நாகையில் பெய்த தொடர்மழையால் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவு பயிர்கள் சேதம் – உரிய இழப்பீடை உடனடியாக வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கிழ்வேளூர் ஆகிய பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த எள்ளு, உளுந்து உள்ளிட்ட தானிய சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாறு காணாத வறட்சி, பருவம் தவறி பெய்யும் தொடர்மழை என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான இயற்கை பேரிடர்களை சந்திக்கும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக அரசின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் காலங்களில் கூட இழப்பீடு வழங்கி உதவ முன்வராத திமுக அரசு, ஆண்டுதோறும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதாலும், அதற்கென பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதால் என்ன பயன் ? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. எனவே, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய முறையில் கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தங்க நகைக்கடன் பெறுவதற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் ரிசர்வ் வங்கி – ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவசரகால நேரத்தில் பேருதவியாக இருக்கும் நகைக்கடனுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும். தங்க நகைக்கடன் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க தங்க நகைக்கான கடன் அளவு 75 சதவிகிதமாக குறைப்பு, சொந்த நகை என்பதற்கான உரிய ஆதாரம், 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் என பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்கள், வணிகர்கள், சிறு,குறு நடுத்தர தொழில்துறையினர் தங்களின் அவசரத் தேவைக்காக தங்க நகைகளை அடகு வைப்பதும், பின்னர் படிப்படியாக பணம் கட்டி திருப்பிக் கொள்வதும் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அதிலும், தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான வேளாண்குடி மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து அதன் மூலமாக கிடைக்கும் பணத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் மூலம் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தங்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, தங்க நகைக்கடன் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இக்கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும் வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் 50க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு – வைரஸ் தொற்று பரவும் வரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிட வேண்டும்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உருவெடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 50க்கும் அதிகமானோருக்கு அத்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் குறைந்தது தான் என்றாலும் கடந்த காலங்களில், அவற்றால் இழந்த உயிரிழப்புகளையும், ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதோடு, தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டுகளை அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட தலைமை மருத்துவமனை வரை நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சுகாதாரத்துறையை வலியுறுத்தும் அதே நேரத்தில் பொதுமக்களும் கொரோனா தொற்று தடுப்பு தொடர்பாக அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக இளம் பெண் புகார் – திமுக முன்னாள் நிர்வாகி மீதும் துணை போனவர்கள் மீதும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து கொண்ட பிறகு திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த திமுக இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் மீது காவல்துறையில் வழங்கப்பட்ட புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட பெண் ஆளுநர் மாளிகை வரை சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தன்னை வழக்கறிஞராகவும், திமுகவில் செல்வாக்கு மிக்கவராகவும் காட்டிக் கொண்ட திமுக இளைஞரணியின் முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலின் மூலமாக ஏற்கனவே பல பெண்கள் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியிருப்பது, தமிழகத்தில் மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறதோ என்ற அச்சம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.திமுகவைச் சேர்ந்த தெய்வச்செயல் செய்த மோசடிச் செயல்கள் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார்கள் அனைத்தும் பொதுவெளியில் பகிரப்பட்டிருப்பது காவல்துறை மீதான பெண்களின் நம்பிக்கையை அடியோடு சீர்குலையச் செய்திருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்ற முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக இளைஞரணியின் முன்னாள் நிர்வாகி மீது இதுவரை சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முன்வராதது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் திமுக நிர்வாகி தெய்வசெயலின் கட்சி பொறுப்பை பறித்ததோடு நிறுத்திவிடாமல், இத்தகைய கொடுஞ்செயலுக்கு துணை போன அனைவரையும் கைது செய்து முழுமையாக விசாரித்து குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்

சிவகங்கை அருகே கல்குவாரியில் மண் சரிந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு – குவாரிகளில் விதிமீறல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் பாறைகளை உடைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், இதே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பள்ளம் தோண்டப்பட்டதே விபத்திற்கான முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், அக்குவாரியில் முறையான ஆய்வை மேற்கொண்டு விதிமீறல் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பத்ம விபூஷன் விருது பெற்ற அணு விஞ்ஞானியுமான திரு எம்.ஆர்.சீனிவாசன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தலைசிறந்த ஆராய்ச்சிகளின் மூலம் இந்தியாவின் அணுசக்தி திட்டத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி திரு எம்.ஆர். சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக விஞ்ஞானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.