மதுரையில் தனது தேநீர் கடை முன்பாக மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை – தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்றிட வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது தான் ஒரே தீர்வு.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாமநத்தம் அருகே அதிமுகவின் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் திரு.தனசேகர பாண்டியன் என்ற செந்தில் அவர்கள் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதே மதுரையில் ஜெய்ஹிந்த் புரம் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசியதாகச் சிறுவர்கள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தனது தேநீர் கடையின் முன்பு மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை கொலை நகரமாக மாற்றயதோடு சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல், வெற்று விளம்பரத்தில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராகப் பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, மதுரை அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு, எஞ்சிய நாட்களிலாவது தமிழக மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கித் தந்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

பணிநிரந்தரம் தொடர்பாக அமைச்சருடன் டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு திட்டம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் திரு முத்துச்சாமி அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஏற்கனவே நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்காத டாஸ்மாக் நிர்வாகம், தற்போது மதுபான காலி பாட்டில்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற பணிச்சுமையையும் ஏற்றியிருப்பது டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, குறைவான ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டிய திமுக அரசு, காவல்துறையை ஏவி அவர்கள் மீது அடக்குமுறையைக் கையாள முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளை மீண்டும் அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

விவசாயப் பெருமக்களின் நலனுக்காக இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியை நிறுவியவரும், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தவருமான உழவர் பெருந்தலைவர் திரு.நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்த தினம் இன்று. இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு நியாயமானவிலை என விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளை மாபெரும் போராட்டங்களின் மூலம் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வெற்றியும் கண்ட விவசாயிகளின் விடிவெள்ளி திரு.நாராயணசாமி நாயுடு அவர்களின் அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையை அவசர கதியில் திறப்பது ஏன் ? கூட்டணிக் கட்சிகளே ஒன்று திரண்டு போராடும் அளவிற்கு அவலமிக்க ஆட்சியை நடத்துவது தான் முதல்வர் சொல்லும் திராவிட மாடல் ஆட்சியா? திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அம்மருத்துவமனையில் பணியாற்ற போதுமான மருத்துவர்களும், அடிப்படை வசதிகளும் இல்லை எனக்கூறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவமனைக்கு அடிப்படைத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவு நியமிக்கப்படாத அரசு மருத்துவமனையை அவசரகதியில் திறக்கும் திமுக அரசின் முடிவுக்கு எதிராக அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு நடத்தியிருக்கும் இந்த போராட்டம் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் அவலம் என ஒட்டுமொத்த சுகாதாரத்துறையும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்தவித அடிப்படை வசதியுமில்லாத மருத்துவமனைகளைத் திறந்து பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, நாளை நடைபெறவிருக்கும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கான திறப்பு விழாவை உடனடியாக ஒத்திவைப்பதோடு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த பின்பு அதனைத் திறக்க முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.