சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் “Thug Life Moment” வீடியோ – போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா? இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய “Thug Life Moment” வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த “Thug Life Moment” வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி திரைக்கதைகளின் மன்னராக வலம் வந்தவரும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர விசுவாசியாக திகழ்ந்தவருமான திரு கே.பாக்கியராஜ் அவர்கள் திடீர் மாரடைப்பால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. துணை இயக்குநராக திரையுலகில் அடியெடுத்துவைத்து இயக்குநராக, கதாசிரியராக நடிகராக என அரை நூற்றுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் கோலோச்சி, புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த திரு கே.பாக்கியராஜ் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள். தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும். எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திரு வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்கவிழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் பிறந்தநாளுக்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் மூலம் கடந்த 22 ஆம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகளை இயக்குவது குறித்தோ, மீண்டும் அனுப்புவது குறித்தோ இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத காரணத்தினால், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே பல்வேறு விதமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் எனும் பெயரில் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? தமிழகம் முழுவதும் காலாவதியான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்ற ஆபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளையும் சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்கிடுவதோடு, போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.