October 29, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார் – தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை எழுதியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில், பணி நியமன உத்தரவுக்காக 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 150 பேர் பணம் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அத்தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது. எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றிருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
October 27, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய விடுதலைக்கான முதல் போரை மக்கள் பங்களிப்போடு முன்னெடுத்த மாமன்னர்களும், சிவகங்கை சீமையை மீட்டெடுக்க வீரமங்கை வேலுநாச்சியாருக்கு உறுதுணையாக இருந்த விசுவாசமிக்க போர்ப்படைத் தளபதிகளுமான மாவீரர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை இன்று. தென்னிந்தியாவில் தங்களை எதிர்க்க யாருமில்லை எனக் கொக்கரித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்த சிவகங்கை சீமையின் வேங்கைகளான மருது பாண்டியர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
October 26, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பெரும்பாக்கம் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கியிருப்பதாகப் புகார் – விரிவான விசாரணை மேற்கொண்டு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
October 25, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025ல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய கபடி அணியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவைச் சேர்ந்த அனைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய கபடி அணியின் ஆண்கள் பிரிவில் திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்த வீரர் அபினேஷ் அவர்களும், மகளிர் பிரிவில் சென்னை அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகா அவர்களும் இடம்பெற்றிருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த தாய்நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் இந்தியக் கபடி அணியின் வீரர் மற்றும் வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
October 24, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் தாய் நாட்டிலிருந்து அடியோடு விரட்டியடிக்க மக்களை ஒன்று திரட்டி புரட்சிக்கு அடித்தளமிட்டவர்களும், சிவகங்கையை ஆட்சி செய்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் விசுவாசமிக்க போர்ப்படை தளபதிகளாகவும் விளங்கிய மாவீரர்கள் மருது பாண்டியர்களின் நினைவு தினமான இன்று, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
October 24, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போரில் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுக்கு உறுதுணையாக இருந்தவரும், சிவகங்கை பாகனேரியை திறம்பட ஆட்சி செய்த மன்னருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயப் படைகளின் அடக்குமுறைக்குத் துளியளவும் அஞ்சாமல், தீரத்துடன் எதிர்த்து நின்று இறுதிவரை போரிட்டதோடு, தாய் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் மகத்தான பங்களிப்பை வழங்கிய தென்பாண்டிச் சிங்கம் வாளுக்கு வேலி அம்பலத்தின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
October 24, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் தாய் நாட்டிலிருந்து அடியோடு விரட்டியடிக்க மக்களை ஒன்று திரட்டி புரட்சிக்கு அடித்தளமிட்டவர்களும், சிவகங்கையை ஆட்சி செய்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் விசுவாசமிக்க போர்ப்படை தளபதிகளாகவும் விளங்கிய மாவீரர்கள் மருது பாண்டியர்களின் நினைவுதினம் இன்று. மக்களோடு, மக்களாக வாழ்ந்து மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஆட்சியை வழங்கியதோடு, தாய் மண்ணையும், நாட்டு மக்களையும் காத்திட தங்களின் இறுதி மூச்சு வரை போராடி ஆங்கிலேயப் படைகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
October 23, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்சாகுபடியை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் – காவிரி டெல்டா பகுதிகளில் தேக்கமடைந்திருக்கும் நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி நெல் அதிகளவில் விளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல் சாகுபடி மட்டுமல்லாது, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் என பல லட்சக்கணக்கான ஏக்கர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட நெல் உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கு ஏற்ற வகையில், நெல்லை முழுமையாக கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்யத் தவறியதே, பல லட்சம் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாக முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இரவு, பகலாக அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மணிகள் அனைத்தும் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியிருப்பதோடு, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் மழைநீரில் முழுமையாக மூழ்கியிருப்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, நெல் மூட்டைகள் தேக்கமடைந்திருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யும் பணியை தொடங்குவதோடு, விளைநிலங்களிலேயே மழைநீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
October 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – உச்சநீதிமன்றத்தில் உரிய அதாரங்களுடன் வலுவான வாதங்களை முன்வைத்து கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேரள அரசின் உதவியுடன் கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற பொதுநல அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கலாம் என்பதோடு புதிய அணைகட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயலாம் என கருத்து தெரிவித்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்ற பிடிவாதப் போக்கில் செயல்பட்டு வரும் கேரள அரசும், அம்மாநிலத்தின் சில அமைப்புகளும் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. முல்லைப்பெரியாறு அணை வலுவோடும், உறுதித் தன்மையோடும் இருப்பதாக ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர்குழு தெரிவித்து வரும் நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து வழக்குகளை தொடர்வதோடு, பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் வதந்திகளையும் பரப்பி வரும் கேரளத்தின் சில அமைப்புகளின் செயல்பாடு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொடர் சட்டப் போராட்டத்தால் முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதோடு, பேபி அணை மற்றும் சுற்றிய பகுதிகளை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்ற பின்பும், முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்டி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் கேரள அரசின் செயல்பாடு விஷமத்தனமானது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதோடு, தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வலுவான வாதங்களை முன்வைத்து கேரள அரசின் முயற்சிக்கு சட்டரீதியாக முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
October 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடு முழுவதும் மக்களை பாதுகாக்கும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இன்னுயிர் நீத்த காவலர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், குடிமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதிலும், முன்னின்று தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த காவலர்களின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.