மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பூம்புகாரில் தொடங்கவிருந்த “மண்ணின் மக்களின்” நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது – நீர்வளத்தையும், நில வளத்தையும் பாதுகாக்க வலியுறுத்தும் நடைபயணத்தைத் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. காவிரிப் படுகை முழுவதையும் பாதுகாக்கும் நோக்கத்தில் “வேளாண் மண்டலப் பாதுகாப்பை உறுதி செய்வோம்” எனும் முழக்கத்தை முன்னிறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பூம்புகார் முதல் தஞ்சாவூர் வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விளைநிலங்கள் விளைநிலங்களாகவே தொடர வேண்டும், கடற்பகுதியில் எரிவாயு – எண்ணெய் கிணறுகள் அமைப்பதை தடைசெய்ய வேண்டும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவிருந்த நடைபயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த பேராசிரியர் திரு.சுல்தான் இஸ்மாயில் அவர்கள் தலைமையிலான குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அதன் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நீர்வளத்தையும், நிலவளத்தையும் பாதுகாக்க வலியுறுத்தும் நடைபயணத்திற்கு அனுமதியை தர மறுப்பது எந்த வகையில் நியாயம்? என சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் நடைபயணத்திற்கு உரிய அனுமதியை உடனடியாக வழங்குவதோடு, பேராசிரியர் திரு.சுல்தான் இஸ்மாயில் அவர்களின் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீவிர பற்றாளரும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த உறுப்பினருமான திரு.பூமிநாதத் தேவர் அவர்கள் வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.பூமிநாதத் தேவர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.