சென்னை கோடம்பாக்கம் அருகே 16 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது – குற்றங்களைத் தடுக்க வேண்டியவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி சீரானதாக இருக்கும் ? சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தலைமைக் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத்  தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையில் பணியாற்றும் காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது  ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டிற்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன. எனவே, தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் மறந்து சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கைதாகியிருக்கும் தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@TVKPartyHQ@TVKVijayHQ

பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்: தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கருதி, தன் வாழ்நாள் முழுவதும் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாகத் திகழ்ந்ததோடு, இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தன் மகனையும் தியாகம் செய்ய முன்வந்த இறைத்தூதர் இப்ராகிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நாம் அனைவரும் நினைவில் வைத்து வணங்கிடுவோம். இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிடச் சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

தவெக அரசின் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி – மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற பித்தலாட்டத்தை தொடர்ந்து இந்த விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்பதும் ஏமாற்று வேலையே. 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம். இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்ய விவசாயிகள் சுமார் 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் நிலையில், 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி எனவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி எனவும் அரசு அறிவித்திருப்பதற்கு டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதியின்படி தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.