திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் – சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் மட்டும் நிலவும் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், சுமார் 500க்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதோடு மழலைக் குழந்தைகளின் ஆரம்பகால கல்வியும் ஊட்டச்சத்து தேவையும் கேள்விக்குறியாகியுள்ளது.சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப்பணியாளர்களாக பணியமர்த்துவதோடு, அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்கப்படும் என்ற திமுகவின் 313வது தேர்தல் வாக்குறுதி இனியும் நிறைவேறும் என்ற நம்பிக்கையை இழந்த சத்துணவுப் பணியாளர்கள் வேறுவழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு,நிர்வாகத் திறனின்றி காலிப்பணியிடங்களை நிரப்பாமல் கால தாமதம் ஏற்படுத்துவதோடு, ஏற்கனவே அரசின் பல்வேறு பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களைக் கூட பணிநிரந்தரம் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, சத்துணவுப் பணியாளர்களுக்குத் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்வதோடு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தேனி அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடி வந்த இயற்கை ஆர்வலர் படுகொலை – சட்டவிரோதச் செயல்கள் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு திமுக அரசு கொடுக்கும் சன்மானம் மரணம் தானா? தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமபாளையத்தில் கனிம வளக்கொள்ளைக்கு எதிராக போராடி வந்த இயற்கை ஆர்வலர் திரு.சசிக்குமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தேனி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளை குறித்து பலமுறை தகுந்த ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அலட்சியமே திரு.சசிக்குமார் அவர்களின் படுகொலைக்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது. மணல் கடத்தல் மற்றும் கனிமவளக் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு புகார் அளிப்பவர்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையோ, திமுக அரசின் முழுநேர ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால் தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் உயிர்பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. திமுக ஆட்சியில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தலையும், அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படும் கனிமவளங்களையும் தடுத்து நிறுத்தவோ, அது குறித்து புகார் அளித்தாலோ அதற்கான சன்மானம் மரணம் தான் என்பதையே அடுத்தடுத்து நடைபெறும் படுகொலைச் சம்பவங்கள் உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இயற்கை ஆர்வலர் திரு.சசிக்குமார் அவர்களின் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முழுமுதற் கடவுளாம் விநாயகரை வணங்கி தொடங்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் தங்குதடையில்லாத வெற்றி நிச்சயம் என்பதோடு, துன்பங்களுக்குக் காரணமான வினைகள் நீங்கி, அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்க்கை அமையும் என்பது மக்கள் அனைவரின் ஏகோபித்த நம்பிக்கை ஆகும். வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானை போற்றி வணங்கிடும் இந்நாளில் அனைத்து மக்களின் சோதனைகளும், துன்பங்களும், துயரங்களும் அடியோடு நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

2025 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.முதுநிலை தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ரேவதி ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் மாபெரும் பணியில் கடமை உணர்வுடன் ஈடுபட்டு தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் ஆசிரியர்கள் இருவரும் தங்களது கல்விப் பணியை மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய திரு.பாரிவேந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எளிமையான குடும்பத்தில் பிறந்து ஆசிரியராக தன்வாழ்க்கையை தொடங்கி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வியை உலகத்தரத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் திரு. பாரிவேந்தர் அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் நலத்தோடும் தனது கல்விப் பணியையும், சமூகப் பணியையும் தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 10 ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.தளராத தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும், தாய்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் இந்தியாவின் தங்கமகள் இளவேனில் வாலறிவன் அவர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

சென்னை கண்ணகி நகர் அருகே மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு. சென்னை கண்ணகி நகர் பகுதியில் இன்று காலை தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. கண்ணகி நகர் மட்டுமல்ல எழில்நகர், பெரும்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் சேதமடைந்திருக்கும் மின்சாரக் கம்பிகள் குறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே தூய்மைப் பணியாளர் உயிரிழக்க முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தூய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பு என்ற கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி போராட்டத்தை கலைத்த திமுக அரசு, தற்போது தன் நிர்வாக அலட்சியத்தால் பறிபோன இந்த உயிருக்கு என்ன பதில் சொல்ல காத்திருக்கிறது? மேலும், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மட்டுமே தீர்வாகாது என்பதை உணர்ந்து, மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் சேதமடைந்து அபாயகரமான நிலையில் இருக்கும் மின் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மின்வாரியத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.