August 23, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 10 ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.தளராத தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும், தாய்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் இந்தியாவின் தங்கமகள் இளவேனில் வாலறிவன் அவர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
August 23, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை கண்ணகி நகர் அருகே மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு. சென்னை கண்ணகி நகர் பகுதியில் இன்று காலை தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. கண்ணகி நகர் மட்டுமல்ல எழில்நகர், பெரும்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் சேதமடைந்திருக்கும் மின்சாரக் கம்பிகள் குறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே தூய்மைப் பணியாளர் உயிரிழக்க முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தூய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பு என்ற கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி போராட்டத்தை கலைத்த திமுக அரசு, தற்போது தன் நிர்வாக அலட்சியத்தால் பறிபோன இந்த உயிருக்கு என்ன பதில் சொல்ல காத்திருக்கிறது? மேலும், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மட்டுமே தீர்வாகாது என்பதை உணர்ந்து, மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் சேதமடைந்து அபாயகரமான நிலையில் இருக்கும் மின் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மின்வாரியத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
August 22, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காது, மூக்கில் நகை அணிந்திருந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியாதா ? – மகளிரைத் தொடர்ந்து அவமதிக்கும் திமுகவினரின் அதிகாரத் திமிர் கடும் கண்டனத்திற்குரியது. விருதுநகர் அருகே மகளிர் உரிமைத் தொகை கேட்டு வந்த பெண்களிடம் காது, மூக்கில் தங்கம் அணிந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாது என வருவாய்த்துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்கள் ஏளனமாகப் பேசிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தன்னிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்த பெண் ஒருவரிடம், அம்மனுவை வாங்கி அவரின் தலையிலேயே அடித்த புகாருக்குள்ளான அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்கள், மகளிர் உரிமைத் தொகை கேட்டு வந்த பெண்களைத் தரக்குறைவாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, தற்போது காது, மூக்கில் நகை அணிந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கிடையாது என அமைச்சரின் மூலம் அறிவித்திருப்பது ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என வாக்குறுதியளித்துவிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதும், இலவச பேருந்து என அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் மகளிரைத் தரக் குறைவாக விமர்சிப்பதும், மனு அளிக்க வருவோரை மதிக்காமல் அவமதிப்பதும் திமுகவின் அடிப்படை குணமான ஆணவப் போக்கையும், அதிகாரத் திமிரையுமே வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழக மகளிரைத் தொடர்ந்து அவமதிப்பதையும், தரக்குறைவாக விமர்சிப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுகவினரை, ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலின் மூலம் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப் போவது உறுதி என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
August 22, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பத்து நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் ராமேஸ்வர மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் – மீனவர்கள் தானே என்ற அலட்சியம் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது நிச்சயம்.இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.மீன்பிடி தடைக்காலத்திற்கு பின் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 60க்கும் அதிகமான மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதோடு, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வைத்திருக்கும் இலங்கை கடற்படையின் அராஜகத்தால் ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. பத்து நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, மீன்பிடி தொழிலும் அடியோடு முடங்கியிருக்கும் நிலையில், மீனவர்களின் போராட்டம் தானே என்ற அலட்சியப் போக்குடன் திமுக அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேஸ்வர மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதோடு, மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் சுதந்திரமாக ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
August 22, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியாவின் முதல் நகராட்சி, உலகின் மிகத் தொன்மையான மாநகராட்சி, தமிழகத்தின் தலைநகரம் எனப் பன்முக பெருமைகளோடு ஒட்டுமொத்த உலகையும் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுச் சிறப்புகளையும் தன்னகத்தே உள்ளடக்கிய சென்னை உருவான தினம் இன்று. படிப்பிற்காகவோ, பணிக்காகவோ தன்னை நாடி வரும் அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் அன்னையாக, ஏராளமான இளைஞர்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, தொழில் முனைவோர்களின் தொடக்கப்புள்ளியாகத் திகழும் சென்னை உருவான இந்நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் போற்றிக் கொண்டாடுவோம். #ChennaiDay
August 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
August 20, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காசி மடத்தின் 21 அதிபரான கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தி அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. சைவத்தையும் தமிழையும் தனது இரு கண்களாகப் போற்றி பழமையும், பெருமைமிக்க காசி மடத்தின் 21வது அதிபராக ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் சமூக மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றிய அரும்பெரும் பணிகள் எந்நாளும் நிலைத்திருக்கும்.
August 20, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் கிளர்த்தெழுந்த முதல் சுதந்திரப் போரின் தளபதி, ஆங்கிலேயப் படைகளை தனியொருவராகச் சென்று வீழ்த்திய மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்த மாமன்னர் பூலித்தேவரின் தலைசிறந்த படைத்தளபதியாகவும், போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத மாவீரராகவும் திகழ்ந்த ஒண்டிவீரனின் வீரத்தையும் துணிச்சலையும் எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
August 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கக்கோரிப்போராடிய போக்குவரத்து ஊழியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.15வது ஊதிய ஒப்பந்தத்தின் படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் தற்போது வரை வழங்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசால் வேறு வழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 152வது தேர்தல் வாக்குறுதியான போக்குவரத்துப் பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றாத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.ஓட்டுநர், நடத்துநர் ஆட்சேர்ப்பு தொடங்கி அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு வரை போக்குவரத்துக் கழகங்களை படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, வாழ்நாளின் பெரும்பகுதியை போக்குவரத்துத்துறையில் பணியாற்றியே கழித்த ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களை எந்தவித நிபந்தனையுமின்றிவிடுவிப்பதோடு, அவர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
August 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான திருமதி. ரேணுகா தேவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திருமதி ரேணுகாதேவி அவர்களை இழந்துவாடும் திரு.டி.ஆர் பாலு அவர்களுக்கும், திரு டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.