நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சென்னையை நோக்கி பாதயாத்திரை – அரசு மருத்துவமனைகளின் அவல நிலைக்கு திமுக அரசும் அதன் முதலமைச்சரும் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள்,செவிலியர்கள் நியமனம், ஊதிய உயர்வு, கொரோனா பேரிடர் தொற்று காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர் திரு.விவேகானந்தன் அவர்களின் மனைவிக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வழங்கிய வாக்குறுதிகளை, முதலமைச்சரான பின்பு நிறைவேற்ற மறுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கும் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் என கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அனைத்துவித போராட்டங்களுக்கும் துளியளவும் செவிசாய்க்காத திமுக அரசின் கவனத்தை ஈர்க்க வேறு வழியின்றி சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தும் சூழலுக்கு அரசு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு தூய்மைப் பணியாளர்களே சிகிச்சை அளிக்கும் அவலம் என அடியோடு சீர்குலைந்திருக்கும் சுகாதாரத்துறையால் அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.எனவே, இனியும் காலம் தாமதிக்காமல் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு வி.கே.முத்துசாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.வி.கே முத்துசாமி அவர்களை இழந்துவாடும் அவரது புதல்வரும் உச்ச நீதிமன்ற நீதியரசருமான மாண்புமிகு திரு எம்.எம்.சுந்தரேஷ் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

விளைநிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு – விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பாக கோவை இருகூர் முதல் கர்நாடக மாநிலத்தின் தேவனஹந்தி வரை நடைபெறும் IDPL (Irugur-Devangonthi Pipeline) எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கொச்சி –கோவை – கரூர் வழித்தடத்தில் பதிக்கப்பட்ட பைப் லைன் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு இதுவரை வழங்கப்படாத நிலையில், மேலும் ஒரு ராட்சத குழாயை விளைநிலங்களில் பதிக்க பணிகள் நடைபெற்று வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோலிய நிறுவனத்தின் ராட்சத குழாய்களை விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படாமல் சாலைகளின் ஓரமாக அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் நிராகரித்திருப்பதோடு, விவசாயிகளின் அனுமதியின்றி கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை சுமார் 70 கி.மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணியை தொடங்கியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அத்திட்டத்தை விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்துவதோடு , ஏற்கனவே விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாய்களுக்கான உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

தஞ்சாவூர் அருகே முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – அடக்குமுறையையும், ஆணவப்போக்கையுமே கொள்கையாக கொண்டிருக்கும் திமுகவுக்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், விவசாயிகளின் பெயரில் தனியார் ஆலை வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் போராடி வரும் நிலையில் அது தொடர்பாக மனு அளிக்க வந்த விவசாயிகளை முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்திக்க மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு ஆலைகளும், தனியார் ஆலைகளும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 34-வது வாக்குறுதி, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பதும், கடந்த 2023 ஆம் ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி அப்போது தஞ்சை வந்த முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட மனு கிடப்பில் போடப்பட்டிருப்பதுமே, தற்போது முதலமைச்சருக்கு எதிராக விவசாயிகள் ஒன்று திரண்டு கருப்புக்கொடி ஏந்தி போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாய பெருமக்களின் நலன் காக்கவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாக வீரவசனம் பேசி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுத்து அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பதன் மூலம் விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே, கருப்புக் கொடி காட்ட முயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, ஆலை நிர்வாகத்துடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு வழங்கத் வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தந்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானியும், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவருமான நெல்லை திரு.சு. முத்து அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் தலை சிறந்த எழுத்தாளராகவும், நூலாசிரியராகவும் திகழ்ந்த நெல்லை திரு.சு. முத்து அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக விஞ்ஞானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ஆசிரியர் நியமனங்களில் திமுக அரசு காட்டும் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய பணி நியமன போட்டித் தேர்வை எதிர்கொண்டவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்ற நிலையில், காலிப்பணியிட அறிவிப்புக்கு ஏற்ப 2,563 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதையே கொள்கையாக வைத்திருப்பதோடு, அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை கூட நிரப்ப மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நியமன போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு அரசு பள்ளிகளில் நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக் கொலை – திமுக அரசின் அடையாளமாக மாறிவிட்ட கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்தை அடியோடு ஒழிப்பது எப்போது?பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான திரு.சக்கரவர்த்தி அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திரு.சக்கரவர்த்தி அவர்கள் கடந்த 11 ஆம் தேதி தனது வீட்டிற்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்து உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உடற்கூராய்வு அறிக்கை தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறது. அரசியல் கட்சியின் முக்கிய தலைவராகவும் பிரபல வழக்கறிஞராகவும் செயல்பட்டு வந்த திரு.சக்கரவர்த்தி அவர்கள் பல நாட்களாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சதித்திட்டம் தீட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழக அரசின் உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.ராணிப்பேட்டை அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக திமுகவின் கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டதில் தொடங்கி திரு.சக்கரவர்த்தி அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது வரையிலான செய்திகளை பார்க்கும் போது தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் மேலோங்கியிருப்பதையே நம்மால் உணர முடிகிறது. எனவே, பாமக நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு கள்ளத் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? என்பதையும் விரிவாக விசாரித்து வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

திருவாரூர் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை – மீதமிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா திமுக அரசு?திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முற்பட்ட போது அப்பெண் கத்திக் கூச்சலிட்டதால் ஆற்றில் அழுத்திக் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண், காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமி, கன்னியாகுமரியில் டியூசன் சென்ற மாணவி, திருச்செந்தூரில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமி என பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாள்தோறும் வெளியாகும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையான பின்பும், அக்குற்றங்கள் தொடந்து அதிகரித்து வருவது அச்சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு துளியளவும் அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் செயல்பட முடியாத நிலையில் இருக்கும் காவல்துறையால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.