தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப்பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் கழன்று விழுந்து விபத்து – அரசுப்பேருந்துகளில் பயணிக்கவே பொதுமக்கள் அச்சப்படும் சூழலை உருவாக்கிய திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. மதுரை – குற்றாலம் இடையே இயக்கப்பட்ட அரசுப்பேருந்து தென்காசி கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது தீடிரென பின்பக்க சக்கரங்கள் கழன்று விபத்துக்குள்ளாகியதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசுப் பேருந்துகள் ஒடிக் கொண்டிருக்கும் போதே அச்சு முறிந்து நடுவழியில் நிற்பதையும், பிரேக் பிடிக்காமல் அடிக்கடி சாலைத் தடுப்புகளில் மோதி விபத்திற்குள்ளாவதையும் பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் கண்டுகொள்ளாத போக்குவரத்துத்துறையால் பேருந்தின் பின்பக்க இரண்டு சக்கரங்களும் தனியாக கழன்று ஓடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு நிகழ்ந்த விபத்தில் தொடங்கி, திருச்சியில் நடத்துனரின் இருக்கை கழன்று நடைபெற்ற விபத்து வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், அப்பேருந்துகளை முறையாக பராமரிக்கவோ, புதிய பேருந்துகளை வாங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் காலாவதியான பேருந்துகளும், தகுதியற்ற பேருந்துகளுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகள் வாங்கவும், பழைய பேருந்துகளை பராமரிக்கவும் ஒதுக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியை அனைவரின் மத்தியிலும் எழுப்புகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப்பேருந்துகளை முறையாக பராமரிப்பதோடு, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் தொகையை முழுமையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வில் திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் – தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்து காவலர்களை வஞ்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையின் படி 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் 389வது வாக்குறுதியாக இடம்பெற்றிருந்த காவலர்களுக்கு இருபது ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதிக்கு முரணாக அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆண்டுதோறும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், அனைத்து காவலர்களுக்கும் வாரவிடுப்பு, மாவட்ட அளவில் காவலர்கள் குறைதீர்க்கும் அமைப்பு என அள்ளி வீசிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாத திமுக அரசு, அறிவிக்காத வாக்குறுதியாக பதவி உயர்வை தடுத்திருப்பது காவலர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.ஏற்கனவே, ஆளுங்கட்சியினரின் தலையீடு, காவலர்கள் பற்றாக்குறை, பணிச்சுமை அதிகரிப்பு, பெருகிவரும் குற்றச்சம்பவங்கள் ஆகியவற்றால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் காவலர்களுக்கு திமுக அரசு பிறப்பித்திருக்கும் இந்த புதிய அரசாணை கூடுதல் மன உளைச்சலை அளித்திருப்பதோடு, அவர்களின் பணித்திறனை மேலும் பாதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, 2002 முதல் 2010 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த காவலர்களுக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கோவையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக இருவர் கைது – தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டத்தை கண்காணிக்கத் தவறிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரபுக் கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) அமைப்பு உட்பட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக அக்கல்லூரியின் முதல்வர் உட்பட இருவரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறி தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தேசிய புலனாய்வு முகமையால் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதன் மூலம், அச்சம்பவத்தை சாதாரண விபத்து எனக்கூறி மூடி மறைக்க முயன்ற திமுக அரசின் உண்மையான முகம் அம்பலப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் திரு மு.கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தின் போது நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய துயரம் இன்றும் நீங்காத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் அவரின் புதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்காலத்திலும் நடைபெற்றிருக்கும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தீவிரவாத அமைப்புகள் தலைதூக்குகிறதா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.ஏற்கனவே, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற நிலையில், காவல்துறையை செயல்படவிடாமல் முடக்கி வைத்திருப்பதாக எண்ணத் தோன்றும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்கும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசு, தற்போது, தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்க தவறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆட்சி நிறைவடையும் தருவாயிலாவது விழிப்புடன் செயல்பட்டு தீவிரவாத செயல்கள் வேரூன்றாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும். திமுக அரசின் அலட்சியம் இனியும் தொடருமேயானால் 2001 ஆம் ஆண்டு மக்களே வெகுண்டெழுந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போலவே, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை மக்களே ஏற்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நான்கு நாட்களில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் – தரமற்ற கட்டடங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல, சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.நாமக்கல் அருகே மேம்பாலம் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசலுக்குள்ளான செய்தியில் தொடங்கி, அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விபத்துக்குள்ளாகும் அரசுப்பள்ளி வகுப்பறைகள், கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களில் தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலம் வரை தொடர்ந்து ஏற்படும் விபத்துகளும், விரிசல்களும் திமுகவின் திராவிட மாடல் அரசின் கட்டுமான லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.கட்டுமானப் பணிகளின் போது அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டிய திமுக அரசு, அதற்கு நேர்மாறாக எப்போது திறப்பு விழா நடத்தலாம் ? எவ்வாறெல்லாம் விளம்பரம் செய்யலாம் ? என்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.அதோடு, கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே கட்டடங்களும், பாலங்களும் விபத்துக்குள்ளாவதும், அதனை சீரமைக்கிறோம் எனும் பெயரில் மேலும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருவதன் மூலம் தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, அரசுப்பள்ளி வகுப்பறைகள் தொடங்கி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் வரை நடைபெறும் கட்டுமானப் பணிகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்த பின்னரே திறப்பு விழா காண வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.