மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும் தலைசிறந்த கண் சிகிச்சை நிபுணருமான பத்மஸ்ரீ திரு.நம்பெருமாள் சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. மதுரையில் எளிமையாகத் தொடங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையை உலகளவில் சிறந்த மருத்துவமனையாக மாற்றியதில் அளப்பரிய பங்காற்றிய மருத்துவர் திரு. நம்பெருமாள் சாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – அண்டை மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் அரசு ஊழியர்கள் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் 309வது வாக்குறுதியாக வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருவது கடும் கண்டனத்திற்குரியது.கவன ஈர்ப்பு, அடையாளம், பணி புறக்கணிப்பு, வேலைநிறுத்தம், சாலைமறியல் என அனைத்துவிதமான போராட்டங்கள் நடத்தியும், செவிசாய்க்காத திமுக அரசால், வேறுவழியின்றி 72 மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அளவிற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தள்ளப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அரசு அமைத்த குழுவின் கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அக்குழு ஆலோசனை நடத்தியதாகவோ, அரசு ஊழியர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகவோ இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது போலத் தமிழக அரசு நாடகமாடி வருவது அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயலாகும்.எனவே, இனியும் குழு அமைக்கிறோம், கருத்துக்களைக் கேட்கிறோம், ஆய்வு செய்கிறோம் எனக் காரணங்களை அடுக்கி காலத்தைத் தாழ்த்தாமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் 25-07-2025 சிவகங்கை (ராஜ் மஹால்), 26-07-2025 திருமங்கலம்(GKM பேலஸ்), 28-07-2025 நாங்குநேரி(சுப்புலட்சுமி திருமண மஹால்), 30-07-2025 ஸ்ரீரங்கம் (AG திருமண மஹால்) நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளின் வாயிலில் மாணவ, மாணவியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவதா? – திமுகவின் ஆட்சி, அதிகார துஷ்பிரயோகத்திற்கு மக்கள் ஒன்றிணைந்து முற்றுப்புள்ளி வைப்பது உறுதி. தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் திமுக மாணவரணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுகவில் இணைவதற்கான உறுப்பினர் சேர்க்கை துண்டறிக்கை மாணவர்களிடம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உறுப்பினர் சேர்க்கை எனும் பெயரில் வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத் தொகை வருகிறதா? இலவச பேருந்தில் தானே பயணம் செய்கிறீர்கள்? என மிரட்டி ஆதார் மற்றும் தொலைப்பேசி எண்களைப் பெற்றுக் கொண்ட திமுகவினர், தற்போது கல்லூரிகளின் வாயிலில் நின்று மாணவர்களிடம் துண்டறிக்கை விநியோகிப்பது கடும் கண்டனத்திற்குரியது. உதவிப் பேராசிரியர்கள் தொடங்கி முதல்வர்கள் வரை கல்லூரிகளில் காலியாக இருக்கும் பல ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்பிடவும், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்திடவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, கல்லூரி வாயிலில் நின்று துண்டறிக்கை விநியோகிப்பதும், அவர்களை திமுகவில் இணைக்க முயற்சிப்பதும் முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம் ஆகும். கட்சிக் கொடியுடன் கல்லூரி வாயில்களை மறித்து கும்பலாக நிற்கும் திமுகவினரைக் கடந்து செல்லவே அச்சப்படுவதாக மாணவ, மாணவியர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவினரின் இத்தகைய செயல்பாடுகள் கல்விக்கு இடையூறை ஏற்படுத்தும் என்பது முதலமைச்சருக்குத் தெரியவில்லையா ? ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் வீடு வீடாகச் சென்று மிரட்டினாலும், கல்லூரி வாயிலில் நின்று கூவிக்கூவி துண்டறிக்கை வழங்கினாலும் திமுக ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக மக்கள் அதற்கான பாடத்தை வரவிருக்கும் தேர்தலில் புகட்டுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் கூறிக் கொள்கிறேன்.

நாமக்கல் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகிக்குத் தொடர்பிருப்பதாகப் புகார் – ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா திமுகவினர்?நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழைத் தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் வாடும் எளிய மக்களிடமிருந்து சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்படும் சிறுநீரகங்கள், ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் பல லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுவதன் பின்னணியில் திமுக நிர்வாகி ஒருவர் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையிலும் தொடர்பிலிருந்த திமுகவினர், தற்போது சட்டவிரோத சிறுநீரகத் திருட்டு சம்பவங்களுக்கும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டிருப்பதன் மூலம், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையும் கடிக்கும் சூழலுக்கு திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று கேட்கத் தோன்றுகிறது.<எனவே, ஏழைத் தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைக் கொள்ளையடித்த கும்பல், இடைத்தரகாக செயல்பட்ட திமுக நிர்வாகி, உடந்தையாக இருந்த தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறுநீரகத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.