ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து பேச்சுவார்த்தையை புறக்கணித்த 30க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் – போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான திமுக அரசின் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சிவசங்கர் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தி.மு.க கூட்டணி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ உட்பட 30க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் புறக்கணித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
15 முதல் 20 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு கோரிய தொழிற்சங்கத்தினருக்கு வெறும் 6 சதவிகிதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கியதோடு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 22 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் பணப்பலன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பிடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்காததே பேச்சுவார்த்தையை புறக்கணிக்க முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது.
அதிலும், 01.09.2023 முதல் 6 சதவிகிதம் ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில், மொத்தமாக வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையில் 12 மாத நிலுவைத் தொகையை வழங்க முடியாது எனவும் அமைச்சர் கூறியிருப்பது ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் செயலாகும்.
பொதுமக்களுக்கு சேவை வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் நஷ்டத்தை காரணம் காட்டி, பண்டிகை காலங்களிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோரிய ஊதிய உயர்வை வழங்குவதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் பணப்பலன்களையும் உடனடியாக விடுவிக்க முன்வர வேண்டும் என போக்குவரத்துக் கழகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

நாமக்கல் அருகே திறக்கப்பட்ட நாளிலேயே விரிசல் விழுந்த உயர்மட்ட மேம்பாலம் – பாலத்தின் தரத்தை முழுமையாக பரிசோதிக்கும் முன்பு அவசரகதியில் திறக்க வேண்டிய அவசியம் என்ன? நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி மூலமாக இன்று திறந்து வைக்கப்பட்ட 3.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட உயர்மட்ட மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்ற இந்த மேம்பாலப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பொதுமக்கள் மத்தியில் எழுந்த புகாருக்கு, திறக்கப்பட்ட முதல் நாளே ஏற்பட்டிருக்கும் இந்த விரிசல் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் மூன்றே மாதத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது மேம்பாலம் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசல் விழுந்திருப்பது தமிழக அரசு மேற்கொள்ளும் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மாநிலத்தில் சேதமடைந்த மேம்பாலங்களை சீரமைக்கவும், புதிய மேம்பாலங்களை கட்டவும் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்கே செல்கிறது? பாலத்தின் தரத்தை உறுதி செய்யாமல் அவசரகதியில் பாலம் திறக்க வேண்டிய அவசியம் என்ன? என பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளனர். எனவே, பாலத்தில் ஏற்பட்ட விரிசலை உடனடியாக சீரமைப்பதோடு, பாலத்தின் தரத்தை முழுமையாக ஆராயாமல் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

புகழ்பெற்ற திரைப்பட நடிகரும், எழுத்தாளரும், தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவருமான நடிகர் திரு.ராஜேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.திரைப்பட நடிகராக வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் ஜொலித்த திரு.ராஜேஷ் அவர்களை இழந்துவடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தென்கொரியாவில் நடைபெற்று வரும் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் திரு.பிரவின் சித்ரவேல் அவர்களுக்கும், 20 கிலோ மீட்டர் நடையோட்டம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் திரு.செர்வின் சபாஸ்டியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகளவில் நடைபெறும் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் தமிழக வீரர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கும் சூழலில் கோவை மற்றும் நீலகிரியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் கணித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஏற்கனவே நொய்யல், பவானி, ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மேலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.மேலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளை முறையாக பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, கனமழையால் மக்கள் பாதிக்கப்படும் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.