ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என ஒருபுறம் முழங்கிவிட்டு, மற்றொருபுறம் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்துவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலமாக அச்சடிக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலை சுமார் 40 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 390 ரூபாயாக இருந்த ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் 550 ரூபாயாக உயர்த்தப்பட்டதில் தொடங்கி, 790 ரூபாயாக இருந்த பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் 1,130 ரூபாய் என அனைத்து வகையான பாடப்புத்தகங்களின் விலையையும் திடீரென உயர்த்தியிருப்பது தனியார் பள்ளிகளின் நிர்வாகத்திற்கும், அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மேடைக்கு மேடை ஒருபுறம் முழங்கி வரும் நிலையில், மற்றொருபுறம் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களையும் மேலும் மேலும் சிரமத்திற்குள்ளாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? என மக்களே கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அதிகரிக்கும் வேலைவாய்ப்புத் திண்டாட்டம், தலைவர் இல்லாமல் இயங்கும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் நடத்தும் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகள் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களுக்கு உதவும் பாடப்புத்தகங்களின் விலையையும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களில் தொடங்கி அரசுப் பணி கனவில் இரவு, பகல் பாராமல் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் பாடப்புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

நாடுபோற்றும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படக் கூடிய தலைவர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்கள் குறித்து திமுக அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் தரக்குறைவான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த திமுக தலைவர் திரு. கருணாநிதி அவர்கள் குறித்து மறைந்த திரு. நாஞ்சில் மனோகரன் அவர்கள் எழுதிய “கருவின் குற்றம்” என்ற கவிதை குறித்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய “வனவாசம்” குறித்தும் இதயதெய்வம் அம்மா அவர்களின் தொண்டர்கள் பேச ஆரம்பித்தால் தா.மோ.அன்பரசன் போன்ற திமுகவினர்களில் ஒருவர் கூட வெளியில் தலைகாட்ட முடியாத சூழல் ஏற்படக்கூடும். எனவே, தமிழக மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்து மறைந்த தலைவர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் திமுகவினரை பேச விட்டு ரசிக்கும் கீழ்த்தரமான செயல்களை அடியோடு நிறுத்துவதோடு, இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுமாறு திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தென்மாவட்ட மக்களின் ஜீவாதாரமான முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தும் கேரளம் – சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை காரணம் காட்டி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் எம்.பி திரு. ஹிபி ஏடன் அவர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டுவதற்கான நடவடிக்கையை கேரள அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் அதே கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது ஒட்டுமொத்த கேரளமும் புதிய அணையை கட்டுவதில் உறுதியாக இருப்பதை தெளிவு படுத்துகிறது. முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதை அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் மத்தியக் குழுவும், உச்சநீதிமன்றமும் பலமுறை உறுதி செய்த பின்பும், அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்கி புதிய அணை கட்டும் முயற்சியில் பிடிவாதம் காட்டும் கேரளத்தின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள் நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தின் விளைவாக முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை இதுவரை செயல்படுத்த முன்வராத திமுக அரசால், தற்போது தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்ட மக்களின் ஜீவாதாராமாக திகழும் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளத்தின் முயற்சிக்கு தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்க மறுப்பதும், தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்ற 39 உறுப்பினர்கள் மாநில உரிமை பறிபோவதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதும் தென்மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, கூட்டணி தர்மத்தை விட மாநிலமும், மக்களின் நலனுமே முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தங்களை கொடுத்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்டும் கேரளத்தின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையால் கைது – தொடர்கதையாகி வரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 33 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்த பின்னரும் இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கு தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என ஒரு புறம் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலும், இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றொரு புறமும் தொடர்கதையாகி வருவது மீனவ சமுதாயத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதோடு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் மீட்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

செங்கல்பட்டு அருகே அரசுப்பள்ளி வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து – மாணவ, மாணவியர்களின் உயிரோடு விளையாடும் பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே, கட்டடத்தின் மேற்கூரையின் பூச்சு பெயர்ந்து விழுந்த விபத்தில் 5 மாணவிகள் உட்பட 6 பேர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட பின்னரும், பள்ளிக்கல்வித்துறை காட்டும் அலட்சியப் போக்கால் அடுத்தடுத்த விபத்துக்கள் ஏற்பட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மிகவும் பழமையான, பழுதடையும் நிலையில் உள்ள கட்டடங்களில் வகுப்பறைகளை நடத்தக் கூடாது என பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததே இந்த விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மாணவ, மாணவர்களின் பாதுகாப்பில் இனியும் அலட்சியம் காட்டாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உரிய ஆய்வை மேற்கொண்டு பழுதடையும் நிலையில் உள்ள கட்டடங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதோடு, தரமற்ற நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.