March 8, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறையினரின் சித்ரவதையால் கைதி உயிரிழப்பு எனப் புகார் – கைதி ஆகாஷின் உயிரிழப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தித் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆகாஷ் எனும் இளைஞர் காவல்துறையினரின் சட்டவிரோத துன்புறுத்தலால் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகாஷை கைது செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லாமல் சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்தியதோடு, தொடர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதே ஆகாஷின் உயிரிழப்புக்குக் காரணம் எனக்கூறி அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போது நன்றாக இருந்த கைதி, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறையிலிருந்து அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதாக அல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுக்க திறனற்ற திமுக அரசு, ஒவ்வொரு கொலைச் சம்பவத்திற்கும் புதுப்புது காரணங்களை அடுக்குவதையும், மக்கள் மீது அதிகரிக்கும் அதிருப்தியைத் திசைதிருப்பக் கைதிகள் மீது இதுபோன்ற சித்ரவதைகளை அரங்கேற்றுவதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, காவல்துறையினரின் சித்ரவதைக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் கைதி ஆகாஷின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, இவ்வழக்கை விரிவாக விசாரித்து காவல்துறையினர் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
March 8, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மேற்கு வங்கத்தில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திட்டமிட்டு அவமதிப்பு – அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவரை அரசியல் காரணங்களுக்காக அவமதித்திருக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.மேற்குவங்கம் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களை, அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் அரசியல் காரணங்களுக்காகத் திட்டமிட்டு அவமதித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் எந்தவொரு மாநிலத்திற்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் முதலமைச்சரோ, அமைச்சரோ நேரில் வந்து வரவேற்க வேண்டும் என்ற நெறிமுறைகளை மீறியதோடு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியின் இடத்தையும் இறுதி நேரத்தில் மாற்றியமைத்து, அவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகப் பழங்குடியின சமுதாயத்திலிருந்து இந்தியாவின் உயரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை, பழங்குடியினர் சார்ந்த நிகழ்விலேயே அவமதிக்கும் நோக்கில் பல்வேறு தடைகளை மேற்குவங்க அரசு ஏற்படுத்தியிருப்பது ஒட்டுமொத்த பழங்குடியினர் சமூகத்தையும் அவமதிக்கும் செயலாகும். எனவே, மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ஒட்டுமொத்த பழங்குடியின மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
March 8, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மகளிர் தின நல்வாழ்த்துகள்: “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப மகளிருக்கான சமத்துவம் மற்றும் சம உரிமை வழங்கப்படுவதன் அவசியத்தை உணர்த்தும் இந்த நாளில் அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்மையைப் போற்றி கொண்டாடும் இந்நாளில் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தாயின் முதலெழுத்தைக் குழந்தையின் தலைப்பெழுத்தாக பயன்படுத்துதல் என மகளிர் நலன் பயக்கும் நல்ல பல திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாகச் செயல்படுத்தி பெண் இனத்தின் பெருமையாகத் திகழும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை நினைவில் கொள்வோம். தாயாக, சேயாக, தமக்கையாக, தாரமாக என அனைத்திலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சம உரிமையோடு, அவர்களுக்கான பாதுகாப்பு முழுமையாக கிடைத்திடுவதையும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதி செய்திடுவோம். மகளிரின் அர்ப்பணிப்பு உணர்வை உலகிற்கு உணர்த்தும் இந்நாளில், தடைகளைத் தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை ஏற்படுத்திட, அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு அடைந்திட அனைத்து மகளிருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
March 7, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை ராயப்பேட்டையில் தனியாக வீட்டிலிருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் காவலர் கைது – தன் துறை சார்ந்த காவலர்களையே கட்டுப்படுத்தாத முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்ட ஒழுங்கை எப்படிப் பேணிக்காக்க முடியும்?சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக மதுபோதையிலிருந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதிலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதிலும் உடந்தையாகச் செயல்பட்ட காவலர்கள் மீது திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவே, தற்போது தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீடு புகுந்து அத்துமீறலில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறைக்கென தலைவர் ( DGP ) ஒருவரை நியமிக்கக் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசால், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கட்டுப்பாடின்றி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிப்பதும் தொடர்கதையாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, குழந்தைகள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்திய திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் இதற்கான ஒரே தீர்வு என்பதை உணர்ந்திருக்கும் தமிழக பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் அதனைப் பிரதிபலிப்பார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
March 7, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூரில் அத்துமீறி நுழைந்து அறிவிப்புப் பலகை வைத்திருக்கும் கேரள அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – கூட்டணி தர்மத்திற்காக முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை தாரைவார்த்தது போல எல்லைப் பகுதியையும் பறி கொடுப்பதற்கு பெயர் தான் திராவிட மாடலா ? தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற்குட்பட்ட தாளூரில் கேரளத்தை வரவேற்கும் வகையிலான அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்தின் ஒரு எல்லைப் பகுதியாக இருக்கும் நீலகிரி மாவட்டத்தின் தாளூருக்குள் திடீரென அத்துமீறி நுழைந்து, தங்களது எல்லை என கேரளம் உரிமை கொண்டாடுவதும், அதனைத் தடுக்கவோ, கண்டிக்கவோ முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் திமுக அரசின் மௌனமும் கடும் கண்டனத்திற்குரியது.நீலகிரி மாவட்டத்தில் கேரள அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை தமிழகத்தின் மற்ற எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்குவதோடு அவர்களின் நில உரிமையும் பறிபோகும் அளவிற்கு அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.தென் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாகவும் உயிர் நாடியாகவும் முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் ஒரு பகுதியாக அங்குள்ள மரங்களைக் கூட வெட்ட அனுமதிக்காத கேரள அரசு, தமிழகத்திற்குள் நுழைந்து அறிவிப்புப் பலகை வைக்கும் அளவிற்குத் துணிந்திருப்பதை கூட்டாட்சி தத்துவத்திற்கு விடுத்திருக்கும் சவாலாகவே பார்க்க வேண்டியுள்ளது.திமுகவுடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவதில் தீவிரம் காட்டுவதும், தமிழகத்தின் எல்லைப் பகுதியை கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆக்கிரமிக்க முயல்வதையும் பார்க்கும் போது, திமுக அரசு மாநில உரிமையை விட்டுக் கொடுத்து தான் தேர்தல் கூட்டணியை உறுதிபடுத்துகிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே, தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூரில் அத்துமீறி வைக்கப்பட்டிருக்கும் கேரள அரசின் அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்றுவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் எல்லைக் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
