பயன்பாட்டிற்கு வந்த பதினெட்டே நாட்களில் பழுதடைந்த இலங்கைத் தமிழர் குடியிருப்பு – தரமற்ற குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் மற்றும் சின்னப்பள்ளிக் குப்பத்தில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளின் மேற்கூரை இடிந்து விழுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழர்களுக்காக வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசு கட்டித்தந்த 236 குடியிருப்புகளில் பல குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் அதில் வசிப்போரின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ரூ.12.42 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் வந்து திறந்துவைத்த அமைச்சர்கள், அந்த குடியிருப்புகளின் தரம் குறித்து முறையான ஆய்வு செய்யாதது ஏன்? எனவே, தரமற்ற குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்ததாரர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் கட்டப்படும் அனைத்து குடியிருப்புகளின் தரத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என முழங்கி தமிழ் சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் பெறச் செய்த பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. சாதி வேற்றுமையை அகற்றுவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடி தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக இன்றளவும் திகழ்ந்து கொண்டிருக்கும் தந்தை பெரியார் அவர்கள் வகுத்து கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணித்திட அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

அரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி – சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுப்பதே ஒரே தீர்வாக அமையும். அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற மணல் கடத்தலை தடுக்க முற்பட்ட காவலர்கள் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளை தொடர்பான பொதுமக்களின் புகார்களை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே, மணல் கொள்ளையை தடுக்க முயலும் காவலர்களையே கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ திரு.லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, சிவகங்கை, அரியலூர் என பல்வேறு மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, காவலர்களை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, இனிவரும் காலங்களில் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்து அவமானப்படுத்தியிருக்கும் இலங்கை அரசின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது – இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். இராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை உரிய காலத்திற்குள் செலுத்தவில்லை எனக்கூறி மொட்டையடித்து, கைதிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளை கழுவுமாறு நிர்பந்தித்திருக்கும் இலங்கை சிறைத்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்காததன் விளைவே தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்தும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக மீனவர்களை மனிதநேயமற்ற முறையில் கொடுமைப் படுத்தியிருக்கும் இலங்கை கடற்படைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, இனிவரும் காலங்களில் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலின்றி தமிழக மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அரசியல்வாதியாக, பொருளாதார நிபுணராக, எழுத்தாளராக பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்த திரு.சீதாராம் யெச்சூரி அவர்களை இழந்துவாடும் உறவினர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பணிநிரந்தரம் கோரி 13 ஆண்டுகளாக போராடி வரும் பகுதிநேர ஆசிரியர்களை அலைக்கழிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – தேர்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ”பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றிவரும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற திமுகவின் 181வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நூற்றுக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2012 ஆம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்ட தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு கடந்த மூன்றாண்டுகளாக நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி ஆசிரியர்களை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதையும், ஆட்சிக்கு வந்த பின்பு அதை நிறைவேற்ற மறுப்பதையுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுக அரசால் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருமே வீதிக்கு வந்து போராடும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. எனவே, குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கையான பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.