நாட்டுப்புற பாடலுக்காகவும் தனது நடிப்பாற்றலுக்காகவும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற திருமதி.கொல்லங்குடி கருப்பாயி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திருமதி.கொல்லங்குடி கருப்பாயி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எண்ணூர் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிப்பு – பொதுமக்களின் புகார் மீது விரிவான ஆய்வு நடத்துவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட வேண்டும். சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகரில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்பட்ட தூசி மாதிரிகளில் யுரேனியம், காட்மியம் உள்ளிட்ட நச்சு உலோகங்கள் அதிகளவு கலந்திருப்பதாக வெளியாகியிருக்கும் பகுப்பாய்வு குறித்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குடியிருப்புகளுக்குள் காணப்படும் மாசுக்கள் தொடர்பாக மாசுக்கட்டு வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பொதுமக்களே மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எண்ணூர் பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து கடந்த பல வாரங்களாக வெளியேறிக் கொண்டிருக்கும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் இருமல், கண் எரிச்சல், தொண்டை வலி மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மேலும், கடந்த ஆண்டு இதே எண்ணூரில் ஏற்பட்ட அம்மோனியா கசிவை விட மிகவும் ஆபத்து மிக்கதாக கருதப்படும் இந்த உலோக நச்சுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் உணவு மற்றும் அருந்தும் குடிநீரில் கலந்திருக்கும் அபாயமும் ஏற்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரின் குடியிருப்புகளில் படிந்திருக்கும் நச்சு உலோக மாசுக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதோடு, அப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கோவையில் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது – தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக் கூட செவிசாயக்க மறுக்கும் திமுக அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5வது நாளாக போராட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாணை 62ன் படி சமவேலைக்கு சம ஊதியம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய ஊதிய ரசீது, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்ற வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாத திமுக அரசால், தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தூய்மைப்பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.தூய்மைப் பணியாளர்களுக்கு வாரவிடுப்பு, கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி, நிரந்தர ஊதியம், ஓய்வூதியம் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த குழந்தைகள், வெளிநாட்டவர் உட்பட பலர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண நலத்துடன் விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அரசுப் பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பயணம் மேற்கொள்வதாக கூறி இழிவு படுத்துவதா? – தாய்மார்களை அவமதிப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் திமுகவுக்கு ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே மலைக்கிராமம் ஒன்றில் சமுதாயக் கூடத்தை திறக்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.மகாராஜன் அவர்கள், அப்பகுதி பெண்கள் அனைவரும் ஓசி பேருந்தில் பயணியுங்கள் என கிண்டலாக பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தாய்மார்களை ஓசி பேருந்தில் பயணிப்பதாக நக்கலடித்து சிரித்த அமைச்சர் ஒருவர் தன் பதவியை இழந்த நிலையிலும், மகளிர் மீதான அக்கட்சியினரின் எண்ணம் துளியளவும் குறையவில்லை என்பதையே ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜன் அவர்களின் இன்றைய பேச்சு வெளிப்படுத்துகிறது. மகளிர் உரிமைத் தொகை எனும் பெயரில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு மறைமுகமாக பல ஆயிரம் ரூபாயை வசூல் செய்வதையும், பேருந்தில் இலவச பயணம் என அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுகவினரின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, நலத்திட்டங்கள் எனும் பெயரில் தமிழகத்தின் தாய்மார்களை இழிவுபடுத்துவதையும், அவர்களை அவமானப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுகவிற்கும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதி படுகொலை – மேற்கு மண்டலத்தை கொலைக்களமாக மாற்றி வரும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளக்கோவில் சேனாதிபாளையம் அருகே ஆடு மேயக்கச் சென்ற வயதான தம்பதி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேற்கு மாவட்டங்களில் தோட்டத்தில் தனியாக வசிக்கும் முதியவர்கள் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதி கல்லால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைக்கவோ, குற்றச்சம்பவங்களை குறைக்கவோ துளியளவும் கவனம் செலுத்தாத திமுக அரசால் தமிழகத்தில் வசிக்கும் முதியவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.எனவே, வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கை விரிவாக விசாரித்து தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதோடு, இனியாவது விளம்பர மோகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சட்டம் ஒழுங்கை சீரமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

நாமக்கல் அருகே தோட்டத்து இல்லத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அடித்துக் கொலை – காவல்துறையை செயலற்ற நிலையில் வைத்திருக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த குளத்துப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து இல்லத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் என மேற்கு மாவட்டங்களில் தோட்டத்து இல்லங்களில் வசிக்கும் வயதான முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவதும், அவரவர் இல்லங்களில் இருக்கும் நகை, பணம் திருட்டு போவதும் தொடர்கதையாகி வருவது காவல்துறையின் செயலற்ற திறனையும், அலட்சியப் போக்கையுமே வெளிப்படுத்துகிறது.திருப்பூர் மற்றும் ஈரோடு கொலை வழக்கில் தொடர்புடையதாக கைதானவர்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற கொலை, கொள்ளைகளை தாங்களே அரங்கேற்றியதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில், ஏற்கனவே குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் யார்?, விசாரணை அதிகாரி திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கே இன்னமும் விடை கிடைக்காத நிலையில், தற்போது மீண்டும் அதே பாணியில் நாமக்கல் அருகே அரங்கேறியிருக்கும் சம்பவம், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் உண்மைக் குற்றவாளிகள் தானா? ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் இச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.எனவே, மூதாட்டி கொலை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு இதுபோன்ற திட்டமிட்ட குற்றச்சம்பவங்கள் நிகழாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை தாம்பரம் அருகே அரசு சேவை இல்லத்தில் தங்கி பயின்ற மாணவிக்கு பாலியல் தொல்லை – பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறதா தமிழகம்? சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தில் தங்கி 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் காவலாளியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக அரசால், அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் மாணவி ஒருவரே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அளவிற்கான அசாதாரண சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது. தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தின் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலாளியே, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பது, அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கான தண்டனையை கடுமையாக்கி சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது திமுக அரசின் மீதும் அதன் காவல்துறை மீதும் குற்றவாளிகளுக்கு சிறிதளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, அரசு சேவை இல்லத்தில் மாணவியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.