அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் மூடப்படும் தமிழ்த்துறைகள் – தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டை உலகறிய உதவும் தமிழ்த்துறைகள் தடையின்றி செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஐதராபாத், உஸ்மானியா, பெங்களூரு, மைசூரு மற்றும் மும்பை பல்கலைக்கழகங்களில் இயங்கிவரும் தமிழ்த்துறைக்கான பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தினால் அத்துறையை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி குறித்து ஆய்வு செய்ய முடியாத சூழல் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, பஞ்சாப், லக்னோ, அலகாபாத், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகள் அடுத்தடுத்து மூடப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை காரணமாக கொண்டு தமிழ்த்துறைகள் மூடப்படுவது தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாகவும், தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகவும் திகழும் தமிழ் மொழியின் தொன்மை, பண்பாடு, நாகரீகத்தை உலகறியச் செய்யவும், தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் வாழ்வியலையும் வெளிக்கொண்டுவரும் நோக்கத்தில் அண்டைமாநில பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட்ட தமிழ்த்துறைகள் மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமானதாகும். எனவே, நம் இனத்தின் அடையாளமான தனித்துவமிக்க தமிழ் மொழியை பாதுகாக்கும் நோக்கில், அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் தமிழ்த்துறைகளுக்கு தேவையான பேராசிரியர்களை நியமித்து, அத்துறைகள் தடையின்றி செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

வெளிச்சந்தையில் தொழிற்துறையினர் வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு 34 காசுகள் கூடுதலாக வசூலிக்கும் மின்வாரியத்தின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது – மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரை முற்றிலுமாக முடக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழகத்தில் உயரழுத்த மின்பிரிவில் இடம்பெறும் நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ஏற்கனவே வசூலிக்கப்படும் 1.96 ரூபாயுடன் கூடுதலாக 34 காசுகள் வசூலிக்க மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய தனியார் நிறுவனங்களிடமிருந்தும், வெளிச்சந்தையில் இருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் மின்சார வாரியம், உயர் அழுத்த மின் நுகர்வோர் தங்களின் தேவைக்காக வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிப்பது எந்தவகையில் நியாயம் ? என தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு (221), மின்சார நிலைக் கட்டணம் ரத்து (222), உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, தன் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் மீதான விரோதப் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் கடும் இன்னல்களுக்குள்ளாகி பல சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு, தொழில் நிறுவனங்கள் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முடிவு தொழில்துறையை முற்றிலுமாக முடக்கக்கூடிய செயலாகும். எனவே, மின்சாரச் சந்தையில் தொழில்துறையினர் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, குளறுபடிகள், ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் நிறைந்திருக்கும் மின்வாரியத்தை மறுசீரமைத்து வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் கலைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது – ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு அச்சங்கம் தொடர்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சுனாமி எனும் ஆழிப்பேரலையில் சிக்கி தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 13 மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்காக இயங்கி வரும் தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை எந்தவித முன்னறிவிப்புமின்றி தமிழக அரசு கலைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுய உதவிக்குழுக்களை அமைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் தொழிற்கடன் வழங்குதல் என பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து வந்த தமிழ்நாடு நிலைத்த வாழ்வாதார சங்கம் திடீரென கலைக்கப்பட்டிருப்பதால், அதில் பணியாற்றி வந்த 50க்கும் அதிகமான பணியாளர்களுடன் சேர்த்து ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. சுனாமி பேரலை தாக்கி ஆண்டுகள் பல கடந்தாலும், அதனால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மீள முடியாத சூழலில், தங்களின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வந்த சங்கம், அரசின் கொள்கை முடிவு எனக்கூறி கலைக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, 13 கடலோர மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக தொடங்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை தொடர அனுமதித்து, அத்திட்டத்தில் பணிபுரிந்த 50க்கும் அதிகமான ஒருங்கிணைப்பாளர்களோடு சேர்த்து ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ் மொழி மற்றும் தமிழக மக்களின் மீது அளவில்லா பற்று கொண்டவரும், தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய புரட்சிக்கு அடித்தளமிட்டு தினத்தந்தி நாளிதழை தொடங்கியவருமான தமிழர் தந்தை சி.ப.ஆதித்தனார் அவர்களின் நினைவுதினம் இன்று. பத்திரிகையாளராக மட்டுமல்லாது சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, சட்டப்பேரவைத் தலைவராக சமூகப்பணியாற்றி தமிழக மக்களின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தமிழ் இதழியலில் முன்னோடி சி.பா.ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய மக்கள் நலப்பணிகளை எந்நாளும் நினைவில் ஏந்தி அஞ்சலி செலுத்துவோம்.

