திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தவெக நிர்வாகிகள் திடீரென புகுந்து ஆய்வு, இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் முதலமைச்சர் படத்தை வைத்து தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் என நாளுக்குநாள் தொடரும் தவெகவினரின் அத்துமீறலுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? தவெக ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்த தவெக நிர்வாகிகள் மீது இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே தற்போது அரசுப் பள்ளிகளுக்குள் புகுந்து பாடமெடுப்பது போல ரீல்ஸ் எடுப்பது, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான அவலநிலையை உருவாக்கியுள்ளது. சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டிய அரசுத் துறைகளுக்குள் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தேவையற்ற தலையீடு, அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தங்களைக் கொடுப்பதோடு, மக்கள் பணிகளிலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த வழிவகுக்கக் கூடும். எனவே, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழையும் ஆளுங்கட்சியினருக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்குவதோடு, அரசியல் தலையீடு அறவே இல்லாத வகையில் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கிடும் சூழலை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

வினாத்தாள் கசிவு குறித்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாக கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கின்றன.மருத்துவராக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை, நீட் தேர்வு பறித்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறமும், தேர்வு நடைமுறைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் குளறுபடிகள், வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் குழப்பங்கள் மறுபுறமும் மாணவ, மாணவியர்களின் மனநிலையை கடுமையாகப் பாதித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல, எந்தவொரு தேர்வின் முடிவும் ஒருவரின் எதிர்காலத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் முடிவுக்கு கொண்டுவராது என்பதையும் உணர்ந்து மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வை அச்சத்துடனோ பதற்றத்துடனோ அணுகாமல் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதேசமயம், தமிழ்நாட்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு நீட் தேர்வு மாணவர்கள் மீது மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும். எனவே, நீட் தேர்வைச் சுற்றியுள்ள நடைமுறை சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வெளிப்படையான, நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டி தமிழகத்தின் நீர்வளத்தை பாதிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் முயற்சிக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் முன்மொழிந்த தமிழக அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், இவ்விவகாரத்தில் பிரத்தியேக நடுவர் நீதிமன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த கருத்தை ஏற்று, அதனைத் தீர்மானத்தில் திருத்தமாக இணைத்த முதலமைச்சரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசினர் தீர்மானத்திற்கு கொள்கை அடிப்படையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளையில், தீர்மானத்தை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதில் வலியுறுத்தப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் நடைமுறையில் செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், டெல்டா மாவட்டங்களின் நீர்வளப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.