சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இருவர் கைது சட்டமன்றத் தேர்தலில் தமிழக பெண்களின் அமைதி புரட்சியே திமுகவின் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி பட்டிதொட்டியெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியத்தால், இந்தியாவிலேயே குற்றச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் முதலிடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டிய காவல்துறையினர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும் ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாகச் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீரழித்து, அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி மக்கள் விரோத திமுகவிற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளியை வைக்கப்போகிறது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னிந்தியத் திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தின் தலைவராக (2026-2029 ) மீண்டும் தேர்வாகியிருக்கும் அன்பு சகோதரர் திரு.கோபி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு.கோபி கிருஷ்ணா அவர்கள் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தென்னிந்தியத் திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தையும், அதன் நிர்வாகிகளையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதோடு, தான் சார்ந்திருக்கும் திரையுலகில் மேன்மேலும் பல்வேறு சாதனைகள் புரிய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

கோவை புதூர் பகுதியில் பெண் காவலர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் காவல் உயர் அதிகாரி கைது – காப்பாற்ற வேண்டிய காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படிச் சாத்தியமாகும் ?கோவை புதூர் பகுதியில் இயங்கிவரும் பட்டாலியன் படைப்பிரிவில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் ஊழியர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரே சக பெண் காவலர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வரை தொடர்பில் இருக்கும் காவல்துறையினரை வைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசு,கடந்த காலங்களை ஒப்பிடும் போது குற்றங்களைக் குறைந்துவிட்டதாக அரசு உயர் அதிகாரிகளை வைத்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவதும், பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதும் வெட்கக்கேடானது. எனவே, தமிழகப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, அவர்களை சுதந்திரமாக நடமாடவே முடியாத அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கிய திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பப் போகின்ற நாள், இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அன்று அமையப்போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி பெண்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – திமுக கூட்டணிக் கட்சியின் மக்களவை உறுப்பினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லையா ? சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதை திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் சாலைகளில், வீடுகளில், தலைவர்களின் நினைவாலயங்களில் சமூக விரோதிகளால் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படும் சம்பவங்களை கண்டும் காணாதது போல இருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கே, திமுக கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எனவே, திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கூட பாதுகாப்பு அளிக்க முடியாத அளவிற்கு தமிழகத்தின் சட்டத்தையும், ஒழுங்கையும் சந்தி சிரிக்கும் அளவிற்கு சீரழித்த திமுக அரசை வரும் தேர்தலில் மக்கள் அடியோடு துடைத்தெறிவது நிச்சயம் என்பதை மட்டும் இந்நேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழல் காரணமாக தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. சாதாரண தேநீர் கடைகளில் தொடங்கி பெரிய விடுதிகள் வரை அனைத்து வகையான உணவகங்களுக்கும் அடிப்படை தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் உணவகங்கள் அனைத்தும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படும் பட்சத்தில் கிராமப்புறங்களில் இருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் உணவுத் தேவை பாதிக்கப்படுவதோடு, அந்த உணவகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்திடுவதை உறுதி செய்திட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.