அடிப்படை வசதிகள் கூட இல்லாத கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையை அவசர கதியில் திறப்பது ஏன் ? கூட்டணிக் கட்சிகளே ஒன்று திரண்டு போராடும் அளவிற்கு அவலமிக்க ஆட்சியை நடத்துவது தான் முதல்வர் சொல்லும் திராவிட மாடல் ஆட்சியா? திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அம்மருத்துவமனையில் பணியாற்ற போதுமான மருத்துவர்களும், அடிப்படை வசதிகளும் இல்லை எனக்கூறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவமனைக்கு அடிப்படைத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவு நியமிக்கப்படாத அரசு மருத்துவமனையை அவசரகதியில் திறக்கும் திமுக அரசின் முடிவுக்கு எதிராக அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு நடத்தியிருக்கும் இந்த போராட்டம் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் அவலம் என ஒட்டுமொத்த சுகாதாரத்துறையும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்தவித அடிப்படை வசதியுமில்லாத மருத்துவமனைகளைத் திறந்து பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, நாளை நடைபெறவிருக்கும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கான திறப்பு விழாவை உடனடியாக ஒத்திவைப்பதோடு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த பின்பு அதனைத் திறக்க முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை வியாசர்பாடியில் கஞ்சா பொட்டலத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர் – இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை ஊக்குவிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஒருவர், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் எடுத்து வந்திருந்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ தவறிய திமுக அரசின் காவல்துறையால், கல்வி பயிலும் பள்ளிக்கே மாணவர்கள் கஞ்சா பொட்டலத்தை எடுத்து வரும் அளவிற்கான சூழல் உருவாகியுள்ளது. கல்வி நிலையங்களில் தொடங்கி பொதுமக்கள் அதிகளவில் கூடும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் வரை நடைபெறும் மோதல் சம்பவங்களுக்கும், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்கும் அடிப்படை காரணமாக திகழும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை மென்மேலும் ஊக்குவிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? எனவே, பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அதன் பின்னணியில் செயல்படும் கும்பலையும் கண்டறிந்து, அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இளம் தலைமுறையின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தாய்த்தமிழ் நிலத்திற்கு தமிழ்நாடென்று பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன்; சாமானியரும் சரித்திரம் படைக்க முடியும் என்று நிரூபித்த கொள்கைக் கோமான்; தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயம்; பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினம் இன்று. ஆழ்ந்த அரசியல் ஞானம், சமூக மாற்றத்திற்கான சிந்தனை, மக்களின் மனங்களைப் புரிந்துகொள்ளும் மன தத்துவத்துடன், சாதி, மத பேதமற்ற சமுதாயத்தை காண விரும்பிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் வழியில் பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.