தென் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போரை முன்னின்று நடத்தியவரும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வணங்கிய தேசியத்தலைவருமான தென்னாட்டு போஸ் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் குருபூஜை இன்று. தமிழகம் உயர, தமிழ்ச் சமூகம் வளர தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததோடு, சுயவாழ்விலும், பொதுவாழ்விலும் தூய்மைக்கும், எளிமைக்கும் இலக்கணமாக வாழ்ந்து வரலாறு படைத்த அப்பழுக்கற்ற மாமனிதர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் மக்களுக்கு ஆற்றிய சேவையைப் போற்றி வணங்கிடுவோம்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார் – தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை எழுதியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில், பணி நியமன உத்தரவுக்காக 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 150 பேர் பணம் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அத்தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது. எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றிருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இந்திய விடுதலைக்கான முதல் போரை மக்கள் பங்களிப்போடு முன்னெடுத்த மாமன்னர்களும், சிவகங்கை சீமையை மீட்டெடுக்க வீரமங்கை வேலுநாச்சியாருக்கு உறுதுணையாக இருந்த விசுவாசமிக்க போர்ப்படைத் தளபதிகளுமான மாவீரர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை இன்று. தென்னிந்தியாவில் தங்களை எதிர்க்க யாருமில்லை எனக் கொக்கரித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்த சிவகங்கை சீமையின் வேங்கைகளான மருது பாண்டியர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025ல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய கபடி அணியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவைச் சேர்ந்த அனைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய கபடி அணியின் ஆண்கள் பிரிவில் திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்த வீரர் அபினேஷ் அவர்களும், மகளிர் பிரிவில் சென்னை அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகா அவர்களும் இடம்பெற்றிருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த தாய்நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் இந்தியக் கபடி அணியின் வீரர் மற்றும் வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போரில் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுக்கு உறுதுணையாக இருந்தவரும், சிவகங்கை பாகனேரியை திறம்பட ஆட்சி செய்த மன்னருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயப் படைகளின் அடக்குமுறைக்குத் துளியளவும் அஞ்சாமல், தீரத்துடன் எதிர்த்து நின்று இறுதிவரை போரிட்டதோடு, தாய் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் மகத்தான பங்களிப்பை வழங்கிய தென்பாண்டிச் சிங்கம் வாளுக்கு வேலி அம்பலத்தின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.