November 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய பாரா நீச்சல் போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 34 தங்கம், 40 வெள்ளி உட்பட 88 பதக்கங்களைக் குவித்திருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்ற அனைத்து பிரிவுகளிலும் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்திருக்கும் வீரர், வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
November 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை உயர்த்த மத்திய அரசு நிராகரித்திருப்பதாகத் தகவல் – தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பத அளவை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திட வேண்டும்.டெல்டா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழையைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பாண்டில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை முறையாகவும்,முழுமையாகவும் தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்ற புகார் எழுந்த நிலையிலும், கொள்முதல் நிலையங்களிலும் போதுமான இடவசதியின்றி திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் தொடர் மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் அளித்திருக்கும் பரிந்துரையின் படி நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவு அதிகரிக்கும் என நம்பியிருந்த தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு எடுத்திருப்பதாகக் கூறப்படும் இந்த முடிவு வேதனையுடன் கூடிய ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. எனவே, வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமடையும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், தமிழக விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
November 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பணிச்சுமையை அதிகரிப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்த வருவாய்த்துறை ஊழியர்கள் – பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பொதுமக்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பணிச்சுமை அதிகளவில் இருப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை வருவாய்த் துறை சங்கங்களும் முழுமையாக புறக்கணித்துள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, பல்வேறுகட்ட கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கைகையும் தமிழக அரசு மேற்கொள்ளாததே, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியிருப்பதாக ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதே போல, உரிய திட்டமிடல் மற்றும் போதிய பயிற்சியில்லாமல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் விடுமுறை தினத்தன்றும் கட்டாயப்படுத்தி ஈடுபட வைப்பதால் பணிச்சுமையோடு மன உளைச்சலும் அதிகரித்திருப்பதாக வருவாய்த் துறை ஊழியர்கள் தங்களின் வேதனையையும், ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர். கிராம உதவியாளர்கள் தொடங்கி, நிர்வாக அலுவலர்கள், ஆய்வாளர்கள், வாட்டாட்சியர்கள் வரை அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களும் தங்களின் பணிகளை புறக்கணித்திருக்கும் நிலையில், மறுபுறம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளோடு அரசின் சேவைகளை பொதுமக்கள் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி, அவர்களுடைய பணிச்சுமையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் – நீர்நிலைகளோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கும் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மா பாளையத்தில் சுமார் 800 கோடி ரூபாய் செலவில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா வளாகத்தில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாவட்டத்தின் வளர்ச்சியோடு, உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பும் பெருகும் என்பதால் ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தை வரவேற்ற அப்பகுதி மக்களுக்கு, தற்போது நடைபெற்றுவரும் ஆபத்து நிறைந்த சாயப்பட்டறை ஆலை அமைக்கும் பணி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நீர்நிலைகள் மட்டுமல்லாது நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாக பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், சேலத்தில் அமையும் இந்த சாயப்பட்டறை ஆலைகளால் அம்மாவட்டத்தின் ஒட்டுமொத்த நீர் ஆதாரமும் மாசடையக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டம் மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர்நிலைகள், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடும், நாட்டு மக்களும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதற்காக சுதேசியத்தைக் கட்டியெழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதருமான செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுதினம் இன்று. வழக்கறிஞராக, எழுத்தாளராக, தொழிற்சங்க தலைவராக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையையும், அவர்கள் கொண்டுவந்த கொடூரமான சட்டங்களையும் எதிர்த்து இறுதிவரை போராடி உயிர்நீத்த தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் பன்முக ஆற்றலையும் தியாக உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
November 17, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தெலுங்கானா மாநிலத்திலிருந்து மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் பயணித்த பேருந்து மதீனா நகரின் அருகே விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 42 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. புனிதப் பயணத்தின் போது ஏற்பட்ட எதிர்பாரா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
November 16, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஜனநாயகத்தின் நான்காம் தூணாக போற்றப்படும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு எனது மனமார்ந்த தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை மற்றும் நடுநிலைத்தன்மையை அடிப்படையாக கொண்டு ஜனநாயகத்தை கட்டிக்காப்பதில் பெரும்பங்கு ஆற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினரின் அரும்பெரும் பணிகள் மென்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
November 14, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மேகதாது அணை விவகாரத்தில் வேகம் காட்டும் கர்நாடக அரசு – தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சியை எந்த பாரபட்சமுமின்றி அனைத்து வகையிலும் தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு தயாரித்து சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் என மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராக செயல்பட்டு தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வஞ்சித்து வரும் நிலையில், தற்போது கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பின் மூலம் மேகதாது அணை விவகாரத்தில் அம்மாநில அரசு தன் பணிகளை மீண்டும் தீவிரப்படுத்தும் என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.ஏற்கனவே, காவிரியின் அடிமடைப்பகுதியில் பல அணைகளை கட்டியிருக்கும் கர்நாடக அரசு, தற்போது கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பை பயன்படுத்தி மேகதாது அணையை கட்டும் பணியை தீவிரப்படுத்தும் பட்சத்தில் கடைமடை பகுதியான தமிழகத்தின் விவசாயிகளுக்கு காவிரி நீர் என்பது காணல் நீராக மாறிவிடும் என்ற அபாயத்தை உருவாக்கியுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்வதோடு, வலுவான வாதங்களை முன்வைத்து, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசின் அணைகட்டும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 14, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அன்பின் வடிவமாக, மகிழ்ச்சியின் ஊற்றாக, கள்ளங்கபடமற்ற உள்ளங்களாக, எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் குழந்தைகளின் நலன், கல்வி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினம் இன்று. குழந்தைகளின் நல்வாழ்வுக்கும், சமச்சீரான வளர்ச்சிக்கும் இடையூறுகளாக இருக்கும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, அன்பு மற்றும் அரவணைப்போடு, அவர்களின் எதிர்காலம் சிறக்க அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
November 13, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தீபாவளி போனஸாக வழங்கிய தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்வதா ? தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு வழங்கிய போனஸ் தொகையை நடப்பு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துவிட்டதாகக் கூறி தூத்துக்குடி மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து போராட்டம் நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்க எதிர்ப்பு, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். சென்னை மாநகராட்சி தொடங்கி, கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்குவதும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாகி வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே,கோவிட் பெருந்தொற்று காலம் தொடங்கி மழை, வெள்ளம், புயல் என அத்துனை இயற்கை பேரிடர்களையும் எதிர்கொண்டு நகரத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், மக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பணியிலும் அயராது பாடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நீண்டகால கோரிக்கையான பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.