தமிழக எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூரில் அத்துமீறி நுழைந்து அறிவிப்புப் பலகை வைத்திருக்கும் கேரள அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – கூட்டணி தர்மத்திற்காக முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை தாரைவார்த்தது போல எல்லைப் பகுதியையும் பறி கொடுப்பதற்கு பெயர் தான் திராவிட மாடலா ? தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற்குட்பட்ட தாளூரில் கேரளத்தை வரவேற்கும் வகையிலான அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்தின் ஒரு எல்லைப் பகுதியாக இருக்கும் நீலகிரி மாவட்டத்தின் தாளூருக்குள் திடீரென அத்துமீறி நுழைந்து, தங்களது எல்லை என கேரளம் உரிமை கொண்டாடுவதும், அதனைத் தடுக்கவோ, கண்டிக்கவோ முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் திமுக அரசின் மௌனமும் கடும் கண்டனத்திற்குரியது.நீலகிரி மாவட்டத்தில் கேரள அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை தமிழகத்தின் மற்ற எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்குவதோடு அவர்களின் நில உரிமையும் பறிபோகும் அளவிற்கு அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.தென் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாகவும் உயிர் நாடியாகவும் முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் ஒரு பகுதியாக அங்குள்ள மரங்களைக் கூட வெட்ட அனுமதிக்காத கேரள அரசு, தமிழகத்திற்குள் நுழைந்து அறிவிப்புப் பலகை வைக்கும் அளவிற்குத் துணிந்திருப்பதை கூட்டாட்சி தத்துவத்திற்கு விடுத்திருக்கும் சவாலாகவே பார்க்க வேண்டியுள்ளது.திமுகவுடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவதில் தீவிரம் காட்டுவதும், தமிழகத்தின் எல்லைப் பகுதியை கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆக்கிரமிக்க முயல்வதையும் பார்க்கும் போது, திமுக அரசு மாநில உரிமையை விட்டுக் கொடுத்து தான் தேர்தல் கூட்டணியை உறுதிபடுத்துகிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே, தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூரில் அத்துமீறி வைக்கப்பட்டிருக்கும் கேரள அரசின் அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்றுவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் எல்லைக் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ( UPSC ) தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே அவர்களுக்கும், ஏழாவது இடத்தை பிடித்திருக்கும் ராஜா முகைதீன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடா முயற்சி மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் அரசுத்துறைகளின் மிக உயரிய பொறுப்புகளுக்குத் தேர்வாகியிருக்கும் இருவரும், அவரவர் பணியில் சிறந்து விளங்கிடவும், மேன்மேலும் பல சாதனைகள் படைத்திடவும் மீண்டும் ஒருமுறை மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – காவிரி விவகாரத்தில் தும்பை விட்டு வாலை பிடிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு இனியாவது விழித்துக் கொள்ளுமா ? கர்நாடக அரசு இன்று தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை வெற்றியாகக் கருதுவதாகவும் விரைவில் மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி நீரால் பாசன வசதி பெறும் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பின்பும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியான இரு தினங்களில், கர்நாடக காங்கிரஸ் அரசு தாக்கல் செய்திருக்கும் தனது நிதிநிலை அறிக்கையில் மேகதாது அணை குறித்த இத்தகைய அறிவிப்பு இடம்பெற்றிருப்பது, கூட்டணி நலனுக்காக திமுக தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுக்க முடிவெடுத்துவிட்டதோ ? என்ற ஐயம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் ஆரம்பம் முதலே தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுக, தன்னுடைய கட்சி நலனுக்காகவும், கூட்டணி நலனுக்காகவும் மாநிலத்தின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்க முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, நானும் டெல்டா காரன் தான் என வாய் சவடால் விடும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி டெல்டா பகுதிகளைப் பாலை வனமாக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை சட்டரீதியாக மட்டுமின்றி, தன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தம் கொடுத்துத் தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம் – நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 25 ஆம் தேதி முதல் பணியைப் புறக்கணித்துத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பத்து நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை அலுவலர்களை காவல்துறையின் மூலம் ஒவ்வொரு நாளும் அடக்கி ஒடுக்கும் திமுக அரசு, ஒருமுறை கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்க முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது. வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்து விதமான சான்றிதழ் வழங்கும் பணிகளும், அரசு சேவைகளும் முழுமையாக முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் வருவாய்த்துறை அலுவலர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்திட வேண்டும் என வருவாய்த்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.