தலைமைக் கழக அறிவிப்பு: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா: சென்னையில் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்! அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, பகுத்தறிவை அனைவரின் உள்ளங்களிலும் புகுத்திய ஆளுமையாக, தமிழ்ச் சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் பெறச்செய்த ஒப்புயர்வற்ற தலைவர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா வருகின்ற 17.09.2025, புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, வட்ட, செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

துவரம்பருப்பு கொள்முதலில் குஜராத்திற்கு ஒரு விலை தமிழகத்திற்கு ஒரு விலையா? – குறைவான விலையில் தரமான பருப்பு கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். நியாய விலைக்கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளியில் தமிழகத்திற்குத் துவரம்பருப்பு கிலோ ஒன்று ரூ88.50க்கு வழங்க முன்வந்திருக்கும் பருப்பு நிறுவனங்கள் குஜராத்திற்கு ரூ.81க்கு வழங்குவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. குஜராத் மாநிலத்திற்கு ரூ.81க்கு துவரம் பருப்பை வழங்கும் நிறுவனங்கள் தமிழகத்திற்கு மட்டும் அதே துவரம்பருப்பை அதைவிட கிலோ ஒன்றுக்கு ரூ.7.50 கூடுதலாக வைத்து ரூ.88.50க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.60 ஆயிரம் டன் அளவிற்கான துவரம்பருப்பைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பருப்பு நிறுவனங்கள் கூறியிருக்கும் தொகைக்குப் பருப்பைக் கொள்முதல் செய்தால் தமிழக அரசுக்கு சுமார் 45 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பருப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி குஜராத் மாநிலத்திற்கு வழங்கும் அதே விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, தரமான துவரம்பருப்பைக் கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் எனத் தாய்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையை உலகமெங்கும் பறை சாற்றிய கவிஞரும், தன் எழுத்துக்களின் மூலம் மக்கள் மனதில் விடுதலை உணர்வைத் தூண்டிய சுதந்திரப் போராட்ட வீரருமான மகாகவி பாரதியார் அவர்களின் நினைவுதினம் இன்று. கவிஞராக, மொழிப் பற்றாளராக, தேச பக்தராக, சமூக சீர்திருத்தவாதியாக என பல்வேறு பரிமாணங்களிலும் தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை ஆகியவற்றை முன்னிறுத்தி காலத்தால் அழியாத புரட்சி கவிதைகளைத் தந்த மகாகவி பாரதியார் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.

தலைமைக் கழக அறிவிப்பு :கடலூர் மேற்கு மாவட்டம் : கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கடலூர் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகரக் கழக செயலாளர் திரு.B.K.மணிவண்ணன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.