மண்ணின் ஆரோக்கியம் மற்றும் மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்தி வேளாண்மைத் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கியவரும், இயற்கை விவசாயத்தின் அவசியத்தை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரப்பியவருமான இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பிறந்த தினம் இன்று. இயற்கை விவசாயத்தை வெறும் தொழிலாகக் கருதாமல், வாழ்வியல் நடைமுறையாக பின்பற்றியதோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை ஆழமாக வேரூன்றச் செய்த மாமனிதர் நம்மாழ்வார் அவர்கள் காட்டிய பாதையில் பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – மாநில உரிமை பறிபோவதை இனியும் வேடிக்கை பார்ப்பது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என மாண்புமிகு மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு.சி.ஆர்.பாட்டில் அவர்களை கர்நாடக மாநிலத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற மறுத்து தமிழகத்திற்கான நீரை உரிய நேரத்தில் வழங்க மறுத்துவரும் கர்நாடக அரசு, தற்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதப் போக்குடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. கர்நாடக அரசின் இத்தகைய நடவடிக்கை, காவிரியின் குறுக்கே தமிழகத்தின் அனுமதியின்றி எந்த இடத்திலும் அணை கட்ட முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு முரணாக இருப்பதோடு, காவிரி நீரை மட்டுமே நம்பியிருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படாத நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்திற்கு கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.டி.கே.சிவக்குமார் அவர்களை அழைத்து உபசரிப்பு வழங்கிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தின் முயற்சிகளை தடுத்து நிறுத்த எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது மாநில உரிமையை விட திமுக அரசுக்கு கூட்டணி தான் முக்கியம் என்பதையே வெளிப்படுத்துகிறது. எனவே, காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகளுக்கு நிரந்தர தடைவிதிப்பதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாக மட்டுமல்லாது, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மூலம் அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்தவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவராக பணியாற்றியவருமான தேவர் தந்த தேவர் திரு.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று. பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததோடு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் போது நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரலையும் பதிவு செய்த திரு.மூக்கையாத் தேவர் அவர்கள் ஆற்றிய எண்ணற்ற அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.