உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் தமிழ்நாட்டிற்கான உரிய தண்ணீரை திறந்துவிட தொடர்ந்து மறுத்துவரும் கர்நாடக அரசிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை கர்நாடக மாநிலம் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போதுமான மழையில்லை என காரணம் கூறி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் திரு. டி.கே.சிவக்குமார் பேசியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வஞ்சிக்கும் வகையிலும் தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் வகையிலும் கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.சிவக்குமார் பேசியிருப்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல. காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் போதிய தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், இனியும் இரட்டைவேடம் போடாமல் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு வரும்போது வலுவான வாதங்களை முன்வைத்து தமிழ்நாட்டிற்கான நீரை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை (COMPANY TAX) உயர்த்த முடிவு செய்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கான நிறும வரியை மூன்று மடங்கு உயர்த்த உத்தேசித்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் மீது ஏற்கனவே சொத்துவரி, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு உள்ளிட்ட தாங்க முடியாத சுமைகளை ஏற்றியுள்ள நிலையில் தற்போது நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நிறுமவரியை மூன்று மடங்கு வரை உயர்த்த முடிவு செய்திருப்பது ஒட்டுமொத்தமாக தொழில் நிறுவனங்களையே முடக்குவதற்கு சமமாகும். எனவே சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட நிறும வரி உயர்வுக்கான அறிவிப்பாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவதோடு, இது போன்ற மக்கள் நேரடியாக பாதிக்கக்கூடிய விசயங்களில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.