சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை ஒப்படைக்கக் கோரி போராடிய பயனாளிகள் மீது காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் தவெக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. தங்களின் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய துறை சார்ந்த அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் வராமல் காவல்துறையை பயன்படுத்தி அவர்களை ஒடுக்க நினைப்பது சர்வாதிகாரப் போக்கே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? எனவே, பயனாளிகளுக்கான வீடுகள் விரைந்து ஒதுக்கீடு செய்யப்படுவதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும், தவெக அரசும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை, வேலூரில் செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டல், தாம்பரம் அருகே கூலித் தொழிலாளியிடம் இலவசமாக செங்கல் ஜல்லி கேட்டு தாக்குதல், செங்கல்பட்டு அருகே நகைக்காக மூதாட்டி கொலை என கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற இந்த நான்கு சம்பவங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை அக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள் என்பது தான். இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் தான் தவெகவில் நிறைந்திருக்கிறார்களா ? அல்லது ஆளுங்கட்சி என்ற மமதையில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட துணிகின்றனரா ? என்பதை தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள் விளக்க வேண்டும்.

வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையுமே பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்- சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத திரு ஜோசப் விஜய் அவர்கள் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார் ? புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்பு தான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மையென்றால், தமிழகத்தில் குதிரை பேர அரசு எதற்கு ?

அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், அது குறித்து கேள்வி எழுப்புவதும் ஊடகங்களின் அடிப்படை கடமை. மக்களின் குரலாக ஒலிக்கும் அத்தகைய ஊடகங்களை முடக்க நினைப்பதும், அரசு கேபிளில் இருந்து இருட்டடிப்பு செய்வதும் சர்வாதிகாரப்போக்கின் உச்சம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உடனான சந்திப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கூட செய்தியாளர்களை சந்தித்து விளக்க முடியாத முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசில், ஊடகங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்கள் தான் தவெக சொன்ன மாற்றமா ?

சென்னை கோடம்பாக்கம் அருகே 16 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது – குற்றங்களைத் தடுக்க வேண்டியவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி சீரானதாக இருக்கும் ? சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தலைமைக் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத்  தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையில் பணியாற்றும் காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது  ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டிற்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன. எனவே, தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் மறந்து சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கைதாகியிருக்கும் தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@TVKPartyHQ@TVKVijayHQ

பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்: தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கருதி, தன் வாழ்நாள் முழுவதும் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாகத் திகழ்ந்ததோடு, இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தன் மகனையும் தியாகம் செய்ய முன்வந்த இறைத்தூதர் இப்ராகிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நாம் அனைவரும் நினைவில் வைத்து வணங்கிடுவோம். இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிடச் சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

தவெக அரசின் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி – மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற பித்தலாட்டத்தை தொடர்ந்து இந்த விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்பதும் ஏமாற்று வேலையே. 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம். இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்ய விவசாயிகள் சுமார் 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் நிலையில், 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி எனவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி எனவும் அரசு அறிவித்திருப்பதற்கு டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதியின்படி தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் – மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடும் வகையில் தொடர் சட்ட நடவடிக்கைகள் எடுத்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அறிவுறுத்தியிருப்பது, கடந்த காலங்களைப் போல வெறும் சம்பிரதாய அறிக்கையாக அமைந்திடக் கூடாது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் முரணாகத் தமிழகத்திற்கான உரிய நீரை வழங்காமலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மேகதாது அணைக்கான பூமி பூஜை குறித்துப் பேசும் அளவிற்கான துணிச்சலை கர்நாடக அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணைத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாவதோடு, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும், தமிழகத்தின் பல மாவட்ட மக்களுக்கான குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகிவிடும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையைக் கர்நாடக அரசிடம் தாரைவார்க்குமேயானால், தமிழக மக்களுக்கு அதைவிட மிகப்பெரிய துரோகம் இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமல்லாது, தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீர் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசையும், முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.