மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!

வேளச்சேரியில் போதைக் கும்பலால் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளான உணவு டெலிவரி செய்யும் ஊழியர் – பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போதைக் கும்பல்களின் அட்டூழியத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். சென்னை வேளச்சேரி அருகே போதையில் சுற்றித்திரிந்த கும்பல், அப்பகுதியில் உணவு டெலிவரி செய்வதற்காக வந்த ஊழியர் ஒருவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிப் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. பேருந்து, ரயில், மற்றும் விமானநிலையங்கள் என பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் சுற்றித் திரியும் போதைக் கும்பலைக் கண்காணிக்கவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இதுபோன்ற துயரச்சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை, இதுபோன்று தொடர்ந்து அரங்கேறும் குற்றச்சம்பவங்களுக்கும் தனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல நடந்து கொள்வதால் பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் போதைக் கும்பல்களைப் பிடித்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தின் தலைநகர் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தை அடியோடு ஒழித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பலூன்களில் காற்று நிரப்பப் பயன்படுத்தப்படும் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாகவும், 10க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கிறது. துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.