December 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தும் பாதிப்பிலிருந்து மீள முடியாத பொதுமக்கள் – உணவுக்காக மக்களை வீதிக்கு வந்து போராடும் சூழலை ஏற்படுத்திய திமுக அரசின் அக்கறையின்மை கடும் கண்டனத்திற்குரியது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து மூன்று தினங்கள் ஆன பின்பும் அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட மக்கள் தவித்து வருவதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. குடியிருப்புகள் முழுவதையும் மழைநீர் சூழ்ந்த நிலையில் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, தங்குவதற்கு இடமின்றி தவித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்துத் தராமல் அவர்களை வீதிக்கு வந்து போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. அதிலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி சாத்தனூர் அணையிலிருந்து பெருமளவு நீரை திறந்துவிட்டதே, விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு கிராம மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்க முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட வந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாமல் பிரதான சாலைகளை மட்டுமே பார்வையிட்டுச் சென்றதாக கூறப்படும் நிலையில், உணவுக்காக கையேந்த வைத்த திமுக அரசின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடே அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் மீது சேற்றை வீசும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதோடு, இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிடுமாறும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
December 3, 2024 In ticker‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதி குருவான பால பிரஜாபதி அடிகளார் அவர்களின் மனைவி திருமதி இரமணிபாய் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திருமதி இரமணிபாய் அவர்களை இழந்துவாடும் பால பிரஜாபதி அடிகளார் அவர்களுக்கும், உறவினர்கள் மற்றும் பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
December 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மக்கள் விரோத திமுகவை ஆட்சியிலிருந்து அடியோடு அகற்றிடுவோம் ! துரோகக் குணம் கொண்ட சுயநலக் கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்டிடுவோம் ! இதயதெய்வம் அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைக்க நாம் அனைவரும் சபதமேற்றிடுவோம் !! டிசம்பர் 5ஆம் தேதி இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் நாம் அனைவரும் ஒன்று கூடி உறுதியேற்றிடுவோம். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு இரும்புப் பெண்மணியாக செயல்பட்ட நம் இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் நம் கழகத்தின் வெற்றி முத்திரையை பதித்திடுவோம்!
December 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும், நலன்களையும் பேணி பாதுகாத்திடும் நோக்கில் அனுசரிக்கப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று. சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்துவதோடு, மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் அனைத்தையும் அறிந்து அவர்களின் வாழ்வு மலர ஒன்றிணைந்து உதவிட இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
December 2, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருச்சியில் பள்ளிகளுக்கு அருகே இயங்கும் மதுபானக்கடைகளை அகற்றக்கோரி நடைபெறும் கழகத்தினரின் போராட்டத்திற்கு அனுமதி – மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் திமுக அரசுக்கு நீதிமன்றம் கொடுத்திருக்கும் சவுக்கடி. திருச்சி மாவட்டம் சீனிவாசா நகர் மற்றும் உறையூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அனுமதியோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில், உறையூர் குறத் தெருவில் மக்கள் ஆதரவோடு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தில் சிறிதளவும் அக்கறையற்ற திமுக அரசுக்கும், மக்கள் நலன் கருதி போராட முயன்ற கழகத்தினருக்கு அனுமதி மறுத்து அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறைக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு அமைந்திருக்கிறது. திருச்சி மாவட்டம் சீனிவாசா நகர் மற்றும் உறையூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திமுக அரசு மூட மறுத்து இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படுமேயானால் திருச்சி மாநகர் முழுவதும் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
December 2, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வளமான இந்தியாவை உருவாக்குவதில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாண்புமிகு மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
December 2, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் சிக்கித் தவிப்பு – மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் மண்சரிவு ஏற்பட்டு மலை உச்சியில் இருந்த பாறைகள் உருண்டு அடிவாரப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் விழுந்ததில் 7 பேர் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மண்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பான முறையில் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். புயல் கரையை கடந்த நிலையிலும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறுகிய கால இடைவெளியில் கொட்டித் தீர்த்த கனமழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முழுமையாக முடங்கியுள்ளது. எனவே, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மண்சரிவில் சிக்கியிருக்கும் 7 பேரையும் பாதுகாப்பாக மீட்பதோடு, கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட ஏதுவாக உரிய நிவாரணத் தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தொடர் கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்திருக்கும் மழைநீர் – இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு உதவ கழகத்தினருக்கு அன்பான வேண்டுகோள்! ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதோடு, பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற அத்தியாவசிய உதவிகளை செய்துத் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
November 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வாடகை கட்டடங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெற வேண்டும் – ஏற்கனவே மாநில அரசால் நலிவடைந்து வரும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களின் கட்டடங்களுக்கான வாடகை மீது விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசால் ஏற்கனவே பலமுறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வாலும், அதிகரிக்கப்பட்ட சொத்து வரியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வணிக நிறுவனங்களின் கட்டடங்களின் வாடகை மீது 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது போல் அமைந்திருக்கிறது. எனவே, வணிக நிறுவனங்களின் கட்டடங்களின் வாடகை மீது விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்து, நலிவடைந்து வரும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
November 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகொலை – ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக காவல்துறையை கொண்டிருப்பதாக பெருமை பேசும் முதலமைச்சர், அந்த காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே பயன்படுத்துவதே ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கான முக்கிய காரணம். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேலமலை கவுண்டன்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை படுகொலை செய்துவிட்டு வீட்டிலிருந்து பணம், நகைகளை அடையாளம் தெரியாத கும்பல் திருடிச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, தற்போது பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மூவரை கொலை செய்யும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உலக அளவில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறையை கொண்டிருப்பதாக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் பெருமை பேசி முடித்த இரு தினங்களுக்குள்ளாக நடைபெற்றிருக்கும் இந்த கொலைச் சம்பவங்கள் முதல்வரின் தலைமையில் இயங்கும் தமிழக காவல்துறை முற்றிலும் செயலிழந்து ஏவல் துறையாக மட்டுமே செயல்படுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, இந்த படுகொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்துவதை தவிர்த்து சட்டம் ஒழுங்குகளை சீரமைக்கும் வகையில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.