திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பலால் இருவர் கொடூரமான முறையில் படுகொலை – இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் தொடர் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று கற்களை வீசி இருவரை கொடூரமான முறையில் கொலை செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அதோடு, திருத்தணி அருகே இருளர்கள் வசித்துவந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மற்றொரு கஞ்சா போதையில் இருந்த கும்பல், அங்கிருந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் நினைத்துப் பார்க்கும் போதே மனதை உலுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கத் தவறிவிட்டதோடு, போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என விளம்பர வீடியோ வெளியிட்டதன் மூலம் தனது கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால், இளைய சமுதாயத்தின் எதிர்காலம் பாழாகிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தால் தமிழகத்தில் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ முற்றிலும் செயலிழந்திருப்பதால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. எனவே, திருவள்ளூர் மற்றும் திருத்தணி குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு தடுத்திட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்

செங்கல்பட்டு அருகே அமையவிருக்கும் புதிய நீர்த்தேக்கத்திற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு – புதிய நீர்த்தேக்கத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் முன்பே அவசரகதியில் அடிக்கல் நாட்டுவது ஏன் ? செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் அமைந்துள்ள கோவளம் உப வடிநிலப் பகுதியில் மாமல்லன் எனும் பெயரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையின் புறநகர் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நிலமான உப்பங்கழி நீர்நிலையில் அமையவிருக்கும் இந்த புதிய நீர்த்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித் தொழிலோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என அதனை சுற்றியுள்ள 10க்கும் அதிகமான மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தன்மையை அறிந்து கொள்ள உதவும் நீரியல் ஆய்வுகள், நீண்டகால நிலைத்தன்மை, நிலத்தடி நீரின் போக்கு என எந்தவித ஆய்வுகளையும் முறையாக மேற்கொள்ளாமலும், அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்காமலும் அவசரகதியில் இத்திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நீரியல் வல்லுநர்களும் எழுப்பியுள்ளனர். எனவே, காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கும் உப்பங்கழிப் பகுதியின் தன்மையை முற்றிலுமாக மாற்றி புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதோடு, இதுபோன்ற திட்டங்கள் தொடங்கும் போது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் விஷம் அருந்திய பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு – தேர்தல் வாக்குறுதி எண் 181ஐ நிறைவேற்றத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது. பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் விஷம் அருந்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 181வதாக இடம்பெற்றிருந்த பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு அரசு செவி சாய்க்காததன் விளைவே ஆசிரியர் ஒருவரின் உயிர் பறிபோயிருப்பதாக சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாழ்வாதார பிரச்னைகளுக்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மண்டபங்களில் அடைத்து வைப்பதும், அவர்களின் நீண்டகால போராட்டத்திற்கான தீர்வை ஒருபோதும் ஏற்படுத்தாது. எனவே, உயிரிழந்த திரு. கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, பணிநிரந்தரம் என்ற பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. உலகம் பல தொழில்களைச் செய்து சுழன்றாலும், உழவுத் தொழிலே சிறந்தது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, உலகத் தொழில் அனைத்திற்கும் அச்சாணியாகத் திகழும் உழவுத் தொழிலையும், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் உழவர் பெருமக்களின் நலனையும் பேணிக்காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விலும் வளமும், நலமும், பெருகி அமைதியும், இன்பமும் நிலைக்கட்டும் என மனதார வாழ்த்தி மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள்: சென்னையில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்! பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனி; நாடு நலம் பெற நல்ல பல திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்திய தலைசிறந்த ஆளுமை; ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல்; தமிழக மக்களின் மனங்களில் என்றென்றும் நிறைந்திருக்கும் பொன்மனச்செம்மல் பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109 வது பிறந்தநாள் வரும் 17.01.2026, சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 10.00 மணி அளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் மாநில, மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

பொங்கல் திருநாளையொட்டி பன்மடங்கு உயர்ந்திருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தால் பயணிகள் பாதிப்பு – ஆண்டுதவறாமல் தொடரும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த தவறிய போக்குவரத்துத்துறையின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாட சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பலர் அவரவர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் நிலையில், பன்மடங்கு அதிகரித்திருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் 700 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாகவும், கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும், நெல்லைக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 1400 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாகவும் உயர்ந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பொங்கல் திருநாள் மட்டுமல்ல ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் திட்டமிட்டு பன்மடங்கு உயர்த்தப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் கண்டுகொள்ளாத போக்குவரத்துத் துறையால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதோடு, சிலர் தங்களின் பயணங்களை ரத்து செய்யும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டையில் இறங்கியிருக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் நாட்களில் இதுபோன்ற கட்டணக் கொள்ளை நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி என புகார் –அறிவித்த பொங்கல் சிறப்புத் தொகுப்பு அனைவருக்கும் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். திருவள்ளூர், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பொருட்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு முழுமையாக விநியோகம் செய்யப்படாததே, நியாய விலைக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு, டோக்கன் வழங்குவதில் குளறுபடி, ஊழியர்கள் பற்றாக்குறை, கைரேகை சரி பார்க்கும் இயந்திரத்தில் பழுது என நியாய விலைக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளால், குடும்ப அட்டை தாரர்கள் பொங்கல் பரிசை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதோடு, பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் அறிவிக்கப்பட்ட 3 ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் சிறப்புத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருட்களும் முழுமையாக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி சரமாரி வெட்டி படுகொலை சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியைப் பார்க்க வந்த ரவுடி ஒருவர், மருத்துவமனைக்குள்ளாகவே அடையாளம் தெரியாத கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளாகவே நடைபெற்றிருக்கும் இக்கொடூரச் சம்பவம் அங்கு வரும் நோயாளிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை, அலட்சியப் போக்குடன் செயல்படுவதே, தற்போது அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்யும் அளவிற்கான அசாதாரண சூழலைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. எனவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து படுகொலை செய்த கும்பலைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி, அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.