கூலி உயர்வு கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் – தமிழக அரசு உடனடியாக தலையிட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக வேண்டும்.கூலி உயர்வு வழங்கக் கோரியும், மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கடந்த சில தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய பின்னரும், மீண்டும் அதே போராட்டத்தில் பங்கேற்றிருப்பது, கூலி உயர்வு விசைத்தறியாளர்களுக்கு எத்தகையை அவசியமானது என்பதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.கூலி உயர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், துறை சார்ந்த மற்றும் மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்திருப்பதால் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறியாளர்களின் தொடர் போராட்டம் தொடர்பாக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் போது, இப்பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற தமிழக அமைச்சர்களின் வாக்குறுதி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் போல கிணற்றில் போட்ட கல்லாகவே இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்ளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு அவர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை – விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தவா? முதலமைச்சர் குடும்பத்தின் வருமானத்தை பெருக்கவா ? – திமுகவின் குடும்ப ஆட்சிக்கு அடுத்து வரும் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி. தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை -2025 மீது பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த எந்தவித முன்னெடுப்பையும் எடுக்காத திமுக அரசு, முதலமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த நிறுவனத்தை தொடங்கிய பின் விண்வெளிக் கொள்கையை வெளியிட்டிருப்பது பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் போது ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகளும், உருவாகும் என சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளும் கானல் நீராகவே காட்சியளித்து வரும் நிலையில் முதலமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த தனி நபர் ஒருவருக்காக அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், குடும்பத்தினருக்காக மட்டுமே அமைச்சரவையை கூட்டி விண்வெளிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கும் முதலமைச்சருக்கும் திமுக ஆட்சிக்கும் அடுத்து வரும் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.