அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மாணவ சமுதாயத்தின் நலன் மற்றும் உயர்கல்வியை மேம்படுத்துவதாக கூறி, சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்டத்திருத்தம், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை முழுமையாக தனியார் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்பட்சத்தில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிக் கட்டணம், இலவசக் கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும் என்பதோடு, கல்விக் கட்டணமும் பன்மடங்கு உயரும் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது. மேலும், அறநோக்கத்தோடு தொடங்கப்பட்ட கல்லூரிகள் வியாபாரத்தை நோக்கி நகரக்கூடும் என்பதோடு, தங்களின் பணிபாதுகாப்பு, உரிய நேரத்தில் ஊதியம், ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகள் அறவே ஒழிக்கப்படும் என அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் வேதனையை பதிவு செய்துள்ளனர். எனவே, அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றிட வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்கியிருக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் – விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதியின்மை காரணமாக லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி டெல்டா பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்குச் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், விளைவித்த நெற்பயிர்களைக் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்து தர தவறிய அரசு நிர்வாகத்தைக் கண்டித்துப் போராட வேண்டிய சூழலுக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மகசூலுக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களைத் திறக்காததும், ஏற்கனவே உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதியை ஏற்படுத்தித் தராததுமே லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைய முக்கிய காரணம் என டெல்டா பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இயற்கை பேரிடர்களையும், பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு விளைவித்த நெற்பயிர்கள் உரிய நேரத்தில் முழுமையாகக் கொள்முதல்செய்யப்படாததும், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதும் காவிரி டெல்டா விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கும் நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு,தற்காலிக கொள்முதல் நிலையங்களை அமைத்துத் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை முழுமையாகக் கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்காகவும், வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்கவும், தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஏவுகணை நாயகர் குடியரசு முன்னாள் தலைவர் பாரத ரத்னா திரு ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் அவர்களின் பிறந்த தினம் இன்று. கனவு காணுங்கள் என இந்திய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உந்து சக்தியாகத் திகழ்ந்ததோடு, எளிய குடும்பத்தில் பிறந்தாலும் தன் திறமையால் ஏற்றம் பெற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து நாட்டு மக்களின் இதயங்களில் சிகரமாகக் குடியிருக்கும் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் தேசப்பற்றையும், தேசத்திற்காக அவர் ஆற்றிய பணிகளையும் போற்றி வணங்கிடுவோம்.

கழகத்தின் மீதிருந்த அளப்பரிய பற்றால் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதனைத் திறம்பட எதிர்கொண்டு, தான் சார்ந்த கழகத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எனது ஆருயிர் நண்பர் திரு வெற்றிவேல் அவர்களின் நினைவு தினம் இன்று. துரோகத்திற்கு எதிரான போரில் முதன்மை படைத் தளபதியாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த அன்பு நண்பர் திரு வெற்றிவேல் அவர்களின் நினைவு தினத்தில், நம் லட்சியப் பயணத்தின் இலக்கை அடைய நாம் அனைவரும் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.