தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரும் புகைப்படமும் நீக்கம் – தமிழுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவரின் பெயரை மறைக்க முற்படுவது அற்பத்தனமானது. தாய்மொழியாம் தமிழுக்கு என்று தனிப் பல்கலைக்கழகம் என்ற தமிழறிஞர்களின் கனவை நினைவாக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களால் தஞ்சையில் நிறுவப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில், அவருடைய பெயரும், புகைப்படமும் நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கி, சங்கம் வளர்த்த மதுரையில் உலகத் தமிழ் மாநாடு வரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உலகத் தமிழர்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரையும், புகைப்படத்தையும் நீக்கி அவருடைய புகழுக்கும், பெருமைக்கும் இழுக்கு ஏற்படுத்த முற்படுவது அற்பத்தனமான அரசியலாகும். எனவே, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றுவதை தனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதிய புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரும், புகைப்படமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக மக்கள் அனைவரும் அமைதியான சூழலில் வளமான வாழ்வை வாழ்ந்திடவும், சமூகப் பொருளாதார நிலையில் அவரவர் விரும்பிய உயர்ந்த நிலையை அடைந்திடவும் இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம். புதிய தொடக்கத்தோடு புத்துணர்வையும் அளிக்கும் இப்புத்தாண்டு, நம் அனைவருக்கும் ஏற்றம் நிறைந்த வளர்ச்சியையும், குறைவில்லாத வளத்தையும் வழங்கட்டும் எனக்கூறி, மீண்டும் ஒருமுறை எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

தமிழகம் போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் என்பது முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் – இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நடப்பாண்டில் சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 2,300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 102 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் வடக்கு மண்டல ஐ.ஜி திரு அஸ்ரா கார்க் அவர்களும் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழகம் போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாறியிருப்பதாக அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் கூறியிருக்கும் தகவல் முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாக அமைந்துள்ளது. திருத்தணி ரயில்நிலையம் அருகே கஞ்சா போதை தலைக்கு ஏறிய நிலையிலிருந்த சிறுவர்கள் சிலர், வடமாநில இளைஞர் ஒருவர் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதலின் தாக்கம் அடங்குவதற்கு முன்பாகவே, திருப்பூர் அருகே கோயில் திருவிழா ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை, போதை இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி விரட்டிய சம்பவம், தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் எந்தளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்கத் தவறியதன் விளைவே, சக மனிதர்களையே பட்டாக் கத்தியால் தாக்கி, துன்புறுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களின் மூலம் பரப்பும் அளவிற்கான கொடூரமான மனநிலையை உருவாக்கியுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுவதோடு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இயற்கை விவசாயத்தின் மூலம் அறிவுப்புரட்சியை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானியும், நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்யவும், மண் வளத்தைப் பாதுகாக்கவும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய பசுமைப் போராளியுமான நம்மாழ்வார் அவர்களின் நினைவுதினம் இன்று. இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றோடு பாரம்பரியமிக்க நெல் ரகங்களையும் மீட்டெடுத்து தன் வாழ்நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்த விவசாயியாக வாழ்ந்து மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழியை நாளும் பின்பற்றிட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.