தென்கொரியாவில் நடைபெற்று வரும் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் திரு.பிரவின் சித்ரவேல் அவர்களுக்கும், 20 கிலோ மீட்டர் நடையோட்டம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் திரு.செர்வின் சபாஸ்டியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகளவில் நடைபெறும் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் தமிழக வீரர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கும் சூழலில் கோவை மற்றும் நீலகிரியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் கணித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஏற்கனவே நொய்யல், பவானி, ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மேலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.மேலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளை முறையாக பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, கனமழையால் மக்கள் பாதிக்கப்படும் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

நாகையில் பெய்த தொடர்மழையால் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவு பயிர்கள் சேதம் – உரிய இழப்பீடை உடனடியாக வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கிழ்வேளூர் ஆகிய பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த எள்ளு, உளுந்து உள்ளிட்ட தானிய சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாறு காணாத வறட்சி, பருவம் தவறி பெய்யும் தொடர்மழை என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான இயற்கை பேரிடர்களை சந்திக்கும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக அரசின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் காலங்களில் கூட இழப்பீடு வழங்கி உதவ முன்வராத திமுக அரசு, ஆண்டுதோறும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதாலும், அதற்கென பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதால் என்ன பயன் ? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. எனவே, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய முறையில் கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.