அரசு மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் மகளின் கால் பாதம் பறிபோனதாகப் போராடும் தலைமைக் காவலர் – ஐந்தாண்டுகளுக்கும் மேலான தலைமைக் காவலரின் போராட்டம் தவெக ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா ? அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமைச் செயலக நுழைவுவாயிலில் போராட்டம் நடத்திய காவல்துறையைச் சார்ந்த தலைமைக் காவலர் திரு கோதண்டபாணி அவர்கள் சக காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தனது மகளுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தலைமைக் காவலர் திரு கோதண்டபாணி அவர்களைக் கடந்த ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய புதிய ஆட்சியாளர்களும் அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தலைமைக் காவலர் திரு.கோதண்டபாணி அவர்களின் புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கால் பாதத்தை இழந்த அவரின் மகளுக்கு மேல் சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ

சோழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் ஆவணங்களில் ஒன்றான 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஆனைமங்கல செப்பேடுகளை நெதர்லாந்திருந்து மீட்டு தாய்நாட்டிற்குக் கொண்டுவரும் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சோழப்பேரரசின் தலைசிறந்த ராஜ்ஜியத்தையும், பண்டைய காலத் தமிழர்களின் மகத்தான வரலாற்றையும் பறைசாற்றும் இந்த செப்பேடுகள் மத்திய அரசின் தொடர் முயற்சியால் நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்டிருப்பது நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெருமைப் படக்கூடிய நிகழ்வாகும். @PMOIndia@narendramodi

உலகின் பழமையான அறிவியல் அகாடமிகளில் ஒன்றான பிரிட்டன் ராயல்டி சொசைட்டி அமைப்பின் உறுப்பினராகத் தேர்வாகியிருக்கும் வேளாண் விஞ்ஞானி திரு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் புதல்வி விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியல்,சுகாதாரம் மற்றும் உலகளாவிய நெருக்கடி மேலாண்மை ஆகியவற்றைத் திறம்படக் கையாண்டு பொது சுகாதாரத்துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்களின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் ராயல் சொசைட்டி அமைப்பின் மூலம் மேன்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

தமிழ் மக்களின் கல்வி உரிமைகளுக்காகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடியவரும், மக்கள் அனைவராலும் தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுபவருமான அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்த தினம் இன்று சித்த மருத்துவராக, சிறந்த சிந்தனையாளராக கல்வியாளராக, பத்திரிகையாளராக என பல்வேறு வழிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் பிரதிநிதித்துவ உரிமையைப் பெறுவதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய போராளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு  உள்ளாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் – குரூர மனம் படைத்த கயவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 35 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்பும் காட்சிகள் மாறாமல் அடிக்கடி அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைப் பார்க்கும் போது, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்க முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாட்டிற்கு வராமல் பெயரளவிலேயே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே,  மாற்றுத்திறனாளி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைந்து கைது செய்து கடுமையான தண்டனையை வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியாளர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் தொடரும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வசித்துவரும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு ஹாஜா முகைதீன் அவர்களின் இல்லத்திற்குள் புகுந்த போதைக் கும்பல் கொடூரமான முறையில் தாக்கியதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் போதைக் கும்பல் நள்ளிரவு நேரத்தில் செய்தியாளர் ஒருவரின் இல்லத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவிற்கான அசாதாரண சூழல் தவெக அரசின் மீது குற்றவாளிகளுக்குத் துளியளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. கடந்த ஐந்தாண்டுக்கால திமுக ஆட்சியின் போது, உண்மைச் செய்திகளைத் துணிச்சலுடன் வெளியிடும் செய்தி நிறுவனங்களை அச்சுறுத்துவது, ஆளுங்கட்சியினர் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் தவெக ஆட்சியிலும் தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய போதைக் கும்பலைக் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, செய்தியாளர்கள் தங்களின் பணியில் சுதந்திரமாக ஈடுபடுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@NewsJTamil

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் – ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும். உலகளவிலான சந்தையில் கச்சா எண்ணெயின் தொடர் விலையேற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், இயற்கை எரிவாயு விலை 2 ரூபாயும் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு புதிய விலை அமலுக்கு வந்துள்ளன. வளைகுடா நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் கொண்டுவருவதில் ஏற்பட்ட தடங்கலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி இழப்பாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றாலும், அதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏழை, எளிய மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுப் போக்குவரத்திற்கான செலவோடு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து அவர்களுக்கு பல்வேறு விதமான பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.