April 14, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புத்தாண்டு திருநாளாம் விஷு திருநாளை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடும் மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விஷு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் தங்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிப் பராமரித்து இறைவனை மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபடும் மலையாள மக்கள் அனைவரின் எண்ணங்களும், விருப்பங்களும் ஈடேறும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும். மலரும் இப்புத்தாண்டு மலையாள மக்கள் அனைவரின் இல்லங்களிலும் இன்பமும், இனிமையும் செழிக்கின்ற ஆண்டாக அமையட்டும் என பிரார்த்தித்து மீண்டும் ஒருமுறை எனது விஷு திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
April 13, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் – பொதுமக்களின் உடல் நலனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி பொது உயிரி மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இந்த மருத்துவக் கழிவுகள் சுத்திகரிக்கும் ஆலை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அத் திட்டத்திற்கான கட்டுமானப் பணியை முழுவீச்சில் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பொது உயிரி மருத்துவக் கழிவுகளை எரிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மைமிக்க வாயு, மானாமதுரை மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொது உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்வதோடு, அங்கு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
April 13, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
April 12, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக ஒருமனதாக தேர்வாகியிருக்கும் சகோதரர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள், தமிழக மக்களின் நலன் மற்றும் மாநில உரிமைகளில் எவ்வித சமரசமுமின்றி செயல்படுவதோடு, மக்கள் நலன் சார்ந்த மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என இந்நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
April 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – இனியும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா ? என்பதை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சிந்திக்க வேண்டும். பெண்களை அவமதிக்கும் வகையிலும் சைவம், வைணவம் குறித்து அவதூறு பரப்பும் வகையிலுமான தமிழக வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களின் தரக்குறைவான பேச்சு தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவச பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பஸ் என விமர்சித்ததோடு, பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஆணவத்துடன் பேசுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் அமைச்சர் திரு.பொன்முடி அவர்களின் செயல்களை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டும் காணாமல் இருந்ததே, தற்போது மேடை ஏறி பெண்கள் குறித்து இத்தகைய அருவருக்கத்தக்க அளவிற்கு பேசும் துணிச்சலை உருவாக்கியுள்ளது. எனவே, அருவருக்கத்தக்க வகையில் பொதுவெளியில் மகளிர் குறித்து பேசியிருக்கும் வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள், இனியும் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா? என சிந்திப்பதோடு, பெண்கள் எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை தங்களின் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
April 9, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 டாஸ்மாக் முறைகேடு வழக்கை திசைதிருப்ப முயன்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வைத்திருக்கும் கொட்டு வரவேற்புக்குரியது – மாநிலத்தின் ஆளுநருக்கான அதிகாரத்தை தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாராட்டுதலுக்குரியது. அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல் படியே மாநிலத்தின் ஆளுநர் நடக்க வேண்டும் என்பதோடு, குடியரசுத்தலைவருக்கு இருப்பதை போன்று மசோதாக்களை கிடப்பில் வைப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்பதையும் நேற்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில், டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை திசைதிருப்பும் வகையிலும், வழக்கில் சிக்கியுள்ளவர்களை பாதுகாக்கும் நோக்கிலும், வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வைத்திருக்கும் கொட்டு மிக மிக அவசியமானது. நேற்று ஒரே நாளில் இருவேறு வழக்குகளில் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள், நீதித்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருப்பதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கியும் ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவோர் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை பின்பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணவேந்தர் பதவியிடங்களை உடனடியாக நிரப்பும் அதே நேரத்தில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களை தப்பிக்க முயலாமல் விசாரணையை நேர்மையாகவும், நியாயமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
April 9, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு. குமரி அனந்தன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ் ஆர்வலராக, தலைசிறந்த இலக்கியவாதியாக, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றிய திரு குமரி அனந்தனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
April 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும் மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட பொதுமக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், இந்த நான்காண்டு கால ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வாலும், பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தாலும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் சாமானிய மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்துள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
April 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக நேர்காணல் மூலம் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர் சரிவு – மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் நடப்பாண்டில் 38 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 2021 – 22 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் 68 சதவிகிதமாக இருந்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து, நடப்பாண்டில் 38 சதவிகிதமாக சரிந்திருப்பது அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளின் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. Apple, TCS, Wipro, Infosys உள்ளிட்ட 210 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற வளாக நேர்காணலில் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே தேர்வாகியிருப்பது அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளை விரும்பி தேர்ந்தெடுக்கும் மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் கவலையடையச் செய்திருக்கிறது. நாட்டின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் பயின்றால் வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நம்பிக்கையில் வரும் மாணவ, மாணவியர்களின் எதிர்கால கனவை நீர்த்துப் போகும் அளவிற்கு நடப்பாண்டில் நடைபெற்ற வளாக நேர்காணல் அமைந்திருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணல் மீது கூடுதல் கவனம் செலுத்தி பெரு நிறுவனங்களை அதிகளவில் பங்கேற்கச் செய்வதோடு, அந்த நேர்காணலில் தேர்வாகக் கூடிய அளவிற்கு மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனையும் மேம்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
April 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் திரு.எம்.ஏ.பேபி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவப் பருவத்திலிருந்தே சிறந்த பொதுவுடமைவாதியாக திகழ்ந்து வரும் திரு.எம். ஏ.பேபி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியோடு நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து பணியாற்ற மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.