திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அடையாளம் தெரியாத கும்பல் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய வெறியாட்டத்தில் 2 பேர் உயிரிழப்பு – பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிய கஞ்சா மாடல் திமுக அரசை வரும் தேர்தலின் மூலம் நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவோம். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே போதையிலிருந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு, அவ்வழியே பயணிப்போர் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் வடமாநிலத் தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இதே திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவு பீடத்தில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் தற்போது, பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இது போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் களைந்து பொதுமக்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டிய திமுக அரசு, அன்றாடம் அரங்கேறும் குற்றங்களைத் தடுக்க தவறியும், அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் உதவித் தொகை எனும் பெயரில் பணம் கொடுத்து மக்களை சரிக்கட்ட நினைப்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒருபோதும் செல்லுபடியாகாது. எனவே, இத்தகைய கொடூரச் செயல்களை அரங்கேற்றிய அடையாளம் தெரியாத நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் அதே நேரத்தில், அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தைச் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலைக்குத் தள்ளிய திமுகவின் ஆட்டமும் கொட்டமும் வரும் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைவது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணகிரி அருகே இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த திமுக நிர்வாகி கைது – பச்சிளம் குழந்தைக்குக் கூட பாதுகாப்பில்லாத திமுக அரசை வரும் தேர்தலில் வீட்டிற்கு அனுப்புவது தான் ஒரே தீர்வுகிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்திருப்பதாக திமுகவின் இளைஞரணி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பச்சிளம் குழந்தைகள், கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் வசிக்கும் வயதான முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றிவிட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எனப் பெருமை பேசுவதும், பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்வதும் வெட்கக் கேடானது. கஞ்சா விற்பனையில் தொடங்கி கள்ளச்சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த திமுக நிர்வாகிகளைக் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவே, தற்போது அரங்கேறியிருக்கும் இந்த கொடூர சம்பவத்திற்கு அடிப்படை காரணம் எனப் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பச்சிளம் குழந்தை என்று பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குரூர மனம் படைத்த திமுக நிர்வாகிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தும் இந்நேரத்தில், தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ, வரும் தேர்தலில் திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவது தான் ஒரே தீர்வாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.