ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பிரிவில் வென்று இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்ததோடு உலக அளவிலும் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார். விரைவில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கும் நீரஜ் சோப்ரா அங்கும் தங்கம் வென்று வரலாறு படைக்கவும் இந்தியாவுக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கவும் மனமார வாழ்த்துகிறேன்.

2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு இது போன்ற விருதுகள் மேலும் உத்வேகத்தை அளிக்கும். ஆசிரியர் பணியில் மேலும் சிறப்பாகச் செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்!

உத்திரப்பிரதேசத்திலிருந்து தென்னிந்தியாவில் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள மதுரை வந்திருந்த பயணிகளின் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ரயிலில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லாத நிலையில் விதிமுறைகளை மீறி சிலிண்டர் எடுத்துச் சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இனி வரும் காலங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே துறை உரிய கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

விடுதலைப் போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நினைவு தினம் இன்று. முதலமைச்சராக இருந்த காலத்தில் தேவதாசி ஒழிப்பு சட்டம், கோவில் நுழைவு சட்டம், ஜமீன் இனாம்தாரி ஒழிப்பு சட்டம், பூரண மதுவிலக்கு உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தி சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார். பல தொண்டு அமைப்புகளை நிறுவி தனது இறுதிக்காலம் வரை சமூக சேவகராகவும் எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக்காரராகவும் வாழ்ந்து மறைந்த ஓமந்தூராரின் நினைவு நாளில் அவரது சமூக பங்களிப்பை போற்றி வணங்கிடுவோம்.

69வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தமிழில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள கடைசி விவசாயி திரைப்பட குழுவினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் “இரவின் நிழல்” படத்தின் மூலம் சிறந்த பின்னணிப் பாடகி விருதை பெற்றுள்ள ஷ்ரேயா கோஷல், “கருவறை” ஆவணப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றுள்ள ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வாகியுள்ள “சிற்பங்களின் சிற்பங்கள்” படக் குழுவினர் உட்பட தேசிய விருதுகளை பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அஜர்பைஜானில் நடைபெற்று வரும் ஃபிடே சதுரங்க உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, இறுதிவரை போராடி நார்வே வீரர் கார்ல்சனிடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். சதுரங்க உலகக் கோப்பை தொடர் வரலாற்றிலேயே முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற்றிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்று உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா. இந்தியாவில் இருந்து மட்டும் 80க்கும் மேற்பட்ட கிராண்ட் மாஸ்டர்கள் உருவெடுத்திருந்தாலும் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு தனது 18 வயதிலேயே உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை சென்ற பிரக்ஞானந்தாவின் முயற்சிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதோடு படகில் வைத்திருந்த பொருட்களையும் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலுக்கு தற்போது வரை தீர்வு எட்டப்படாத நிலையில், தற்போது கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் மீதான ஒவ்வொரு தாக்குதலின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிந்து விட்டதாக கருதாமல் உரிய அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிகை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சந்திராயன்-3 விண்கலம் தொடர்பான செய்தி சேகரிக்க திருவனந்தபுரம் சென்று நெல்லைக்கு திரும்பும் வழியில் நாங்குநேரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்த செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நாகராஜன் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் வள்ளிநாயகம், நாராயணன் ஆகியோர் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.