதைகளால் உயிரிழந்தாரா? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறது. எனவே, தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறலையும், அராஜகத்தையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – தேர்தலுக்கு முன்பாக கடந்த திராவிட ஆட்சியாளர்களை குறைகூறி வீரவசனங்களைப் பேசிய திரு.ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசிற்கு அதே கடிதம் எழுதும் நடைமுறையை தாண்டி, வேறு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் ? இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தைச் சார்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று ஒருநாள் முழு அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் மீனவ குடும்பங்கள் மன ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மீனவர் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்றுவிடுவதாக கடந்த திராவிட ஆட்சியாளர்கள் மீது தேர்தலுக்கு முன்பாக குற்றம் சாட்டிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் மீனவர்களின் கைதின் போது கடிதம் மட்டுமே எழுதியதை தவிர என்ன செய்திருக்கிறார் என்பதை விளக்க முடியுமா ? எனவே, பல்வேறு இன்னல்களுக்கு இடையே தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் மீனவர்களை, அரசியல் செய்வதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்திடும் வகையில் நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.