திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு என புகார் – அடியோடு சீரழிந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுப்பது எப்போது ? திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. இதே மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாததால் உயிரிழந்த தாயின் உடலை அவரது மகன் சுமார் 15 கி.மீ தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்ற அவலம் நடைபெற்ற நிலையில், தற்போது தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது அம்மருத்துவமனையின் அலட்சியப் போக்கு தொடர்வதையே வெளிக்காட்டுகிறது. அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்களை தட்டுப்பாட்டை பலமுறை சுட்டிக் காட்டியும் அதனை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையே அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருவதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். எனவே, சிறுவன் உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே தங்கு தடையின்றி போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் – மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் போதைப் பொருட்களுக்கு அடியோடு முடிவு மறுக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் புகையிலை, போதை சாக்லெட் உள்ளிட்ட போதைப் பொருட்களால் ஏராளமான மாணவ, மாணவியர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை தொலைத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதனை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய திமுக அரசால், ஏற்கனவே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை கூட தடுக்க முடியவில்லை என்பது அரசு நிர்வாகத்தின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு சில்லறை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் உணவுப் பாதுகாப்புத்துறையும், காவல்துறையும், அத்துடன் அதனை கடந்து விடுவதும் மொத்த விற்பனையாளர்களை கண்டுகொள்ளாமல் விடுவதுமே கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது. பள்ளிக்குழந்தைகள் தன்னை அப்பா… அப்பா… என அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைவதாக பெருமிதமடையும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அக்குழந்தைகள் பயிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தங்குதடையின்றி நடைபெறும் போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க அப்பாவாக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் ? என மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மாணவ சமுதாயத்தை சீரழித்து வரும் போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை இனியாவது தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய டாஸ்மாக் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது – டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலமாக மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து அதன் மூலமாக கோடி கோடியாக வருமானம் ஈட்டும் திமுக அரசு, அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை கூட நிறைவேற்ற மறுத்து போராட்டத்தில் பங்கேற்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது அதன் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசுத்துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவரும் ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதனை நிறைவேற்ற மறுப்பது ஏன்? என போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், தங்களது குறைந்தபட்ச கோரிக்கைகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கம் தான் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் பணியாளர்களை காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.