காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்கியிருக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் – விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதியின்மை காரணமாக லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி டெல்டா பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்குச் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், விளைவித்த நெற்பயிர்களைக் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்து தர தவறிய அரசு நிர்வாகத்தைக் கண்டித்துப் போராட வேண்டிய சூழலுக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மகசூலுக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களைத் திறக்காததும், ஏற்கனவே உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதியை ஏற்படுத்தித் தராததுமே லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைய முக்கிய காரணம் என டெல்டா பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இயற்கை பேரிடர்களையும், பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு விளைவித்த நெற்பயிர்கள் உரிய நேரத்தில் முழுமையாகக் கொள்முதல்செய்யப்படாததும், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதும் காவிரி டெல்டா விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கும் நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு,தற்காலிக கொள்முதல் நிலையங்களை அமைத்துத் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை முழுமையாகக் கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்காகவும், வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்கவும், தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஏவுகணை நாயகர் குடியரசு முன்னாள் தலைவர் பாரத ரத்னா திரு ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் அவர்களின் பிறந்த தினம் இன்று. கனவு காணுங்கள் என இந்திய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உந்து சக்தியாகத் திகழ்ந்ததோடு, எளிய குடும்பத்தில் பிறந்தாலும் தன் திறமையால் ஏற்றம் பெற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து நாட்டு மக்களின் இதயங்களில் சிகரமாகக் குடியிருக்கும் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் தேசப்பற்றையும், தேசத்திற்காக அவர் ஆற்றிய பணிகளையும் போற்றி வணங்கிடுவோம்.

கழகத்தின் மீதிருந்த அளப்பரிய பற்றால் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதனைத் திறம்பட எதிர்கொண்டு, தான் சார்ந்த கழகத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எனது ஆருயிர் நண்பர் திரு வெற்றிவேல் அவர்களின் நினைவு தினம் இன்று. துரோகத்திற்கு எதிரான போரில் முதன்மை படைத் தளபதியாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த அன்பு நண்பர் திரு வெற்றிவேல் அவர்களின் நினைவு தினத்தில், நம் லட்சியப் பயணத்தின் இலக்கை அடைய நாம் அனைவரும் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.