March 6, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ( UPSC ) தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே அவர்களுக்கும், ஏழாவது இடத்தை பிடித்திருக்கும் ராஜா முகைதீன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடா முயற்சி மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் அரசுத்துறைகளின் மிக உயரிய பொறுப்புகளுக்குத் தேர்வாகியிருக்கும் இருவரும், அவரவர் பணியில் சிறந்து விளங்கிடவும், மேன்மேலும் பல சாதனைகள் படைத்திடவும் மீண்டும் ஒருமுறை மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 6, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – காவிரி விவகாரத்தில் தும்பை விட்டு வாலை பிடிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு இனியாவது விழித்துக் கொள்ளுமா ? கர்நாடக அரசு இன்று தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை வெற்றியாகக் கருதுவதாகவும் விரைவில் மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி நீரால் பாசன வசதி பெறும் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பின்பும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியான இரு தினங்களில், கர்நாடக காங்கிரஸ் அரசு தாக்கல் செய்திருக்கும் தனது நிதிநிலை அறிக்கையில் மேகதாது அணை குறித்த இத்தகைய அறிவிப்பு இடம்பெற்றிருப்பது, கூட்டணி நலனுக்காக திமுக தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுக்க முடிவெடுத்துவிட்டதோ ? என்ற ஐயம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் ஆரம்பம் முதலே தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுக, தன்னுடைய கட்சி நலனுக்காகவும், கூட்டணி நலனுக்காகவும் மாநிலத்தின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்க முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, நானும் டெல்டா காரன் தான் என வாய் சவடால் விடும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி டெல்டா பகுதிகளைப் பாலை வனமாக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை சட்டரீதியாக மட்டுமின்றி, தன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தம் கொடுத்துத் தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
March 6, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம் – நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 25 ஆம் தேதி முதல் பணியைப் புறக்கணித்துத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பத்து நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை அலுவலர்களை காவல்துறையின் மூலம் ஒவ்வொரு நாளும் அடக்கி ஒடுக்கும் திமுக அரசு, ஒருமுறை கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்க முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது. வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்து விதமான சான்றிதழ் வழங்கும் பணிகளும், அரசு சேவைகளும் முழுமையாக முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் வருவாய்த்துறை அலுவலர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்திட வேண்டும் என வருவாய்த்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
March 5, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் – குற்றச் சம்பவங்களின் தலைநகராகவும், குற்றவாளிகளின் புகழிடமாகவும் தமிழகத்தை மாற்றிய திமுக வரும் தேர்தலில் வீழ்வது உறுதி. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் கண்ணில் படும் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்து பெட்ரோல் வெடிகுண்டு வீசியும், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது அரங்கேறியிருக்கும் கொலை வெறித் தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த பொது மக்கள் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.திமுக ஆட்சிப்பொறுப்பேற்ப ஐந்தாண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது ஊருக்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கான துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. எனவே, மானாமதுரை அருகே கிராமத்தில் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் நேரத்தில், மக்கள் பாதுகாப்பைப் புறந்தள்ளிவிட்டு அடுத்த தேர்தலுக்கான விளம்பரப் பணிகளில் மும்முரம் காட்டிவரும் திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வரலாற்றுத் தோல்வியைச் சந்திப்பது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
March 4, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விவசாயிகளின் அனுமதியின்றி நடைபெறும் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கும், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் புதிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் பணிக்கும் கடும் எதிர்ப்பு – பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாதுகாப்பானதாக இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்தைக் கையகப்படுத்தி நடைபெறும் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை கிராமத்தில் விளைநிலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்காவுக்கு அப்பகுதி விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அடிக்கல் நாட்டியிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பெருகவாழ்ந்தான் பகுதியில் முழுமையான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, வெப்பநிலை மதிப்பீடு, நிலத்தடி நீர் ஆய்வு மற்றும் கிராம சபை ஒப்புதல் என எந்தவித முறையான அனுமதியுமின்றி இதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விளை நிலங்களோடு விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இந்த சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அமைதியான முறையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுத்திருப்பது சர்வதிகாரப் போக்கின் உச்சபட்சமாகும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறியும், முறையான அனுமதி இன்றியும் அவசரகதியில் நடைபெறும் இந்த சூரிய மின் உற்பத்தித் திட்டமும், சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் நடவடிக்கையும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பசுமைப் பரப்பு வெகுவாக குறையும் என்பதோடு உணவு உற்பத்தியையும் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, பெருகவாழ்ந்தான் கிராமத்தில் நடைபெற்று வரும் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தையும், ஆலங்கோட்டை கிராமத்தில் அடிக்கல் நாட்டியிருக்கும் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தையும் உடனடியாக தடுத்து நிறுத்திடுவதோடு, வேளாண் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.