ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கக்கோரிப்போராடிய போக்குவரத்து ஊழியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.15வது ஊதிய ஒப்பந்தத்தின் படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் தற்போது வரை வழங்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசால் வேறு வழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 152வது தேர்தல் வாக்குறுதியான போக்குவரத்துப் பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றாத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.ஓட்டுநர், நடத்துநர் ஆட்சேர்ப்பு தொடங்கி அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு வரை போக்குவரத்துக் கழகங்களை படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, வாழ்நாளின் பெரும்பகுதியை போக்குவரத்துத்துறையில் பணியாற்றியே கழித்த ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களை எந்தவித நிபந்தனையுமின்றிவிடுவிப்பதோடு, அவர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான திருமதி. ரேணுகா தேவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திருமதி ரேணுகாதேவி அவர்களை இழந்துவாடும் திரு.டி.ஆர் பாலு அவர்களுக்கும், திரு டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையைக் கைவிட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்.தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதைக் கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் இறுதியில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தின் போது பேச்சுவார்த்தை எனும் பெயரில் அழைத்து பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம், தற்போதுவரை அவற்றை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.ஆட்சிப்பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மின்வாரிய மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருமே போராடிக் கொண்டிருப்பது திமுக அரசு நிர்வாகத்தின் படுதோல்வியையே வெளிப்படுத்துகிறது.சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தின் மீது வன்முறையை ஏவிக் கலைத்துவிட்டு, உடனடி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத அறிவிப்புகளை வெளியிட்டு திமுக அரசு நடத்திய நாடகத்தை மதுரையிலும் அரங்கேற்ற நினைத்தால் அதற்கான எதிர்வினைகள் கடுமையாக இருக்கும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என மதுரை மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் திரு. தொல் திருமாவளவன் அவர்களின் சிற்றன்னைதிருமதி.செல்லம்மாள் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. சிற்றன்னையை இழந்துவாடும் சகோதரர் திரு. தொல் திருமாவளவன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகாலாந்து மாநில ஆளுநர் மாண்புமிகு திரு இல.கணேசன் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.கண்ணியமிக்கத் தலைவராகத் திகழ்ந்த மாண்புமிகு திரு.இல கணேசன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.