தமிழகத்தின் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. தொலைதூரங்களில் இருந்து பழனி முருகனை தரிசிக்க வரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் குறைந்த செலவிலும், பாதுகாப்பாக தங்குவதற்காகவும், கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட விடுதிகளின் கட்டணத்தை தனியார் விடுதிகளுக்கு இணையாக திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பது அவ்விடுதிகள் கட்டப்பட்ட அடிப்படை நோக்கத்தையே அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்கும் இத்தகைய விடுதிக் கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்பப்பெறுவதோடு, பக்தர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எத்தகைய முடிவுகளையும் இதுபோன்று அவசரகதியில் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்களுடன் இணைந்து போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்பும், கடமையுமிக்க காவல்துறையினரே, சமூக பொறுப்புடனும், துணிச்சலுடன் குரல் எழுப்பிய பள்ளி மாணவிகளிடம் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தியிருப்பதும், அவர்களை குற்றவாளிகளை போல சித்தரித்திருப்பதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அணுகுமுறையாகும். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருபுறம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிவிட்டு, மறுபுறம் பெண்களுக்கு நாள்தோறும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது தவெக அரசின் அளவுக்கு மீறிய அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் வகையில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் (SUEZ) எனும் தனியார் நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கடந்த ஆட்சியில் (09.02.2026 அன்று) ஏற்பளிப்பு கடிதம் (LOA) வழங்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சி அமைந்தவுடன் தற்போது அத்தொகை 1038 கோடி ரூபாயாக திருத்தப்பட்டதற்கான காரணம் என்ன ? – அதேபோல, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை சூயஸ் (SUEZ) நிறுவனத்துடன் ஜுன் 19 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தம் குறித்து ஜுலை 8 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்ததன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன ? அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகளின் படி சேலம் மாநகர மாமன்றக் கூட்டத்தில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி தீர்மானம் ரத்து செய்யப்பட்ட சூழலில், ஜூன் 19ஆம் தேதியே திருத்தப்பட்ட தொகையோடு ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படும் நிலையில், இந்த அவசர ஒப்பந்தம் பொது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்படும் அரசு உயர்பதவி நியமனங்களும், இதுபோன்ற தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும், பொதுமக்களுக்கு தெரியவந்து அதற்கு கேள்வி எழுப்பிய பிறகே, அரசு தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடுவதை பார்க்கும் போது, குளறுபடிகளும், குழப்பங்களும் நிறைந்திருக்கும் அரசு நிர்வாகத்தில், முதலமைச்சர் கூறிய வெளிப்படைத்தன்மை என்பது கேள்விக்குறியாகிவுள்ளது. எனவே, சூயஸ் (SUEZ) நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட ஏற்பளிப்பு கடிதம் (LOA), தற்போது 1035 கோடி ரூபாயாக உயர்ந்ததற்கான காரணங்களை விளக்குவதுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், அவர்கள் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும் உரிய மதிப்பளிக்கவேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அரசுப்பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உயரிய சிகிச்சைகள் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.