புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை அருந்திய ஏழு பேருக்கு உடல்நலக்குறைவு – மீண்டும் ஒரு கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பூரிகுடிசை எனும் கிராமத்தில் புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை அருந்தியவர்களில் 7 பேர் உடல்நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள்ளாகவே, புதுச்சேரி மலிவு விலை சாராயத்தை அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம் சாராய விற்பனையை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தமிழக அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே புதுச்சேரி சாராயத்தை அருந்தி உயிரிழந்ததாக வந்த செய்தியை மூடி மறைக்க முயன்ற திமுக அரசு, அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இன்று மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் திமுக அரசின் மக்கள் மீதான அக்கறையின்மையையும், காவல்துறையின் பொறுப்பற்றத் தன்மையையுமே வெளிப்படுத்துகின்றன. எனவே, இனியும் இது போன்று அலட்சியப் போக்குடன் செயல்படாமல் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் சாராயத்தை தடுக்க எல்லைக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களின் உயிரை காப்பதற்காக கட்டப்படும் அரசு மருத்துவமனைகளின் கட்டுமானப்பணிகள் தரமற்ற முறையிலும், உரிய கண்காணிப்பின்றியும் நடைபெறுவதே இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, அரசு மருத்துவமனைக்கான கட்டடப் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதோடு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மின்வாரிய ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது – மின்வாரிய அலுவலகங்களில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பணப்பயன்களை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வாரியத்தில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தினால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு, அடிக்கடி ஏற்படும் விபத்துகளின் மூலம் உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருவதாக மின்வாரிய ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் மின் தேவைக்காக இரவு, பகலாக பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுக்கும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வரும் நிலையில், மின்வாரிய ஊழியர்களின் மாநிலம் தழுவிய போராட்டத்தினால் பொதுமக்களுக்கு தேவையான மின்சார சேவை பாதிக்கப்படுவதோடு, மின்வாரிய அலுவலகங்களிலும் பணிகள் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மின்வாரிய ஊழியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை குறைக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது – அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையின் பணி நிரவல் தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பணி நிரவல் கலந்தாய்வு எனும் பெயரில் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலையிலான பணியிடங்களை குறைக்கும் முயற்சியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 250 முதல் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பணி நிரவல் எனும் பெயரில் 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் போதுமானது எனவும், 700 முதல் 1500 மாணவர்கள் வரையிலான மாணவர்கள் பயிலும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஒரு உடற்கல்வி இயக்குனர் பணியிடங்கள் போதுமானது எனவும் அறிவித்திருக்கும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடற்கல்வி ஆசிரியர்களின் பணியிடங்களை மேலும் குறைத்திருப்பது, அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் இளைஞர்களின் அரசுப்பணி கனவை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் பயிற்சிக் களமான உடற்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்திருக்கும் கோரிக்கைகளுக்கு முன்பின் முரணாக செயல்படும் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கை, உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கூடுதல் வேலைப்பளுவை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கவனச்சிதறலுக்கும் வழிவகுக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, பணி நிரவல் கலந்தாய்வு எனும் பெயரில் அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை குறைக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, அரசுப்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசையும், பள்ளிக்கல்வித்துறையையும் வலியுறுத்துகிறேன்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் வெட்டிப் படுகொலை – தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்கள், பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் முன்பாக கூலிப்படை கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் மாநில தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை கண்காணிக்கத் தவறிய உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்திருப்பதோடு, தமிழகத்தில் இது போன்று அடிக்கடி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெறும் கொலைச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. எனவே, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நியாய விலைக்கடைகளில் மூன்றாவது மாதமாக தொடரும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு – ஏழை, எளிய மக்களை அலைக்கழிக்கும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடும் தட்டுப்பாட்டால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கடந்த மே மற்றும் ஜூன் ஆகிய இரு மாதங்களில் வழங்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படாத நிலையில், நடப்பு மாதத்திலும் பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை வழங்காமல் குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது. நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது பொது விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதில் திமுக அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. நியாய விலைக்கடைகளில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, வழக்கம் போல இம்முறையும் ஏதாவது காரணத்தைக் கூறி காலம் தாழ்த்தாமல், தமிழகத்தில் இயங்கிவரும் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான  அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என  வலியுறுத்துகிறேன்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமானநிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வீடுகளில் கருப்புக் கொடி, கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம், பள்ளிகள் புறக்கணிப்பு, தொடர் உண்ணாவிரதம் என பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வரும் பரந்தூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க முன்வராத திமுக அரசு, அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. விளை நிலங்களையும், நீர் நிலைகளையும் காக்க போராடி வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல், புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது பரந்தூர் பகுதி விவசாய மக்களுக்கு திமுக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளையும், பொதுமக்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தங்களின் வாழ்வாதார உரிமைகளை காக்க போராடுபவர்களை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.