தலைமைக் கழக செய்தி வெளியீடு : தமிழுக்கும் தமிழறிஞர்களுக்கும் புகழ்சேர்த்த பேரரசர், எதிர்கொண்ட அனைத்து போர்களிலும் தோல்வியே கண்டிராத மாவீரர், ஆளுமைக்கும், வீரத்திற்கும் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருச்சி ஒத்தக்கடை அருகே அமைந்துள்ள மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறி அதனை தகர்க்க முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – புதிய அணையை கட்டி தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். முல்லைப்பெரியாறு அணைக்கு கீழே ரூ.1000 கோடி மதிப்பில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் வரும் 28 ஆம் தேதி பரிசீலிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அதாவது திமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கேரளா மாநிலத்தில் நடைபெறும் ஒவ்வொரு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்ற அம்மாநிலத்தின் பிடிவாதப்போக்கு அறிவிப்பை மெத்தனப் போக்கில் எதிர்கொண்டதன் விளைவாக தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலே சுற்றுச்சூழல் அனுமதி கோரும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் மத்தியக் குழு உறுதி செய்திருக்கும் நிலையில், அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கூறி புதிய அணை கட்டுவதோடு, ஏற்கனவே உள்ள அணையை தகர்க்க முயற்சிக்கும் கேரள அரசால் தேனி,மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேரள அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் கூட பதிவு செய்ய மறுக்கும் திமுக அரசாங்கத்தால், தொடர் சட்டப்போராட்டம் நடத்தி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி இதயதெய்வம் அம்மா அவர்களால் நிலைநாட்டப்பட்ட மாநில உரிமையும் பறிபோகும் சூழல் உருவாகியிருப்பதாக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கூட்டணி தர்மத்தை விட மக்களின் நலனும், மாநில உரிமையையுமே முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, கேரள அரசின் புதிய அணைகட்டும் முயற்சியை ஆரம்பநிலையிலேயே தடுத்து நிறுத்தி தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு மாநில உரிமையையும் நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழுக்கும் தமிழறிஞர்களுக்கும் புகழ்சேர்த்த பேரரசர், எதிர்கொண்ட அனைத்து போர்களிலும் தோல்வியே கண்டிராத மாவீரர், ஆளுமைக்கும், வீரத்திற்கும் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று… வெற்றி பெற்றதற்கு பின்னர் சூட வேண்டிய வாகைப்பூவை, போருக்கு புறப்படும் போதே சூடிச்சென்று போர்க்களத்தில் எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்த தன்னிகரில்லா மாவீரர் தஞ்சைக் கோன் பெரும்பிடுகு முத்திரையரின் புகழையும், பெருமையையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம்.

முதலமைச்சரின் அறிவிப்பை நிறைவேற்றத் தவறிய காவல் மற்றும் போக்குவரத்துத்துறையின் மெத்தனப்போக்கை மறைக்க பேருந்தில் பயணம் செய்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது கடும் கண்டனத்திற்குரியது – திமுக தேர்தல் அறிக்கையைப் போலவே மூன்றாண்டு கடந்தும் இதுவரை நடைமுறைப்படுத்தாத சட்டமன்ற அறிவிப்புகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு புறநகர் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நாங்குநேரியைச் சேர்ந்த காவலர் ஒருவர் மீது துறை சார்ந்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2021-2022 ஆம் ஆண்டின் காவல்துறை மீதான மானியக்கோரிக்கையின் முடிவில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளில் 20வது அறிவிப்பாக இடம்பெற்ற காவலர் முதல் ஆய்வாளர் வரை கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு தற்போதுவரை அமலுக்கு வரவில்லை என்பதை தற்போதைய நிகழ்வு உறுதிபடுத்துகிறது. காவலர்களுக்கு கட்டணமில்லாப் பயணம் என்ற முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்த முன்வராத போக்குவரத்துத்துறை, தன் மெத்தனப் போக்கை மறைக்க வேலை ரீதியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் மீது துறைசார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரைப்பது முதலமைச்சர் அவர்களையே ஏமாற்றும் நடவடிக்கையாகும். காவலர்களுக்கு வாரவிடுப்பு, புதிய பேருந்துகள் கொள்முதல், குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஸ்மார்ட்கார்டு, அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானங்கள் என பல்வேறு துறைகளின் மூலம் சட்டமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகள் திமுகவின் தேர்தல் அறிக்கையைப் போலவே செயல்பாட்டிற்கு வராமல் காகித அளவிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, காவலர் மீது துறைரீதியிலான நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பரிந்துரையை திரும்பப் பெற உத்தரவிடுவதோடு, திமுக ஆட்சிக்கு வந்தபின் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.