நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.160 கோடி முறைகேடு புகார் – விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக்கழக குடோன்கள், அரவைத் தொழிற்சாலைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் சுமார் 160 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல டன் ஒன்றுக்கு 598 ரூபாயை வாடகை கட்டணமாகத் தமிழக அரசு நிர்ணயித்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனங்கள் 186 ரூபாய் மட்டுமே தங்களுக்கு வழங்குவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அதோடு, நெல் கொள்முதல் செய்யப்பட்ட 48 மணிநேரங்களில் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், 30 முதல் 40 நாட்களாகக் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே,தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தின் மீது எழுந்திருக்கும் முறைகேடு புகாரை விசாரிப்பதோடு, விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும் – பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், 33 சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு அடைந்த பயிர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்திருக்கும் தகவல் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.விதை நெல்லில் தொடங்கி உரம் தெளித்தல், வாடகை இயந்திரங்கள் என ஒரு ஏக்கருக்கு சுமார் 36 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில், அரசு வழக்கமாக அறிவிக்கும் இழப்பீடு போதுமானதாக இருக்காது என்பதோடு, நடப்பாண்டில் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையையும் அதிகரிக்க வேண்டும் எனக் காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடை வழங்குவதோடு, காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி பயிர்க்காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தென் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போரை முன்னின்று நடத்தியவரும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வணங்கிய தேசியத்தலைவருமான தென்னாட்டு போஸ் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் குருபூஜை இன்று. தமிழகம் உயர, தமிழ்ச் சமூகம் வளர தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததோடு, சுயவாழ்விலும், பொதுவாழ்விலும் தூய்மைக்கும், எளிமைக்கும் இலக்கணமாக வாழ்ந்து வரலாறு படைத்த அப்பழுக்கற்ற மாமனிதர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் மக்களுக்கு ஆற்றிய சேவையைப் போற்றி வணங்கிடுவோம்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார் – தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை எழுதியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில், பணி நியமன உத்தரவுக்காக 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 150 பேர் பணம் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அத்தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது. எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றிருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இந்திய விடுதலைக்கான முதல் போரை மக்கள் பங்களிப்போடு முன்னெடுத்த மாமன்னர்களும், சிவகங்கை சீமையை மீட்டெடுக்க வீரமங்கை வேலுநாச்சியாருக்கு உறுதுணையாக இருந்த விசுவாசமிக்க போர்ப்படைத் தளபதிகளுமான மாவீரர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை இன்று. தென்னிந்தியாவில் தங்களை எதிர்க்க யாருமில்லை எனக் கொக்கரித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்த சிவகங்கை சீமையின் வேங்கைகளான மருது பாண்டியர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025ல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய கபடி அணியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவைச் சேர்ந்த அனைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய கபடி அணியின் ஆண்கள் பிரிவில் திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்த வீரர் அபினேஷ் அவர்களும், மகளிர் பிரிவில் சென்னை அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகா அவர்களும் இடம்பெற்றிருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த தாய்நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் இந்தியக் கபடி அணியின் வீரர் மற்றும் வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போரில் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுக்கு உறுதுணையாக இருந்தவரும், சிவகங்கை பாகனேரியை திறம்பட ஆட்சி செய்த மன்னருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயப் படைகளின் அடக்குமுறைக்குத் துளியளவும் அஞ்சாமல், தீரத்துடன் எதிர்த்து நின்று இறுதிவரை போரிட்டதோடு, தாய் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் மகத்தான பங்களிப்பை வழங்கிய தென்பாண்டிச் சிங்கம் வாளுக்கு வேலி அம்பலத்தின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் தாய் நாட்டிலிருந்து அடியோடு விரட்டியடிக்க மக்களை ஒன்று திரட்டி புரட்சிக்கு அடித்தளமிட்டவர்களும், சிவகங்கையை ஆட்சி செய்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் விசுவாசமிக்க போர்ப்படை தளபதிகளாகவும் விளங்கிய மாவீரர்கள் மருது பாண்டியர்களின் நினைவுதினம் இன்று. மக்களோடு, மக்களாக வாழ்ந்து மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஆட்சியை வழங்கியதோடு, தாய் மண்ணையும், நாட்டு மக்களையும் காத்திட தங்களின் இறுதி மூச்சு வரை போராடி ஆங்கிலேயப் படைகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.