முதலமைச்சர் பாதுகாப்புக்கு வந்த பெண் காவலரை கழிவறையில் வைத்து வீடியோ எடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது – பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மற்ற பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும் ? ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் கழிவறை பயன்படுத்திய போது, செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்வில் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் காவலருக்கு நடைபெற்றிருக்கும் இந்த அவலச் சம்பவம், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்தளவிற்கு கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய காவல் அதிகாரி ஒருவரே சக பெண் காவலரை போகப் பொருளாக பார்த்திருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் மிகப்பெரிய இழுக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, பெண் காவலரை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்ட காவல் சிறப்பு ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்கு வரும் பெண் காவலர்களோடு, அனைத்து பெண் காவலர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பலால் இருவர் கொடூரமான முறையில் படுகொலை – இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் தொடர் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று கற்களை வீசி இருவரை கொடூரமான முறையில் கொலை செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அதோடு, திருத்தணி அருகே இருளர்கள் வசித்துவந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மற்றொரு கஞ்சா போதையில் இருந்த கும்பல், அங்கிருந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் நினைத்துப் பார்க்கும் போதே மனதை உலுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கத் தவறிவிட்டதோடு, போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என விளம்பர வீடியோ வெளியிட்டதன் மூலம் தனது கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால், இளைய சமுதாயத்தின் எதிர்காலம் பாழாகிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தால் தமிழகத்தில் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ முற்றிலும் செயலிழந்திருப்பதால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. எனவே, திருவள்ளூர் மற்றும் திருத்தணி குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு தடுத்திட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்

செங்கல்பட்டு அருகே அமையவிருக்கும் புதிய நீர்த்தேக்கத்திற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு – புதிய நீர்த்தேக்கத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் முன்பே அவசரகதியில் அடிக்கல் நாட்டுவது ஏன் ? செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் அமைந்துள்ள கோவளம் உப வடிநிலப் பகுதியில் மாமல்லன் எனும் பெயரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையின் புறநகர் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நிலமான உப்பங்கழி நீர்நிலையில் அமையவிருக்கும் இந்த புதிய நீர்த்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித் தொழிலோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என அதனை சுற்றியுள்ள 10க்கும் அதிகமான மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தன்மையை அறிந்து கொள்ள உதவும் நீரியல் ஆய்வுகள், நீண்டகால நிலைத்தன்மை, நிலத்தடி நீரின் போக்கு என எந்தவித ஆய்வுகளையும் முறையாக மேற்கொள்ளாமலும், அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்காமலும் அவசரகதியில் இத்திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நீரியல் வல்லுநர்களும் எழுப்பியுள்ளனர். எனவே, காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கும் உப்பங்கழிப் பகுதியின் தன்மையை முற்றிலுமாக மாற்றி புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதோடு, இதுபோன்ற திட்டங்கள் தொடங்கும் போது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனி, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், கோடிக்கணக்கான மக்களின் புன்னகையாகவும், புது நம்பிக்கையாகவும் திகழ்ந்த ஆகச்சிறந்த ஆளுமை பாரதரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினம் இன்று… மக்களுடன் மக்களாக வாழ்ந்து, அவர்களுக்காக அயராது உழைத்து, நாடுபோற்றும் நல்லபல திட்டங்களை செயல்படுத்தி, தமிழக மக்களின் இதயக் கோயிலில் மக்கள் திலகமாய், மன்னாதி மன்னராய் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.