தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது. எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்

சட்டவிரோதமாக இயங்கும் குவாரி குறித்து செய்தி சேகரித்தால் குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா ? – திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் குவாரியில் முறைகேடு நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு.கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் ஆகியோர் மீது கொடூரத் தாக்கல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தனக்குச் சொந்தமான குவாரியில் நடைபெறும் சட்டவிரோதச் செயலை அம்பலப்படுத்தியதற்காக 50க்கும் அதிகமான குண்டர்களை ஏவி நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியிருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கொலை, கொள்ளைகளில் தொடங்கி பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திமுகவினர் தற்போது சட்டவிரோத குவாரிகளையும் நடத்தி வருவதன் மூலம் குற்றச்சம்பவங்களோடு திமுகவினர் பின்னிப் பிணைந்திருப்பது தான் திராவிட மாடலா ? கல்குவாரிகள் எனும் பெயரில் கனிமவளங்களைச் சுரண்டி அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படும் சட்டவிரோதச் செயல்கள் தமிழகத்தில் தொடர்கதையாகிவரும் நிலையில், அதனைச் செய்தியாகப் பதிவு செய்ய முயன்றோர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தின் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியுள்ளது.எனவே, சட்டவிரோத குவாரியை நடத்தியதோடு, அதனைச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு உரிய சிகிச்சை வழங்கிடத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.