அரசு மருத்துவர்களை தரக்குறைவாக நடத்தும் சுகாதாரத்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்களின் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும். சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் ஒன்றில் மருத்துவர்களை தரக்குறைவாக பேசிய சுகாதாரத்துறை உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனை வரை நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறை, தன்னலம் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவர்களையும் தரக்குறைவாக நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது. 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தியிருப்பது, வடகிழக்கு பருவமழை நேரத்தில் அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை, எளிய பொதுமக்களையும், நோயாளிகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அரசு மருத்துவர்களின் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

லஞ்சப் பணத்துடன் சிக்கிய ஊட்டி நகராட்சி ஆணையரை திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது – லஞ்சப் புகாரில் சிக்கிய அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி ஊழலை ஊக்குவிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே 11.70 லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் சிக்கிய ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா அவர்கள், திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. விதிகளை மீறி லஞ்சம் பெற்று ஆதாரங்களுடன் கையும் களவுமாக சிக்கிய ஜஹாங்கீர் பாஷா அவர்கள், காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட இரு வாரத்திற்குள்ளாகவே திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து திமுக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு ஊழலை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் எழும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை கண்டுகொள்ளாத நிலையில், தற்போது லஞ்சப் பணத்துடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அழகு பார்ப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் சிக்கிய ஜஹாங்கீர் பாஷா அவர்களை திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக பிறப்பித்திருக்கும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கின் படி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை பல்லாவரம் அருகே அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் ஊழியர் காயம் – ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்கத் தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டனம். சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் அருகே இயங்கி வரும் அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அங்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையிலும், மலிவு விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கத்திலும் இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்கத் தவறிய திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது. அம்மா உணவகங்களை மேம்படுத்த கடந்த ஜூலை மாதம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 21 கோடி ரூபாயில் அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவோ, உணவின் தரத்தை மேம்படுத்தவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் மையங்களாக செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை முடக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, போதுமான நிதியை ஒதுக்கி ஆரோக்கியமான முறையில் அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.