சென்னை பல்லாவரம் அருகே அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் ஊழியர் காயம் – ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்கத் தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனம். சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் அருகே இயங்கி வரும் அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அங்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையிலும், மலிவு விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கத்திலும் இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்கத் தவறிய திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது. அம்மா உணவகங்களை மேம்படுத்த கடந்த ஜூலை மாதம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 21 கோடி ரூபாயில் அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவோ, உணவின் தரத்தை மேம்படுத்தவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் மையங்களாக செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை முடக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, போதுமான நிதியை ஒதுக்கி ஆரோக்கியமான முறையில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

டெல்டா மாவட்டங்களில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கும் நெற்பயிர்கள் – பாதிப்புகளை முறையாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் படி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் பட்சத்தில் ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர் சாகுபடி முழுமையாக பாதிப்புக்குள்ளாகி பெரும் இழப்பை சந்திக்கக் கூடிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் போது பெய்யும் கனமழையால் விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் வடிகால்களை முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிர்வாகம் அலட்சியாக எதிர்கொண்டதன் விளைவே நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தொடர் கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கும் நெற்பயிர்களை முறையாக கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு தொகையை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.