மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணியில் இருந்த நாகலட்சுமி, ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு ஒரு மாதம் ஆனநிலையிலும் தற்கொலைக்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாகலட்சுமியின் ஐந்து குழந்தைகளும் கணவரும் ஆதரவற்ற நிலையில் உள்ள சூழலில், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி வாய்கிழிய பேசும் திமுக அரசு, நாகலட்சுமிக்கு ஆட்சியர் வழங்கிய பொறுப்புக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் மீதும், நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? நாகலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்துக்கு உரிய சட்ட உதவிகளை செய்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன்.

ஆசிரியர் தகுதி தேர்வில்(TET) தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்த வகை செய்யும் அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தங்களை பணி நியமனம் செய்ய வேண்டுமானால் மேலும் ஒரு தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்தும் அரசாணை கடந்த 2019ஆம் ஆண்டு பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் இந்த அரசாணையை எதிர்த்ததை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பணி நியமன போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 முறை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போதும் கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரதமிருக்கும் ஆசிரியர்களை தமிழக அரசின் சார்பில் இதுவரை அழைத்து பேசாததைக் கண்டிப்பதுடன், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.