அரசு கள்ளர் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு – காலிப்பணியிடங்கள் நிரப்பும் வரை அப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன முறையை திமுக அரசு அமல்படுத்த வேண்டும்.தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பல வருடங்களாக நிரப்பப்படாமலே இருப்பதால் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை தும்மக்குண்டு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாத காரணத்தினால் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையிலும், போதுமான ஆசிரியர்களை நியமிக்க முன்வராத திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வின் மூலமாக நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு அரசு கள்ளர் பள்ளிகளில் நடைமுறைக்கு வராமல் இருப்பதாக புகாரும் எழுந்திருக்கிறது.கள்ளர் பள்ளிகளில் பல ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய திமுக அரசு, அதற்கு மாறாக வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்த நிர்பந்திப்பது அவர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கல்வி கற்பிப்பதில் சுணக்கம் என பல்வேறு காரணங்களால் அரசு கள்ளர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அப்பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னையில் நான் முதல்வன் திட்ட பயிற்சி முகாமில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதாக புகார் – மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு தரமற்ற உணவை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.சென்னை கோட்டூர்புரத்தில் நான் முதல்வன் திட்ட பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற உணவை உண்டு 10க்கும் அதிகமான பேராசிரியர்கள் மயக்கமடைந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பயிற்சியை வழங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேராசிரியர்களை வரவழைத்த திமுக அரசு, அவர்களுக்கான உணவை கூட தரமான முறையில் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதியின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் வகுப்பறைகள் என அவல நிலையில் காட்சியளிக்கும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் அரசுப்பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கையை படிப்படியாக இழக்கச் செய்திருக்கிறது.இதற்கிடையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை மற்றும் மதிய உணவுத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது பேராசிரியர்களுக்கான உணவையும் தரமற்ற முறையில் விநியோகித்திருப்பது பள்ளிக்கல்வித்துறையின் தொடர் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருப்பதை உறுதி செய்வதோடு, அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

ஒற்றைச் சிறகு ஓவியா எனும் நாவலுக்காக 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு.விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கும், கூத்தொன்று கூடிற்று எனும் சிறுகதைக்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு.லட்சுமிஹர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறார் இலக்கிய படைப்புகளில் தனித்துவமிக்கவராக திகழும் திரு.விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் சிறுகதை எழுதுவதில் தனி பாணியை கடைபிடித்துவரும் திரு.லட்சுமிஹர் ஆகிய இருவரின் எழுத்துப் பயணமும் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

