பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2019 ஆம் ஆண்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவின் நம்பிக்கையாக திகழ வாழ்த்துகிறேன். அதே போல யூரோப்பில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ராவிற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்தடுத்து நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 4048 பேருக்கும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 300க்கும் அதிகமானோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் நாளிதழ்களில் வெளியாகி இருக்கும் செய்தி வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதனை உருவாக்கும் ஏடிஸ் கொசுவை ஒழிப்பது தான் ஒரே வழி என்பதை உணர்ந்து கொசு ஒழிப்பு பணியை தமிழ்நாடு முழுவதும் அரசு தீவிரப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் வருவோருக்கு டெங்கு பரிசோதனையை மேற்கொள்ள ஏதுவாக பரிசோதனை கருவிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் டெங்கு உறுதி செய்யப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டுகளை உருவாக்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை கணக்கெடுத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதோடு, டெங்கு தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்களை கைது செய்ததோடு அவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் அபாயம் எழுந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் தாக்குதல் நடத்தப்படும் போதும் வெறும் கடிதம் மட்டுமே எழுதும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் மீனவர்கள் நலனை காக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தயங்குவது ஏன்? ஆகவே, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு இலங்கை கடற்படையினரின் அத்து மீறலுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டில் மட்டும் நான்காவது முறையாக பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஆவின் நிர்வாகம் மூலம் தயாரிக்கப்படும் பால் பொருட்களான நெய் லிட்டருக்கு 70 ரூபாயும், வெண்ணெய் கிலோவுக்கு 30 ரூபாயும் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயலாகும். எனவே, உயர்த்தப்பட்டுள்ள நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காமல் தமிழ்நாட்டிற்கான உரிய தண்ணீரை திறந்துவிட தொடர்ந்து மறுத்துவரும் கர்நாடக அரசிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை கர்நாடக மாநிலம் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போதுமான மழையில்லை என காரணம் கூறி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது என அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் திரு. டி.கே.சிவக்குமார் பேசியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வஞ்சிக்கும் வகையிலும் தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் வகையிலும் கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.சிவக்குமார் பேசியிருப்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல. காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் போதிய தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், இனியும் இரட்டைவேடம் போடாமல் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு வரும்போது வலுவான வாதங்களை முன்வைத்து தமிழ்நாட்டிற்கான நீரை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.