பிரபல நடிகர் மயில்சாமி அவர்கள் திடீரென உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பலகுரல் கலைஞராக திகழ்ந்ததோடு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தவர். அரசியல் ஆர்வமிக்கவராக இருந்த மயில்சாமி, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். நலிந்த திரைக்கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் மனதில் இடம் பெற்றவர். இந்தத் துயரமான தருணத்தில் மயில்சாமியின் குடும்பத்தினருக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அடிப்பாலாறு பகுதியில் கடந்த 14ஆம் தேதி இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா என்ற மீனவர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். மீனவர் ராஜாவும், அவரது நண்பர்களும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மான் வேட்டையாடியதால் வானத்தை நோக்கி சுட்டதாக வனத்துறையினர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை மீனவர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர துப்பாக்கி சூடு நடத்தியது சட்டத்தை மீறிய செயலாகும். எந்த வகையிலும் அதனை நியாயப்படுத்த முடியாது. இந்த துயரச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பின்னரும் இது குறித்து கர்நாடக வனத்துறைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது மீனவர் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜா உயிரிழக்கக் காரணமான கர்நாடக மாநில வனத்துறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன், உயிரிழந்த மீனவருக்கு இருமாநில அரசுகளும் நிதி உதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் கரூர் அருகே மாயனூர் கதவணை பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தகவல் அறிந்து வேதனையடைந்தேன். தனியார் கல்லூரி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்ட மாணவிகளில் நான்கு பேர், இடைப்பட்ட நேரத்தில் குளிக்கச்சென்றபோது ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர். மாணவிகளை அழைத்து சென்ற அரசு பள்ளியின் ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதையே இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினர் மற்றும் சக மாணவிகளுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க அரசு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகளை கல்வி நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகளுக்கு வெளியூர்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் செயல்படுவதற்கான கடுமையான உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு, அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்துவருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்களை நியமிப்பது அதிகரிப்பதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன. மேலும், அவர்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. பிற மாநில தொழிலாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2022 AMMK. All Rights Reserved.