திமுக அரசின் அலட்சியப் போக்கால் விவசாயத்தை விட்டு வெளியேறும் மா விவசாயிகள் – ஆந்திர மாநிலத்தை பின்பற்றி மானியத்துடன் கூடிய குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.மாங்காய் உற்பத்திக்கு நடப்பாண்டு நியாயமான விலை கிடைக்காத விரக்தியில் காலம் காலமாக வளர்த்த மாமரங்களை வெட்டி அழிக்கும் சூழலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளும், விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி விவசாயிகளும் தள்ளப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. அதே போல, தமிழக மாங்காய்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆந்திர எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதால் அதிருப்தியடைந்த மா விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு பழச்சாறு தொழிற்சாலைகளை மட்டுமே நம்பி ஏராளமான விவசாயிகள் மா சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது அம்மாநிலத்தில் அதிகரித்திருக்கும் மாங்காய் உற்பத்தியை காரணம் காட்டி தமிழக மாம்பழங்களை வாங்க மறுத்திருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல், விளைச்சல் பாதிப்பு என ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியிலும் மா விவசாயத்தை தொடர்ந்து வரும் விவசாயிகளுக்கு நடப்பாண்டு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மீளவே முடியாத பேரிடியாக அமைந்திருக்கிறது.மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 8 ரூபாய் விலை நிர்ணயித்திருப்பதோடு கூடுதலாக 4 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்திருக்கும் நிலையில், தொடர் போராட்டத்திற்கு பின்பும் கள்ள மவுனம் காக்கும் திமுக அரசால் மா மரங்களை வெட்டி அழிக்க வேண்டிய சூழலுக்கும், விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கும் மா விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, ஆந்திர மாநில அரசைப் போலவே தமிழகத்திலும் மாம்பழங்களுக்கு மானியத்துடன் கூடிய உரிய ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோடு, மா சாகுபடி அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில் மாம்பழ கூழ் தொழிற்சாலையை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சென்னையை நோக்கி பாதயாத்திரை – அரசு மருத்துவமனைகளின் அவல நிலைக்கு திமுக அரசும் அதன் முதலமைச்சரும் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள்,செவிலியர்கள் நியமனம், ஊதிய உயர்வு, கொரோனா பேரிடர் தொற்று காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர் திரு.விவேகானந்தன் அவர்களின் மனைவிக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வழங்கிய வாக்குறுதிகளை, முதலமைச்சரான பின்பு நிறைவேற்ற மறுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கும் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் என கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அனைத்துவித போராட்டங்களுக்கும் துளியளவும் செவிசாய்க்காத திமுக அரசின் கவனத்தை ஈர்க்க வேறு வழியின்றி சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தும் சூழலுக்கு அரசு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு தூய்மைப் பணியாளர்களே சிகிச்சை அளிக்கும் அவலம் என அடியோடு சீர்குலைந்திருக்கும் சுகாதாரத்துறையால் அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.எனவே, இனியும் காலம் தாமதிக்காமல் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு வி.கே.முத்துசாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.வி.கே முத்துசாமி அவர்களை இழந்துவாடும் அவரது புதல்வரும் உச்ச நீதிமன்ற நீதியரசருமான மாண்புமிகு திரு எம்.எம்.சுந்தரேஷ் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

விளைநிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு – விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பாக கோவை இருகூர் முதல் கர்நாடக மாநிலத்தின் தேவனஹந்தி வரை நடைபெறும் IDPL (Irugur-Devangonthi Pipeline) எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கொச்சி –கோவை – கரூர் வழித்தடத்தில் பதிக்கப்பட்ட பைப் லைன் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு இதுவரை வழங்கப்படாத நிலையில், மேலும் ஒரு ராட்சத குழாயை விளைநிலங்களில் பதிக்க பணிகள் நடைபெற்று வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோலிய நிறுவனத்தின் ராட்சத குழாய்களை விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படாமல் சாலைகளின் ஓரமாக அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் நிராகரித்திருப்பதோடு, விவசாயிகளின் அனுமதியின்றி கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை சுமார் 70 கி.மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணியை தொடங்கியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அத்திட்டத்தை விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்துவதோடு , ஏற்கனவே விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாய்களுக்கான உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

தஞ்சாவூர் அருகே முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – அடக்குமுறையையும், ஆணவப்போக்கையுமே கொள்கையாக கொண்டிருக்கும் திமுகவுக்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், விவசாயிகளின் பெயரில் தனியார் ஆலை வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் போராடி வரும் நிலையில் அது தொடர்பாக மனு அளிக்க வந்த விவசாயிகளை முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்திக்க மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு ஆலைகளும், தனியார் ஆலைகளும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 34-வது வாக்குறுதி, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பதும், கடந்த 2023 ஆம் ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி அப்போது தஞ்சை வந்த முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட மனு கிடப்பில் போடப்பட்டிருப்பதுமே, தற்போது முதலமைச்சருக்கு எதிராக விவசாயிகள் ஒன்று திரண்டு கருப்புக்கொடி ஏந்தி போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாய பெருமக்களின் நலன் காக்கவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாக வீரவசனம் பேசி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுத்து அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பதன் மூலம் விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே, கருப்புக் கொடி காட்ட முயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, ஆலை நிர்வாகத்துடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு வழங்கத் வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தந்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானியும், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவருமான நெல்லை திரு.சு. முத்து அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் தலை சிறந்த எழுத்தாளராகவும், நூலாசிரியராகவும் திகழ்ந்த நெல்லை திரு.சு. முத்து அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக விஞ்ஞானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.