December 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் – சென்னை பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி கடந்த பத்து ஆண்டுகளில் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் சுமார் 95 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்காமல் இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கல்விப் பணிக்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணிக்கும் ஆசிரியர்கள் ஓய்வுபெற்ற பின்பு அவர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை உரிய நேரத்தில் வழங்காமல் இழுத்தடிப்பதும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் வழங்க மறுப்பதும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அவலநிலையை வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஏற்கனவே, கடுமையான நிதி நெருக்கடி, மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்க நிதியில்லை, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் சென்னை பல்கலைக்கழகம் தற்போது ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்களை வழங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் படிப்படியாக அதன் தனித்தன்மையை இழந்துவருவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இந்தியாவின் பழமையும், பெருமையுமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக விடுவிப்பதோடு, சிறப்பு நிதியை உருவாக்கி அப்பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியை சீரமைத்திட வேண்டும் என உயர் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
December 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் தனது உணர்ச்சிக்குக் கவிதைகளின் மூலம் நாட்டு மக்கள் மனதில் விடுதலை உணர்வை மேலோங்கச் செய்தவர், தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ்த் தொண்டுக்காக அர்ப்பணித்திட்ட புரட்சிக் கவிஞர் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. கவிஞராக, கட்டுரையாளராக, இதழியலாளராக, தேச பக்தராக, சமூக சீர்திருத்தவாதியாக, சுதந்திரப் போராட்ட வீரராக பல்வேறு பரிமாணங்களிலும் தாய்மொழியாம் தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
December 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது – ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முன்வர வேண்டும்.ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முயன்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்லாது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் இருப்பதே தொடக்கக்கல்வி ஆசிரியர்களைத் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்களின் துயர நிலை குறித்தும் அரசின் கவனத்தை ஈர்க்கவும் நடைபெற்ற போராட்டத்தை காவல்துறையினரைக் கொண்டு அடக்க முற்படுவதும், அவர்கள் மீது அடக்குமுறையை ஏவ நினைப்பதும் எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
December 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் – அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு யூரியா உரம் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமான யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா உரம் போதுமான அளவில் இல்லாத நிலையில், பயிரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், வேறுவழியின்றியும் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் விவசாயிகளிடம், யூரியாவுடன் மற்ற உரங்களையும் சேர்த்து வாங்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. காவிரி டெல்டா உட்பட நடப்பாண்டுக்கான தமிழகத்தின் ஒட்டுமொத்த சாகுபடி பரப்பளவைக் கணக்கிட்டு அதற்குத் தேவையான உரங்களை போதுமான அளவிற்கு முன்கூட்டியே இருப்பு வைக்கத் தவறியதே தற்போதைய உரத்தட்டுப்பாட்டிற்கு காரணம் என பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உரம் உடனடியாக விநியோகிக்கப்படுவதையும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் போதுமான அளவு இருப்பு வைக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
December 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஸ்வயம் (Swayam) தேர்வை எதிர்கொள்ளும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு – தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களையே ஒதுக்கீடு செய்வதை தேசிய தேர்வு முகமை உறுதி செய்திட வேண்டும். டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பி.எட் மாணவர்களுக்கான ஸ்வயம் (Swayam) தேர்வு நடைபெற உள்ள நிலையில்,அத்தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்த நிலையிலும், கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அம்மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த ஸ்வயம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கான சான்றிதழ்களைப் பல்கலைக்கழகங்களின் மூலம் பெறமுடியும் என்ற சூழலில், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அவர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது உளவியல் ரீதியிலும் மிகுந்த உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை உடனடியாக ஒதுக்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமையையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.
December 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதலில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு.சக்திவேல் அவர்கள் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தேசப்பாதுகாப்பு பணியின் போது பயங்கரவாதிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு உயிர்நீத்த ராணுவ வீரர் திரு.சக்திவேல் அவர்களுக்கு எனது வீரவணக்கத்தை செலுத்துவதோடு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
December 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மூளையாக விளங்கியவரும், சமுதாய அமைப்பிலும் பொருளாதார ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சம வாய்ப்பு மற்றும் அதிகாரம் பெறுவதற்காகத் தொடர்ந்து போராடியவருமான சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவுதினம் இன்று. சட்டத்துறை மட்டுமல்லாது அரசியல், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த வல்லுநராகத் திகழ்ந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
December 5, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
December 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் – இந்திய அரசியலில் இரும்புப் பெண்மணியாய் வலம் வந்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணித்து, அவரது லட்சியத்தையும், கொள்கைகளையும் மீட்டெடுத்து மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
December 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுதினம் (05.12.2025) – உறுதிமொழி