எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மின்னணு மறுஅளவை(Digital Re-Survey) செய்து, தமிழகத்திற்குச் சொந்தமான கிராமங்களை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு கேரள அரசு முயற்சித்து வருவதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கேரளாவின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இருமாநில எல்லை பகுதியில் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட்டு சர்வே செய்வதற்கு அப்போது தமிழகத்துடன் ஒத்துழைக்காத கேரளா, இப்போது தமிழகத்தின் அனுமதியின்றியே இந்த அளவீட்டு பணியை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழகத்திற்குச் சொந்தமான பல இடங்களை ஏற்கனவே படிப்படியாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் கேரளா, தற்போது முழுமையாக அவற்றைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், கடந்த 1ஆம்தேதி முதல் நடைபெறும் இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்தாமல் தி.மு.க அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை. இந்த முறை தமிழகத்தின் நிலங்களும் பறிபோய்விடுமோ? ஸ்டாலின் அரசு விழித்துக்கொள்ளுமா? இல்லை தமது கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவிற்காக தமிழக நிலப்பகுதியை தூங்குவது போல நடித்து விட்டுக்கொடுக்கப்போகிறார்களா?

தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசு வேலைக்காக முயற்சித்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக தி.மு.க அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமின்றி, பணியிலுள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவதையும் தனியார்மயமாக்க தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு எந்திரத்தின் மூளையாக செயல்படும் அரசு ஊழியர்களை புதிதாக நியமிப்பதையும் ஏற்கனவே இருப்பவர்களை கட்டுப்படுத்துவதையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தனியார் வசம் போய்விடாதா? சற்றேறக்குறைய இது தமிழ்நாட்டையே தனியாருக்கு விற்பதற்குச் சமமாகும். புரட்சித்தலைவரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.வின் போலி திராவிட மாடல் அதைத்தான் செய்ய விரும்புகிறதா? தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசின் அரசாணை எண் 115-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அரசு ஊழியர்கள், இளைஞர் சக்தி மற்றும் பொதுமக்களோடு இணைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.