தமிழ்நாடு அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி முடக்கமா ? – அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாகத் திகழும் ஊடகங்களைச் சுதந்திரமாக ஈடுபடத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு கேபிளில் புதியதலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த ஐந்து நாட்களாக முடக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அன்றாட நிகழ்வுகளை எழுத்து வடிவமாகவும், ஒளிஒலி வடிவமாகவும் வழங்கி அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலங்களாகச் செயல்படும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை முடக்க முனைவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்பதோடு, ஜனநாயகத்திற்கும் விரோதமானது ஆகும். எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்கள், அதன் பணியில் சுதந்திரமாக ஈடுபட அனுமதிக்கும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப அரசு கேபிள் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் – மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறை நேற்று தொடங்கியிருக்கும் நிலையில், அத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெற்றோர்களைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் அலைக்கழிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு நிதி வழங்காததைக் காரணம் காட்டி தனியார்ப் பள்ளிகளில் இலவச சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசால், ஏராளமான பெற்றோர்கள் தங்களின் சொந்த செலவிலேயே குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் பதிவு செய்து சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் என்ற அரசின் விதிமுறைகளைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றாமல் தங்களைத் தொடர்ந்து அலைக்கழிப்பதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இலவச கட்டாய கல்வி சேர்க்கைக்காக இதுவரை பெற்றோர்களே இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்துவந்த நிலையில், நடப்பாண்டில் தனியார்ப் பள்ளிகளின் மூலமாகவே சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்கள் சேர்க்கை நடைமுறையை எளிதாக்குவதோடு, ஏற்கனவே பள்ளிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெறும் பட்சத்தில் அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தேமுதிக பொதுச்செயலாளர் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் திருமதி அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தாயாரை இழந்துவாடும் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த், சகோதரர் L K சுதீஷ் ஆகியோருக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.