November 10, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 டெல்லி செங்கோட்டை அருகே கார்வெடிப்பு ஏற்பட்ட சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இத்தகைய கோர சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா? என்பது தொடர்பாக விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்.
November 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கேரள போக்குவரத்துத்துறையின் சாலைவரி விதிப்பு மற்றும் அபராத நடவடிக்கையால் ஆம்னி பேருந்து உரிமையாளகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு – பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்திற்கு சென்ற தமிழ்நாடு பதிவெண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் அம்மாநில போக்குவரத்து துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, 70 லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலச் சாலைவரிகளை செலுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்குவதாக கூறி கேரள அரசு மேற்கொண்டிருக்கும் இந்த திடீர் நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் சேவையை முழுமையாக முடக்கும் அளவிற்கு அமைந்துள்ளது. சுவாமி ஐயப்பனை தரிசிக்க தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கேரளத்தை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கியிருக்கும் நிலையில், ஆம்னிபேருந்துகள் வேலைநிறுத்தம் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த போக்குவரத்து சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு என தனி வகையிலான பெர்மிட் (Permit) இல்லாத காரணத்தினால் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்துகளை இயக்குவதிலும், விபத்துக்கள் ஏற்படும் போது இன்சூரன்ஸ் கோரி விண்ணப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருப்பதாக ஆம்னிபேருந்து உரிமையாளர்கள் தங்கள் தரப்பு விளக்கங்களை முன்வைத்துள்ளனர். ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் மற்றும், அதனால் பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் விடுத்திருக்கும் தனி பெர்மிட் (Permit) வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதனை செயல்படுத்திட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
November 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கோவையில் இளம்பெண் கடத்தப்படுவது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் – தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.கோவை மாவட்டம் இருகூர் தீபம் நகர்;பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கி வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்வது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஆண்நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியின் அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே மீண்டும் ஒரு இளம்பெண் கடத்தப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் பெண்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. பிரதான சாலையில் நடந்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை அடியோடு கேள்விக்குறியாக்கியிருப்பதோடு, காவல்துறை என்று ஒன்று உள்ளதா ? என்ற கேள்வியைப் பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும் எழுப்பியுள்ளது. எனவே, இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகாரைத் தீவிரமாக விசாரித்து தொடர்புடையவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு,காவல்துறையின் ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதுக்கோட்டை அருகே உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு – பொதுமக்களின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் முடிவைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு நச்சு ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிலத்தடி நீர் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமல்லாது பொதுமக்களின் உயிருக்கும், உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலான உயிரி மருத்துவக் கழிவு ஆலையை அமைக்கும் தமிழக அரசின் முடிவு அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்பு, கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எனப் பொதுமக்களின் தொடர் எதிர்ப்பையும் மீறியும் மருத்துவக் கழிவு ஆலையை அமைக்க முயற்சிப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, பிசானத்தூர் பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் அவர்களின் ஜெயந்தி விழாவை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய சீக்கிய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, இரக்கம், உண்மை, சகோதரத்துவம் ஆகியவற்றோடு மனிதக்குலத்திற்கும் வழிகாட்டும் ஒளியாகத் திகழும் குருநானக் அவர்களின் போதனைகளைப் பின்பற்றி வளமும் ஒற்றுமையும் நிறைந்த சமத்துவமிக்க சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
November 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் தீவிர பற்றாளரும் எனது நீண்டகால நண்பரும் ஒரு மூத்த சகோதரராக பல்வேறு கால சூழல்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஓய்வு பெற்ற அரசு கூடுதல் செயலாளரும் வழக்கறிஞருமான திரு.இசக்கி முத்து அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. திரு.இசக்கி முத்து அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
November 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கோவை விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி – கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், அவரது ஆண் நண்பர் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பெரும் அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகளைக் கடுமையாக்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும், இதுபோன்ற கொடூரச் செயல்கள் தொடர்வது, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அடியோடு இழக்கச் செய்திருக்கிறது. எனவே, அடையாளம் தெரியாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி மற்றும் அவரது நண்பருக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
November 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் : அறப்போர் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருநெல்வேலியில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க அறப்போர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகளால் ஏற்படும் அதிர்வு, சரிந்து வரும் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் காற்று மாசு குறித்து கருத்து தெரிவிக்க நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், அக்கூட்டத்தைக் கலைக்கத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கருத்துக் கேட்புக் கூட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் அத்துமீறிநடந்து கொண்ட நபர்கள் யாராக இருந்தாலும்,அவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதோடு, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஒட்டுமொத்த தேசத்திற்கும், மக்களுக்கும் பெருமை தேடித் தந்திருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றியும், சாதனையும் மேன்மேலும் தொடர மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
November 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடு சுதந்திரமடைந்த பிறகு தமிழ்நாடு தமிழருக்கே என்ற தொடர் முழக்கம் மற்றும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போராட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு உட்பட மொழிவாரி மாநிலங்கள் உருவான தினம் இன்று. சாதி, மத, இன வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு பாடுபட்டு, கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.