உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய இளம் வீராங்கனை செல்வி வைஷாலி ரமேஷ் பாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் (Candidates ) தொடருக்கு தேர்வாகியுள்ள கிராண்ட் மாஸ்டர் செல்வி வைஷாலி ரமேஷ்பாபு அவர்கள் மென்மேலும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட இந்நேரத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

சுதந்திர போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான திரு எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்பு செலுத்தியதோடு, சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் இருந்து விளிம்பு நிலை மக்களுக்காக தொண்டாற்றிய திரு எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் அரும்பெரும்பணிகளை போற்றி வணங்கிடுவோம்.

தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், மக்கள் நல அரசுக்கும், மனிதநேயத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய ஆளுமை, தமிழ் வளர்ச்சி, சமூக நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின்முகவரியாகத் திகழ்ந்த தென்னாட்டின் பெர்னாட்ஷா பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த தினம் இன்று.நாடக ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் பத்திரிகையாளராக தன் ஈடு இணையற்ற எழுத்தாலும், உணர்ச்சி பொங்கும் பேச்சாலும் மக்கள் மத்தியில் புத்துணர்வை ஊட்டி, மனித சமுதாயத்தின் ஒப்புயர்வற்ற வழிகாட்டியாகத் திகழ்ந்த தனிப்பெரும் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

தலைமைக் கழக அறிவிப்பு: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா: சென்னையில் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்! அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, பகுத்தறிவை அனைவரின் உள்ளங்களிலும் புகுத்திய ஆளுமையாக, தமிழ்ச் சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் பெறச்செய்த ஒப்புயர்வற்ற தலைவர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா வருகின்ற 17.09.2025, புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, வட்ட, செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

துவரம்பருப்பு கொள்முதலில் குஜராத்திற்கு ஒரு விலை தமிழகத்திற்கு ஒரு விலையா? – குறைவான விலையில் தரமான பருப்பு கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். நியாய விலைக்கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளியில் தமிழகத்திற்குத் துவரம்பருப்பு கிலோ ஒன்று ரூ88.50க்கு வழங்க முன்வந்திருக்கும் பருப்பு நிறுவனங்கள் குஜராத்திற்கு ரூ.81க்கு வழங்குவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. குஜராத் மாநிலத்திற்கு ரூ.81க்கு துவரம் பருப்பை வழங்கும் நிறுவனங்கள் தமிழகத்திற்கு மட்டும் அதே துவரம்பருப்பை அதைவிட கிலோ ஒன்றுக்கு ரூ.7.50 கூடுதலாக வைத்து ரூ.88.50க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.60 ஆயிரம் டன் அளவிற்கான துவரம்பருப்பைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பருப்பு நிறுவனங்கள் கூறியிருக்கும் தொகைக்குப் பருப்பைக் கொள்முதல் செய்தால் தமிழக அரசுக்கு சுமார் 45 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பருப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி குஜராத் மாநிலத்திற்கு வழங்கும் அதே விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, தரமான துவரம்பருப்பைக் கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.