கூலி உயர்வு கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் – தமிழக அரசு உடனடியாக தலையிட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக வேண்டும்.கூலி உயர்வு வழங்கக் கோரியும், மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கடந்த சில தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய பின்னரும், மீண்டும் அதே போராட்டத்தில் பங்கேற்றிருப்பது, கூலி உயர்வு விசைத்தறியாளர்களுக்கு எத்தகையை அவசியமானது என்பதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.கூலி உயர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், துறை சார்ந்த மற்றும் மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்திருப்பதால் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறியாளர்களின் தொடர் போராட்டம் தொடர்பாக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் போது, இப்பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற தமிழக அமைச்சர்களின் வாக்குறுதி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் போல கிணற்றில் போட்ட கல்லாகவே இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்ளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு அவர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை – விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தவா? முதலமைச்சர் குடும்பத்தின் வருமானத்தை பெருக்கவா ? – திமுகவின் குடும்ப ஆட்சிக்கு அடுத்து வரும் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி. தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை -2025 மீது பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த எந்தவித முன்னெடுப்பையும் எடுக்காத திமுக அரசு, முதலமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த நிறுவனத்தை தொடங்கிய பின் விண்வெளிக் கொள்கையை வெளியிட்டிருப்பது பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் போது ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகளும், உருவாகும் என சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளும் கானல் நீராகவே காட்சியளித்து வரும் நிலையில் முதலமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த தனி நபர் ஒருவருக்காக அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், குடும்பத்தினருக்காக மட்டுமே அமைச்சரவையை கூட்டி விண்வெளிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கும் முதலமைச்சருக்கும் திமுக ஆட்சிக்கும் அடுத்து வரும் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தலைசிறந்த படைத்தளபதியும், போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத மாவீரராக திகழ்ந்தவருமான விடுதலை போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் சரணடைய விருப்பமின்றி தாய் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் தற்கொலைப்படை வீரராக மாறி வீரமரணமடைந்த சுந்தரலிங்கனார் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்கிடுவோம்.

திருநெல்வேலி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவர் – பள்ளி மாணவர்கள் மத்தியில் வேரூன்றியிருக்கும் வன்முறையை அகற்றி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது திமுக அரசின் கடமை. திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் இயங்கிவரும் பள்ளி ஒன்றின் வகுப்பறைக்குள்ளாக நடைபெற்ற மோதலில் மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் வெட்டியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மோதல் சம்பவத்தை தடுக்க முயன்ற பள்ளி ஆசிரியர் மீதும் நடைபெற்றிக்கும் தாக்குதல் சம்பவத்திற்கான அடிப்படைக் காரணம் இரு மாணவர்களிடையே பென்சில் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு என காவல்துறையினர் கூறியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. நாங்குநேரி அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர் வீடுபுகுந்து சக மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடங்கி அடுத்தடுத்து அரங்கேறும் இதுபோன்ற மோதல் சம்பவங்களும், வன்முறை நிகழ்வுகளும் பள்ளி மாணவர்கள் மத்தியில் வன்முறை எந்தளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதையே வெளிச்சம்போட்டு காட்டுகிறது. எனவே, இச்சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டிய பள்ளிகளில், இத்தகையை சம்பவங்கள் தொடராத வகையில் பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சமுதாயத்தின் அடித்தளத்தில் உதித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமை சிற்பியாக விளங்கியவரும், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவருமான சட்டமேதை டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று. சுதந்திர போராட்ட வீரராக, தலைசிறந்த அரசியல்வாதியாக, சுயமரியாதை சுடரொளியாக, ஆற்றல் மிக்க எழுத்தாளராக, சட்ட மாமேதையாக மக்களுக்காகவே வாழ்ந்த டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றிட அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.