காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது – தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும். கர்நாடக மாநில நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த அம்மாநில முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்கள், மத்திய அரசின் அனுமதியை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், அணைகட்டும் பணிகளை மேற்கொள்ள பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக மேகதாது அணை குறித்து நடைபெற்ற விவாதத்தில் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றது விவசாயிகளுக்கு இழைத்த மாபெரும் துரோகம் ஆகும். தமிழ்நாட்டின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில், இதயதெய்வம் அம்மா அவர்கள் நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தினால் பெற்ற உரிமையை காக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. எனவே, டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சட்டரீதியாக தடுத்து நிறுத்துவதோடு, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு நியமனத் தேர்விலிருந்து விலக்கு, TNPSC மூலம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புத் தேர்வு, ஊக்கத் தொகையை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், காவல்துறை மூலம் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வது தமிழக அரசின் அதிகாரப்போக்கையை வெளிப்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தங்களின் போராட்டங்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தங்களை சந்திக்க கூட மறுப்பது ஏன் ? என பார்வை மாற்றுத்திறனாளிகள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகள உடனடியாக நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

JEE முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இடைவிடா பயிற்சி மற்றும் தளராத முயற்சியின் காரணமாக 11 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற தேர்வில் 300க்கு 300 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றிருக்கும் மாணவர் முகுந்த் அவர்களின் அடுத்த கட்ட கல்விப் பயணம் சாதனைப் பயணமாக தொடர எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.